ஒருகாலத்தில் கிராமத்து சிறார்களினால் பெரிதும் விரும்பப்பட்ட
‘கள்ளன் – பொலிஸ் விளையாட்டு’ பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அது, கள்வர்களாக பாத்திரமேற்கும் சிறுவர்களை பொலிஸாக
பாத்திரமேற்கும் சிறுவன் தேடிப் பிடிப்பது பற்றியது. கள்வர்கள்
ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்தவுடன் “டுமீல்” அல்லது “சூட்டிங்”
என்ற வார்த்தையை பொலிஸ்கார சிறுவன் சத்தமிட்டுச் சொல்வதன் மூலம்
கள்வர்கள் தோற்கடிக்கப்படுவர். இதில் முதன்முதலாக அகப்படும்
கள்வன் அடுத்த ஆட்டத்தில் பொலிஸாக பாத்திரமேற்பான்.
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து கடந்த சில
தினங்களாக கிடைத்த செய்திகள் இந்த விளையாட்டை ஞாபகமூட்டினாலும்,
அங்கு நடப்பது விளையாட்டல்ல என்பதை உள்மனது சொல்லியது. அதேபோல் இவ்
விளையாட்டில் அங்கம் வகிக்கும் கதாபாத்திரங்களின் வகிபாகங்களில்
இருந்து நிந்தவூர் அசம்பாவிதத்துடன் தொடர்புபட்டவர்களின்
நடவடிக்கைகள் வெகுவாக மாறுபட்டவையாகவும் தெரிகின்றன.
நிந்தவூர் பிரதேசம் பொத்துவில் மட்டக்களப்பு ஏ3 நெடுஞ்சாலையில்
காரைதீவு தமிழ் பிரதேசம் மற்றும் ஒலுவில் முஸ்லிம் பிரதேசம்
ஆகியவற்றுக்கிடையில் அமைந்திருக்கின்ற ஒரு நிலப்பரப்பாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்த ஊரில் கோட்டை சற்றே
சரிந்திருந்தாலும் பிரதேச சபை மு.கா.வசமே இருக்கின்றது. 2
எம்.பி.க்களும் ஒரு மாகாண சபை உறுப்பினரும் இங்குள்ளனர்.
இவ்வூருக்கென தனியான பொலிஸ் பிரிவு இல்லை. இவ்வூரின் சிவில்
நிர்வாகத்தை கவனிக்கும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் சில கிலோமீற்றர்
தொலைவில் இருக்கின்றது. அதேபோல் 631 படையணி முகாம் இரு கிலோமீற்றர்
தொலைவில் காரைதீவில் இருக்கின்றது.
திகில் நிறைந்த சம்பவங்கள்
இப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக களவுகள், கொள்ளைகள் மற்றும்
மர்மமான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. கள்வர்கள்
எக்காலத்திலுமே உலவித்திரிகின்றனர் என்ற யதார்த்தத்தின்
அடிப்படையில் வீடுகளில் பொருட்கள் களவு போவது கள்வர்களின் வேலையாக
இருக்குமென வைத்துக் கொள்ளலாம். என்றாலும் ராஜேஸ்குமாரின் கதைகளில்
வருவது போன்று - கூரைகளில் கல்லெறிவது, கதவில் பலமாக தட்டுவது,
மதிலால் பாய்ந்து காலடிச் சத்தம் கேட்க ஓடுவது போன்ற திகிலூட்டும்
அசம்பாவிதங்கள் வெறுமனே திருடுவதற்காக மட்டும் வருபவர்களால்
செய்யப்படுவதாக கணிப்பிட முடியாதவை. ஏனென்றால்இ சத்தம்படாமல்
வந்து கிடைப்பதை சுருட்டிக் கொண்டு போகவே திருடர்கள் விரும்புவார்கள்.
அதற்குமப்பால் சமிக்ஞை கொடுத்துவிட்டு வருவதாயின், மக்களை கிலி
கொள்ளச் செய்து அதிலிருந்து எதையாவது சாதித்துக் கொள்ள நினைக்கும் சமூக
விரோத சக்திகளே அதனைச் செய்ய வேண்டும்.
