(அருட்சகோதரி ம.கொன்சீலியா தி.க.)
ஐரோப்பாவின் 19 ம் நூற்றாண்டின் பின்புலம்
சாரல்ஸ் டிக்கன் என்னும் நூல் ஆசிரியரினால் ஏழுதப்பட்ட 'இரு நகர்களின் ஒரு
கதை" என்னும்நூலில் பிரான்சியப் புரட்சியின் காலப்பகுதியில் ஐரோப்பாவின்
குழப்ப நிலையை வெளிப்படுத்த இவ்வாறு விபரிக்கின்றார்.
'இக்காலம் மிகவும் உன்னதமான காலம் அதே தருணம் மிகவும் மோசமான காலம் ஞானம்
பொங்கி வழியும் காலம் மடமைத்தனம் கரைபுரண்டோடும் காலம்"( 1850 -1880)
பிரான்சியப் புரட்சியின் விளைவாக அந்நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள அண்டைய
நாடுகளிலும் சுவிற்சர்லாந்திலும் கூட மக்களின் சமூக ஒழுக்க பொருளாதார
அரசியல் ரீதியான வாழ்க்கையில் பல கஷ்டங்கள் நெருக்கடிகள் மாற்றங்கள்
ஏற்படத் தொடங்கியகாலம். இப்புரட்சியினால் கொழுந்துவிட்டெரிந்த பல
சோதனைகளால் வெளிச்சம்பெற்ற இக்காலம் படிப்படியாக தொழிற்புரட்சிக்கான
பாதைக்கு வழிகாட்டியது.
மக்கள் வாழ்வின் எல்லாநிலைகளிலும் இம்மாற்றங்கள் பல தாக்கங்களை உண்டாக்கின.
நகர தொழிற்சாலைகளை நோக்கிய கிராமிய மக்களின் இடப்பெயர்வுகளால் நகரங்களில்
சனநெருக்கம் அதிகமாகி சுகாதார சீர்கேடுகளும் ஆரோக்கியமற்ற வாழ்நிலை
சூழல்களும் உருவாகி குடும்பப் பிரிவுகளும் தனிக்குடும்ப சார்புகளும்
சமூகப்பிளவுகளும் அதிகரித்தன.
நான்கு, ஐந்து வயதில் பிள்ளைகள் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்
வேலைக்கு அனுப்பப்பட்டனர். ஏழு, எட்டு மணித்தியால உடல் உழைப்பினால்
சோர்ந்துபோகும் இக்குழந்தைகளின் உடல் உள அறிவு வளர்ச்சி
தரைமட்டமாக்கப்பட்டதுமல்லாது அவர்களின் அறநெறி ஒழுக்க விழுமியங்களும்
பூஜ்ஜியமாக்கப்பட்டன.
மனிதத்தன்மையற்ற தொழிற்கூட அமைப்புக்களில் வேலைசெய்த ஆயிரக்கணக்கான ஆண்,
பெண் சிறுவர்களின் இந்த மனித இழிநிலைச்சூழல் பல துறவற சபைத் தோன்றல்களின்
விளைநிலங்களாக காரணமாயின.
இவ்வாறான மனிதம் சேற்றில் புதைந்த மண்ணில் மலர்ந்த செந்தாமரைகளில் ஒன்றாக
திருச்சிலுவை கன்னியர் துறவற சபை மென்சிங்கன் சுவிற்சர்லாந்தில்
உருவாகியது.
இக்காலகட்டத்தில்தான் சுவிற்சர்லாந்தில் பிறந்த பிரான்சிஸ்கன் சபையைச்
சேர்ந்த அருட்பணியாளன் தியோடசியஸ் விளோறின்ரினி
தன்தூரநோக்குச்சிந்தனையினால் நாட்டில்நிலவிய முரண்பாடரன சீரழிந்த சமூக சமய
ஒழுக்க விழுமியங்களை மீளமைப்பு செய்து புதியஉலகை உருவாக்க மனஉறுதியும்
செயற்திறனும் ஆற்றலும் வாய்ந்த இளம்யுவதிகளை இனம்காணமுற்பட்டார்.
