ஜெனீவாவில் 26ம் திகதி இடம் பெற்ற ஐ.நா .
சபையின் சிறுபான்மையினர் தொடர்பான மாநாட்டில் 6வது அமர்வில் சிவில்
செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான சுஹூத் பஸ்லீம் வடமாகாண முஸ்லிம்கள் சார்பில்
உரையாற்றினார். அவ்வுரையின் பகுதி
தலைமை அம்மையீர்அவர்களே!
எனக்கு உரை நிகழ்த்தச் சந்தர்ப்பம்
அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது பெயர் சுஹூத் பஸ்லீம்
நான் 1990 ம் ஆண்டு இலங்கையின் வட மாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப்
புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மதச்சிறுபான்மையிலும் சிறுபான்மையான
முஸ்லீம் சமூகம் சார்பாகவே உரையாற்றிக் கொண்டிருக்கிருக்கின்றேன்.
குறித்த சமூகத்தின் மிகவும் இன்றியமையாத
அக்கறை கொள்ளக்கூடிய விடயங்களில் ஒன்று 51,52ஆம் இலக்கப் பரிந்துரைகள்
தொடர்பான பலவந்த வெளியேற்றத்தின் பாதிப்புகளாக உள்ளன.
1990ம் ஆண்டு 75000 இற்கும் மேற்பட்ட வட
மாகாணத்தின் முஸ்லீம்கள் அவர்களது சொந்த மாவட்டங்களிலிருந்து ஒரு குறுகிய
கால அவகாசத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக
வெளியேற்றப்பட்டார்கள். இலங்கையின் சுமார் 26 வருட இனப்பிரச்சினையில் பாரிய
ஒரு மனித உரிமை மீறலாக இதுவுள்ளதுடன், இவர்களுக்கான நீடித்த தீர்வும்
முரண்பாட்டிற்குப் பிந்திய பிரதான சவால்களில் ஒன்றாகவுள்ளது. பலவந்த
வெளியேற்றத்தினால் மனித உரிமை ரீதியாக இவர்கள் பாரிய இழப்புக்களைச்
சந்தித்துள்ளார்கள். போருக்குப் பிந்திய நிலையில் 2009ம் ஆண்டு உள்நாட்டில்
இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றமானது
சாத்தியமான நிலையில் வடமாகாண முஸ்லீம்களின் மீள் குடியேற்றமானது
தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அவர்களின் மீள் குடியேற்றமானது
இலங்கையின் வட பகுதியில் வாழும் இனங்களுக்கிடையில் மீள் நல்லிணக்கத்தை
ஏற்படுத்தும் அதேவேளை அவர்களுக்கான சமமான வளப்பகிர்வு, காணி, வீடமைப்பு,
தொழில் வாய்ப்புச் சந்தர்ப்பங்கள் என்பவற்றுடன் அவர்களது சகல உரிமைகளையும்
உறுதிப்படுத்துவதாகவே அமைய வேண்டும்.
அரசாங்கத்தின் வட மாகாணத்தைக்
கட்டியெழுப்புவதற்கான அபிருத்தி முன்னெடுப்புக்களை வரவேற்கும் அதேநேரம்,
வடமாகாண முஸ்லீம்களின் இடம்பெயர்வை முடிவிற்குக் கொண்டுவரும் நீடித்த
தீர்வானது ஒரு ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்றினூடாகவே பெறப்படக் கூடியதாகவுள்ளதை
வலியுறுத்துவதனுடன், இலங்கை அரசாங்கத்தால் அமையப் பெற்ற கற்றுக் கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் “ உள்நாட்டில்
இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கான மீள் குடியேற்றத்திற்கான நீடித்த தீர்வுகள்
ஒரு சீரிய அரச கொள்கை ஒன்றினூடாக அடையக் கூடியது என்ற பரிந்துரையை
ஆதரிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபை, அபிவிருத்தி
நிறுவனங்கள், புலம் பெயர்ந்து வாழும் முஸ்லீம்கள், முஸ்லீம் நிறுவனங்கள்
விஷேடமாக முஸ்லீம் நாடுகள் என்பன பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லீம்
சமூகத்தின் பிரச்சினைகளை ஆழமாக உணர்ந்து, அவர்களது மீள் குடியேற்ற
முன்னெடுப்புக்களுக்குப் பெறுமதியான பங்களிப்புக்களை வழங்க முன்வர வேண்டும்
என விரும்புகின்றோம்.
இறுதியாக இலங்கையில் இனரீதியான
சிந்தனைகளைத் தோற்கடித்து இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த
சர்வதேசத்தின் அர்த்தமுள்ள பங்களிப்பையும் வரவேற்கின்றோம்.

0 Comments