இதற்கு நல்ல அனுபவம் கிறீஸ் மனிதன் பற்றிய சம்பவங்களும் அது தொடர்பான
கதைகளுமாகும். இப்போது அதுபற்றி கேட்டால் அப்படி ஒன்று நடந்தது
என்பதே ஜோக்காகத்தான் தெரிகின்றது. ஆயினும் 2011 இல் இவ்வாறான மர்ம
நபர்கள் அலைந்து திரிந்ததால் எப்பேர்ப்பட்ட பீதியும் பயமும் தமிழ்
பேசும் மக்களிடையே நிலைகொண்டிருந்தது என்பதை யாவரும் அறிவோம்.
இவ்வாறான ஆட்களின் நடமாட்டத்தை நேரடியாக கண்டவர்கள் நிறையப் பேர்
இருந்தனர். ஆனால் எல்லாம் தானாக ஓயும் வரைக்கும் ஏவி விடப்பட்ட
அந்நபர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
கிறீஸ் மனித அனுபவத்தை வைத்துப் பார்க்கின்றபோது ஒரு கோர்வையாக
நிந்தவூரில் நடந்தேறும் இத்தகைய சம்பவங்களின் சீரியஸ் தன்மையை
உணர்ந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதுகாப்பு தரப்பினரும்
பள்ளிவாசல் நிர்வாகமும் சேர்ந்து ஒரு கூட்டமொன்றை கடந்த வாரம்
நடத்தியிருந்தனர். “பாதுகாப்புத் தரப்பினர் எமக்கு அறிவிக்காமல்
சிவில் உடையில் வரமாட்டார்கள்” என்ற கருத்துப்பட படை உயரதிகாரி
ஒருவர் இக் கூட்டத்தில் கூறியிருந்தார். இதன்போது பல விடயங்கள்
கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இவற்றுள்
முக்கியமானது - இரவு வேளைகளில் தேவையின்றி வீதிகளில் உலவித் திரியக்
கூடாது. இரவு 9 மணிக்கு பிறகு வெளியில் செல்கையில் ஆள் அடையாள ஆவணத்தை
கொண்டு செல்ல வேண்டும் என்பதுமாகும். இந்நிலையிலேயே அச்சம்பவம்
நடந்தது.
சிக்கிய சீருடைதாரிகள்
அன்றிரவு நிந்தவூர் கடற்கரைப் பூங்காவுக்கு அருகில் இருந்த
பொதுமக்கள், அங்கு சீருடையில் வந்த நான்கைந்து பேர் சாதாரண (சிவில்)
உடைக்கு மாறிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். உடை மாற்றிக்
கொண்டிருந்தவர்களை நோக்கி பொதுமக்கள் நெருங்கிச் சென்றபோது அவர்கள்
அங்கிருந்து நழுவிவிட எத்தனித்துள்ளனர். இருந்தும் அவர்களை
சூழ்ந்து கொண்ட கிராமவாசிகள், அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு
கூறியுள்ளனர். அதனை சரியாகச் செய்யாத குறித்த நபர்கள் அங்கிருந்து
தப்பிச் செல்லவும் முயன்றுள்ளனர்.
இவ்விஷயம் ஊருக்குள் பரவியதும் அரசியல்வாதிகள் உட்பட
ஒட்டுமொத்த ஊரே கடற்கரையில் திரண்டது. அப்போது அங்கு வந்த பைசல்
காசிம் எம்.பி. பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர்கள்
வருவதற்கிடையில் விஷேட அதிரடிப்படையினர் விரைந்து
வந்துவிட்டதாகவும் அவரே கூறியிருக்கின்றார்.
அதிரடிப்படையினர் அங்கு வந்ததும் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது.
“நாங்கள் அதிரடிப்படையினர்” என்று பைசல் காசிம் எம்.பி.யிடம் சொன்ன
மர்ம நபர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் முயற்சியில்
படையினரும், அவர்களை மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைக்கும்
முயற்சியில் பிரதேசவாசிகளும் ஆளுக்காள் போராடியுள்ளனர்.
கடைசியில், வானத்தை நோக்கியும் நிலம் நோக்கியும் உரக்கப் பேசிய
துப்பாக்கிகளின் நடுவே நிராயுதபாணிகளான பொதுமக்கள்
தோற்றுப்போனார்கள். அதிரடிப்படையினரால் சூட்சுமமாக
அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மர்ம நபர்கள் சம்மாந்துறை
பொலிஸாரின் தலையீட்டையடுத்து பொலிஸிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால், ஒருவித ஆத்திரமும் வஞ்சமும் அடைந்த நிந்தவூர் மக்கள் அடுத்த
நாளான திங்கட் கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டித்தனர்.