இம்முயற்சியின் பயனாக அனா மறியா கைம்காட்னர் என்னும் இளம்பெண்
அவர்கனவுக்கன்னியாக தோன்ற அவரின் தலைமையில் ஒர் கன்னியர் சபை உருவாக்கம்
பெற்றது.

சபையின் தோற்றம்
சுவிற்சர்லாந்தில்1834ஆம்ஆண்டில்ஆட்சியிலிருந்த புரட்டஸ்தாந்து சமயத்தைச்
சேர்ந்தவர்களால் திருச்சபைத் தேவாலயங்களை தேசிய மயமாக்க எடுக்கப்பட்ட
முனைப்பினால் துறவற சபையினரின் மடங்களும் கன்னியர் இல்லங்களும்
பாடசாலைகளும் மூடபப்பட்டன.
1840 ஆம் ஆண்டிலிருந்து 1844 ஆம் ஆண்டு வரையான காலம் இச்சபையின்
முதல்மூன்று இளம் முத்துக்களான பேணாடா கைம்காட்னர், வெலிசியான கிறேமர்,
கொர்னேலியா மேடர் என்பவர்களின் துறவற ஆன்மீக வாழ்வினதும் ஆசிரிய
பணிவாழ்வினதும் உருவாக்கல் காலமாக விளங்கியது. அருட்பணியாளர் தியோடசியுஸ்
வழிகாட்டலிலும் ஆதரவுடனும் இவர்கள் றிபாவலி என்னும் இடத்திலிருந்த
திருவருட் சபைக்கன்னியர்களின் உதவியுடன் தமது நவசந்நியாசத்தை மேற்கொண்டு
1844ஆம் ஆண்டு ஐப்பசிமாதம் 16ஆம்திகதி அன்று தம் முதல் அர்ப்பணத்தை
அல்ற்டோவ் கன்ரனைச்சேர்ந்த ஊர் என்ற இடத்திலிருந்த கப்புச்சியன்
தேவாலயத்தில் செய்தனர்.
இறைத்திருவுளம் வேறுவிதமாக அமைந்தது. அருட்பணியாளர் தியோடசியஸ் ஓயாது சமூக
மேம்பாட்டு பணிகளிலே காலத்தின்தேவைகளில் இறைசித்தத்தை இனம் காணல் என்ற
உன்னத கோட்பாட்டை தன்னகத்தே கொண்டு பலசவால்கள் ஊடாக புதிய கல்வி
முறைகளையும் சமூக நலத்திட்டங்களையும் உருவாக்கி கத்தோலிக்க மக்களையும்
மற்றவர்களையும் இதில் உள்வாங்கி பயனாளிகளாகச் செய்தார்.
இதனால் வெகுண்ட புரட்டஸ்தாந்து அரசியல்வாதிகள் இவரைக்கைது செய்ய பிடியாணை
பிறப்பித்தனர். இதன் காரணமாக நாடோடியான அவர் முதல் அர்ப்பணத்தில் இணைந்த
இம்மூன்று இளம் கன்னியர்களையும் ஊர்சாலையின் மௌன சபையில் இணையுமாறு
கேட்டுக்கொண்டார்.
ஆனால் தன் அர்ப்பணத்தின் நோக்கத்தி;ல் தளராத உறுதிகொண்ட பேணாடா சாவுக்கு
மத்தியில் வாழ்வு கொடு என்ற தணியாத தாகத்தோடு கைவிடப்பட்ட வறுமையில்வாடிய
புறக்கணிக்கப்பட்ட மக்கள் வாழ்வின் மத்தியில் இருந்து மாற்றங்ளை கொண்டுவர,
அவர்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்து மகிழ்விக்க தீர்மானம் எடுத்தாள்.