இதற்கிடையில் அன்று மாலை நல்லிணக்க கூட்டம் ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டது. மர்ம நபர்களை பிடிக்கும் இழுபறியில் தாக்குதலுக்கு
இலக்கான பிரதேச சபை தவிசாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வந்தமையால் பைசால் காசீம் எம்.பி.யே இதில் முக்கிய மக்கள்
பிரதிநிதியாக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் நிந்தவூர் மக்கள்
சார்பாக முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைக்கு பாதுகாப்பு
தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர். பொது மக்களால் பிடிக்கப்பட்ட
நபர்கள் தவறிழைத்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுப்பது என்பதே அந்த இணக்கப்பாடாகும். பொலிஸ் ஊடாக
சட்டத்தின் முன் நிறுத்துவது. இவைதான் நிந்தவூரில் இடம்பெற்ற முதலாம்
கட்ட சம்பவங்கள். இவற்றில் துலக்கப்பட வேண்டிய நிறைய மர்மங்கள்
இருப்பதை காண்கின்றோம்.
துலக்கப்படாத மர்மங்கள்
தம்மை விஷேட அதிரடிப்படையினர் என அடையாளப்படுத்திய மர்ம நபர்கள்
களவு எடுக்கும் வேளையிலோ அல்லது பொது மக்களுக்கு எதிராக
செயற்படும்போதோ கையும் மெய்யுமாக பிடிபடவில்லை என்பதை ஏற்றுக்
கொள்ள வேண்டும். சிவில் உடைக்கு மாறும் ஒரு படை வீரர் மோசமான
நோக்கத்தோடுதான் அதைச் செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.
ஆயினும், அன்று ஊரில் இருந்த நிலைமை அவர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆதலால், கிராமவாசிகள் தம்மை நெருங்கி வரும்போது தமது கடமையையே
அவர்கள் செய்து கொண்டிருந்தால் ஏன் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்க
வேண்டும்? தமது அடையாள அட்டையைக் காட்டி
உறுதிப்படுத்தியிருக்கலாம். சிவில் விடயங்களுக்கு பொறுப்பான
பொலிஸாரை அழைத்து அவர்களின் முன்னிலையில் தம்மை
நிரூபித்திருக்கலாம். மழுப்பலான பதில்களைக் கூறி சந்தேகத்திற்கு
வலுவூட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை.
சரி, அதற்குப் பிறகு அதாவது மேலதிக படையினர் வந்த பிறகாவது ஊர்
மக்களின் கோரிக்கைக்கு இணங்கியிருக்கலாம். தமது கௌரவத்தை பாராதுஇ
மக்கள் கேட்டுக் கொண்டதுபோல் பள்ளிவாசல் ஊடாக பொலிஸாருக்கு
ஒப்படைத்திருந்தால் பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கவும் அதிக
வாய்ப்பிருந்தது என்கின்றார் அங்குள்ள வயதான பெரியவர் ஒருவர்.
வெறுங் கைகளோடு நின்ற மகா ஜனங்களிடமிருந்து படைவீரர்கள் சிலரை
பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக வீணாக பாவிக்கப்பட்ட
தோட்டாக்கள் ஒரு சிலருக்கு சிராய்ப்புக்களை ஏற்படுத்தியது
மட்டுமன்றி, ஒட்டுமொத்த நிந்தவூர் மக்களும் அதற்குப் பின்னர்
மேற்கொண்ட நகர்வுகளுக்கும் தூண்டுதலாக அமைந்தது என்பது அவரது
கருத்து.
இவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் விஷேட அதிரடிப்படையைச்
சேர்ந்தவர்கள் அல்ல என்று பாதுகாப்புத் தரப்பில் யாரும் கூறவில்லை.
மாறாக, “சிவில் உடையில் காணப்பட்டதாக கூறப்படும் விஷேட
அதிரடிப்படையினர் தவறு செய்தமை கண்டறியப்பட்டால் நடவடிக்கை
எடுக்கப்படும்” என்றே பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்
பார்த்தால் ஏன் சிவில் உடையில் சந்தேகத்திற்கிடமான முறையில்
வந்தார்கள் என்பதில்தான் பிரச்சினை இருக்கின்றது.
எமது கேள்வி ஞானத்தின் பிரகாரம், சிவில் நடவடிக்கையில்
ஈடுபடுவதென்றால் குறைந்தபட்சம் தமது முகாம் மேலதிகாரிக்கு தமது
பணியிலக்கு குறித்து தெரியப்படுத்தப்பட்டிருத்தல் அவசியம்.
ஆனால்இ நிந்தவூருக்கு வந்தவர்கள் ஏன் வந்தார்கள் என்ற காரணம்
மேற்சொன்ன மேலதிகாரிகளுக்கு தெரிந்திருந்ததாகவோ அதனை அவர்கள்
உறுதி செய்ததாகவோ இக் கணம் வரைக்கும் தகவல் இல்லை.
அதேபோல் சிவில் நடவடிக்கை அவசியமென்றால் முகாமிலிருந்து
புறப்படும்போதே சிவில் உடையில் வருவதுதான் வழக்கம். அவ்வாறில்லாமல்
எல்லா ஆடைகளையும் கொண்டு வந்து வேறெங்காவது ஆடை மாற்றினால். கழற்றிய
உடுப்பையும் ஆயுதம் இருந்தால் அதனையும் சுமந்து திரிய வேண்டிய நிலையே
ஏற்படும். அது ‘சிவிலாகவும்’ இருக்காது. ஆனபோதும், சீருடையுடனும்
இன்னும் சில துணை உடுதுணிகளுடனும் கடற்கரை வரைச் சென்று சாதாரண
உடைக்கு மாறியுள்ளதை ஊர் பார்த்துள்ளது.
அப்படி என்றால், மேலிடத்திற்கு தெரியாமலும் வழக்கத்திற்கு
மாறாகவும் இவர்கள் ஈடுபட்டிருந்தது எவ்விதமான பணியில்? என்ற கேள்வி
எழுவது தவிர்க்க முடியாததாகின்றது. இக் கேள்விக்கு விடைகாணும்
முயற்சியின் ஒரு அங்கமாகவே பூரண ஹர்த்தாலை நிந்தவூர் மக்கள்
மேற்கொண்டனர். இதனால் வேறு பிரதேச மக்களும் பயணிகளும் சிறிய
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தாலும் இந்தக் கடையடைப்பில்
ஒரு நியாயம் இருந்தது. ஆனால்இ நிந்தவூரில் மறுநாள் செவ்வாய்க்கிழமை
மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் இந்த நியாயத்தை குறைவாகவே காணக்
கிடைத்தது.
தேவையற்ற அசம்பாவிதம்
திங்கட் கிழமை நடைபெற்ற நல்லிணக்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட
மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை உற்று நோக்குங்கள். இரண்டு முக்கிய
விடயங்களுக்கு பாதுகாப்புத் தரப்பினர் இணக்கம்
தெரிவித்திருந்தனர். இன்று நாடு இருக்கின்ற நிலைமையில் அவர்கள்
இப்படி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததே பெரிய விஷயம் என்ற யதார்த்தத்தை
புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதையெல்லாம் கடந்து இன்னுமொரு நாள்
ஹர்த்தால் அனுஷ்டித்ததும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக
மல்லுக்கு நின்றதும் தேவையற்ற விளைவுகள் பலவற்றை வலிந்து நிகழ்த்தி
விட்டிருக்கின்றது. பைசல் காசிம் எம்.பி. உள்ளிட்ட பல்தரப்பு
கூட்டத்தில் திங்களன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தில் நிந்தவூரைச்
சேர்ந்த குறிப்பிட்டதொரு மக்கள் பிரிவினர் அதிருப்தியுற்றனர். இதனை
விடவும் காத்திரமான முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதே
அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அதனால், ஹர்த்தாலை முடிவுக்கு
கொண்டு வராமல் அடுத்த நாளும் தொடர்வதற்கு முடிவெடுத்தனர். நள்ளிரவு
முதற்கொண்டு இவர்கள் இதற்கென இயங்கிக் கொண்டிருந்ததால் வீதியை மறித்து
போடப்பட்ட அனைத்து தடைகளும் போட்டது போட்டபடியே கிடந்தன.