இவ்வுறுதியோடு மற்ற இருவரையும் இணைத்து பனியில் உறையவைக்கும்
குளிர்காலத்தில் மலைப்பிரதேசமான மென்சிங்கன் என்னும் கிராமத்தில் தம் முதல்
அடியை வைத்தனர். அங்கிருந்த தேவாலயத்தின் பங்குமனை இவர்களின்
முதற்புகலிடமானது.
பங்குக்குரவருடன் இணைந்து தமது தளப்பணிகளை திட்டமிட்டு செயற்படுத்தத்
தொடங்கினர். அருட்பணி தியோடசியஸ் இவர்களுக்கென வரைந்த சபை ஒழுங்குகளையும்
வழிமுறைகளையும் பின்பற்றி வாழ்ந்தனர். சகோதரி பேணாடாவிற்கு அருட்பணி
தியோடசியஸினால ;அவர்களின் அர்ப்பணநாளன்றே கொடுக்கப்பட்ட
சபைத்தலைமைத்துவத்தை மிக தாழ்ச்சியோடும் பொறுப்புணர்வோடும் ஏற்று
செயல்படமுன்வந்தார்கள்.
அதிகாரத்துடனான முரண்பாடுகள்
மறைந்த வாழ்வு நிலையிலிருந்து திருப்பிய வண.பிதா தியோடசியஸ் தனது
விருப்பம்போல் ஆசிரிய சகோதரிகளை அரசபாடசாலைகளில் இருந்து இடமாற்றம்
செய்தும் பலரை தொழிற்சாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் பணிபுரியவும்
நிர்பந்தித்தார். இதனால் தவறான புரிநதுணர்வும் ஏற்றுக்கொள்ளாமையும்
வெளிப்படத்தொடங்கின.
இவ்வழுத்தங்களினால்இருவருக்குமிடையிலான முரண்பாடுகள்வலுப்பெற்று
இச்சபையானது இரு வேறுசபைகளாக உருப்பெற்று ஆயரின் அனுமதியோடு
இயங்கத்தொடங்கின.
இத்தொடக்க காலகட்டத்தில் உருவாக்கம்கொடுத்தவனே உபத்திரவமாக மாற, பல
இன்னல்களை எதிர்புக்களை, ஏற்றுக்கொள்ளாமைகளை, இம்சைகளை,
பொருளாதாரநெருக்கீடுகளை, இழப்புக்களை உள அழுத்தங்களை, எதிர்கொண்டபோதும்
மனம்தளராது கொண்ட கொள்கையில் உறுதியாகவும் தன் அர்ப்பணவாழ்வுக்கு
உண்மையாகவும் தன்சகோதரிகளுக்கு அரணாகவும் வாழ, என்றும் கைவிடா இறை
பராமாரிப்பையே உறுதுணையாக்கி சிலுவையின் ஆன்மீகத்தை வாழ்ந்து அதனால்
அகிலத்தின் பல திசைகளிலும் திருச்சிலுவை கன்னியர் சபை தன் கிளை பரப்ப உந்து
சக்தியானாள் இந்த வீர மாது.
19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றில் பெண்களின் நிலை மிகமோசமான
கட்டத்தில இருந்தது. அவர்களால் எந்த சொத்துக்கும் உரிமையாளர்களாகவோ
வாக்குரிமை உடையவர்களாகவோ இருக்க முடியவில்லை. ஆரோக்கியமான சரியான
தீர்மானங்களை எடுக்க வல்லமையற்ற பலவீனமான ஆண்களால் ஆளப்படவேண்டிய ஒரு இனமாக
பெண்கள் கருதப்பட்டார்கள்.
இப்பின்னணியில் தனியொருத்தியாக சபை நிர்வாகத்தில் ஆணாதிக்க வல்லமை படைத்த
திருச்சபை சார்ந்த பல அதிகாரிகளின் தலையீடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய
நிலையிலும் யேசுவின் சிலுவையை இறுகப்பற்றி சயையின் வளர்ச்சியில்
இலட்சியத்தில் தளராது பல சவால்களை முறியடித்து பரமபிதாவின் சித்தத்தை
கண்டுணர்ந்து அதை நிறைவேற்றுவதிலேயே உறுதியாக வாழந்தவள்தான் அன்னை பேணாடா.
துன்ப அனுபவங்களினால் அவள்அணைத்து உள்வாங்கிய சிலுவையின் ஆன்மீகம்
அவளுக்கு பல கசப்பான பாத்திர பானங்களை பரிசளித்தது. இன்நிலையிலும்
யேசுவைப்போல அவற்றை பாமரமக்களின் விடுதலை நிலைக்காக அன்போடு பருகினாள்.
எதிராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்விமர்சனங்கள் அவமானப்பேச்சுகள் ஆணிகளாக
அவள்மென்மையான இதயத்தை இரத்தம் வடியசெய்தபோதும் சிலுவையின் அதிஉயர்
ஆன்மீகமான மன்னிப்பை தன்னை காயப்படுத்தியவர்களுக்கு பரிசாக வழங்கினாள்.
அவள்வாழ்வில் வேதனை முட்கள் நிரம்பிவழிந்தாலும் தன்னை
சுற்றியுள்ளவர்களுக்கு பிரான்சிஸ்கன் மகிழ்ச்சியைப் பரப்புவதில் ஆர்வமாக
வாழ்ந்தாள்.
என்றுமே தன்சபைச்சகோதரிகளின் நல்வாழ்வில் ஆன்மீக பலத்தில் பணித்தளங்களில் மிக கரிசனை உடையவளாக இருந்தாள்.
இத்தனைக்கும் மத்தியில் இறைவன் தன்பேரன்பின் அடையாளமாக தன்பாடுகளோடு இணைய இறுதியாக அளித்த பரிசுதான் அவளை ஆட்கொண்ட புற்றுநோய்.
1863ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம்திகதி தனது 41 வயதில் இறையோடு சங்கமமானாள் எம் சபை முதற்தலைவி பேணாடா கைம்காட்னர்.
21ஆம் நூற்றாண்டிலும் வாடாத மலரான ஸ்தாபகியின் ஆன்மசக்தி இன்றும் எம் மத்தியில்
மண்ணுக்குரிய அவர் உடல் இயற்கையுடன் கலந்து வருங்கால பயிர்களுக்கு உரமாக
மாறினாலும் அவர் ஆன்மீகம்,காலங்களையும் வெளிகளையும் கடந்து தம் சபையோடு
தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று உலகத்தின் பல திசைகளிலும் வாழும் திருச்சிலுவைக் கன்னியர்களால் எம்
உருவாக்கினரின் இறைபதம் எய்திய 150ஆவது வருட ஞாபகார்த்த தினம்
கொண்டாடப்படுகின்றது. அவளின் ஆன்மா எங்களோடு இருந்து எம்மை காலத்தின்
மாற்றங்களால் இனம்காணும் தேவைகளுக்கேற்ற புதிய சிந்தனை செயற்பாடுகளோடு
என்றும் மாறாத இறையரசின் மதிப்பீடுகளை தளமாக்கி வழிகாட்டுவதில்
பெருமைகொள்ளுகின்றோம்.
'என் சகோதரிகள் எப்பணிக்களத்திலும் வாழ்வதற்கு பொருத்தமான உருவாக்கம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்."
என்ற எம் சபை இயக்குனரின் வாஞ்சைப்படி யேசுவைப் பின்பற்றி இளம்துறவிகளாக
பல கன்னியர் தூரதேசங்களிலும் பல கண்டங்களிலும் தம் கால்பதித்து அச்சூழலின்
தேவைக்கேற்ப சமூக, மருத்துவ, கல்விப் பணிகளிலே தம்மை முழுமையாக
அர்ப்பணித்தார்கள். யேசுவின் சீடத்துவம் மடத்துக்காக அல்ல மக்களுக்காக
குழுமவாழ்வு குடியமர அல்ல கூடிப்பணிசெய்ய என்ற ஆன்மீக தத்துவத்தை
ஆயுதமாக்கி இன்று ஆபிரிக்கா, தெற்கு அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நான்கு
கண்டங்களிலும் பரவிப்பணிபுரிகின்றனர்.
திருச்சிலுவைக்கன்னியர் சபையின் ஆன்மிகத்தின் கருப்பொருளிலிருந்து வெளிப்படும் தத்துவங்கள்
(1) படைப்பின் எல்லா அம்சங்களிலும் இறையின்தரிசனம்
தற்போதைய புனித பாப்பரசர் பிரான்சிஸ் கூறுவது போல ' எல்லோரும் இறைவனின்
பிள்ளைகளே இதற்கு யாரும் விதிவிலக்கல்ல"
(2) தினம் தினம் மாறும் இந்த உலகிலே சபை உருவாக்கினரின் நோக்கங்களை யதார்த்த நிலைகளுக்கேற்ப செயற்படுத்தக்கூடிய ஆர்வமும் அர்ப்பணமும்.
(3) சாவிலும் பார்க்க இறை மீட்பின் பலம் வல்லமை வாய்ந்தது என்ற ஆழமான நம்பிக்கை.
(4) புதிய கேள்விகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் இடமளிக்கும் திறந்த மனத்திற்கான துணிவு.
(5) எம்மை சுற்றியுள்ள உலகை நாம் பார்க்கும் முறையில் தொடர்மனமாற்றம்.
(6) அறிவை மேம்படுத்தும் அர்ப்பணம் வெறும் தகமைச்சான்றுதல்களாக அன்றி சிந்திப்பதற்கும்செயற்படுவதற்குமே என்ற ஞானம்.
(7) துறவற அர்ப்பணத்தின் அர்த்தமான வாழ்க்கைக்கு புதியவழிகளை தேடல்.
எம் சபையின் இரு ஸ்தாபகர்கள் தம் மறைவின் முன் ஒன்றுபட்ட நிலையில் குறிப்பட்ட நோக்கங்கள் பின்வருமாறு,
'எங்கே என்சகோதரிகளுக்கான தேவை உள்ளதோ எங்கே அவர்களின் பிரசன்னம் அதிகமாக
எதிர்பார்க்கப்படுகின்றதோ அங்கே விசேஷமாக வறியோர்,கல்வி, பசியால்வாடுவோர்,
பெற்றோரை இழந்த அநாதைகள், நோயாளிகள் மத்தியில் வாழ அவர்களை அனுப்புவேன்.
அவர்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் சாட்சிகளாக தம் வாழ்வாலும் பணியாலும்
விளங்குவார்கள்."
இக்கூற்று 150 வருடங்களின் பின்னும் இன்றைய யதார்த்த நிலைக்கு உண்மையாக விளங்குகின்றது.
ஏன்வாழ்வின் இறுக்கமான காலகட்டத்தில் என்னைத் தொட்டு வலுக்கொடுத்த உருவாக்கின ஸ்தாபகி அன்னை பேணாடாவின் வார்த்தைகள்.
'படைப்புகளில் நம்மை படைத்தவரை காணல்"
'இறைவன் விரும்புவது எனது உண்மையான அர்ப்பணமே அதற்கான பயனின் வெளிப்பாடு அவருடையதே"
'உறுதியோடு நிலைநில் எந்த நல்ல செயலை செய்ய விரும்புகின்றாயோ அதைத் தொடங்கு இறைதுணையோடு அதை தொடர்ந்து செய்து முடிப்பதில் நிலைநில்"
0 Comments