இதனையறிந்த பொலிஸார் “கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய
நடந்து கொள்ளுமாறும்இ வீதி தடைகளை நீக்கி போக்குவரத்துக்கு
வழிவிடுவதுடன் ஹர்த்தாலை வாபஸ் பெற்று அமைதியை பேணுமாறும்” காலை 9
மணி முதற்கொண்டு காரைதீவு சந்தியில் இருந்தவாறு ஒலிபெருக்கியில்
அறிவித்துக் கொண்டே இருந்தனர். ஆனால், நிந்தவூர் பிரதான வீதியில்
குழுமி நின்றவர்கள் சற்றும் அவ்விடத்தை விட்டு அசையவில்லை.
ஒரு மணித்தியாலத்தின் பிறகு நிந்தவூர் நகர்ப்பகுதியை நோக்கி
பொலிஸார் முன்னேறினர். சுமார் 300 பொலிஸார் கலகத்தடுப்பு
உபகரணங்களோடும் கண்ணீர்புகைக் குண்டு, துப்பாக்கிகள் மற்றும்
வீதித் தடைகளை அகற்றுவதற்கான கனரக (கவுண்டி) வாகனத்தோடும்
வந்தனர். அவ்வேளையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளின் குறுக்கே
நின்று கொண்டிருந்ததாக நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார். அதற்குப்
பிறகு வேறு வழியில்லை – பொலிஸாரும் பொது மக்களும் நேருக்கு நேர்
சந்திக்க வேண்டியதாயிற்று.
ஆர்ப்பாட்டக் காரர்கள் கல்லுகளை பொலிஸாரை நோக்கி வீசியபோது
பதிலுக்கு பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்தனர்.
கடைசியில் 21 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
வீதியில் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களும் 20 துவிச்சக்கர வண்டிகளும்
பொலிஸாரால் ஏற்றிச் செல்லப்பட்டன. மூன்று மணித்தியால களேபரத்தின்
பின்னர் நிந்தவூரில் ஒருவித அச்சம் கலந்த நிசப்தம் நிலவியது. இதுதான்
இரண்டாம் கட்ட காட்சிகள்.
ஒரு ஊரில் உள்ள பிரமுகர்கள் யாராவது ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டால்
அக் கூட்டத்தில் பங்கேற்கும் பிற தரப்பினர் என்ன நினைப்பார்கள்?
அவ்வூர் முற்றுமுழுதாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது
என்றே எண்ணுவர். அதில் எட்டப்படும் தீர்வுகளை ஊர் மக்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டுமெனவும் எதிர்பார்ப்பர். உள்ளுக்குள் கருத்து
வேற்றுமைகள் இருப்பது பற்றி வெளித் தரப்பினருக்கு கவலையில்லை.
அந்த வகையில் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய
ஹர்த்தாலை கைவிட வேண்டும் என பொலிஸ் தரப்பு எதிர்பார்த்தது
நியாயமானது என்றே சொல்ல வேண்டும். பைசல் காசிம் செயற்றிறன் அற்ற ஒரு
அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால் இது விடயத்தில் ஏதோவொன்று
செய்திருக்கின்றார். சரியோ பிழையோ தமது ஊர் பிரதிநிதியின்
பங்குபற்றுதலுடன் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு
தலைசாய்த்திருந்தால் தேவையற்ற விளைவுகளை தடுத்திருக்கலாம்.
உள்வீட்டு பூசலின் விளைவு
உண்மையில் இரண்டாம் நாள் ஹர்த்தாலுக்கு உள்வீட்டு பூசலே பிரதான
காரணம் என்கிறார் நாலுமறிந்த போராளி ஒருவர். முதல்நாள் சம்பவத்தில்
தாக்குதலுக்குள்ளான நிந்தவூர் பிரதேச சபை தவிசாளருக்கும் பைசல்
காசிம் எம்.பி.க்கும் இடையில் சிறியதொரு பனிப்போர் உள்ளதாம்.
இந்நிலையிலேய, எம்.பி.யால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள
மறுத்த தவிசாளரின் ஆதரவாளர்கள், ஹர்த்தாலை நீடிக்க நடவடிக்கை
எடுத்தனர். தவிசாளர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பாத நிலையில்
என்ன சமாதானம் வேண்டிக் கிடக்கு என்று எண்ணியவர்களும், பொலிஸார்
மற்றும் படையினரின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற மக்கள்
பிரிவினரும் இதற்கு ஆதரவு நல்கினர்.
அந்த மக்களின் உணர்வுகளையும் நெஞ்சுரத்தையும் மதிக்க வேண்டும்.
ஆனாலும்இ இந்த வீதிமறியல்இ அதன் பின்னரான கண்ணீர்ப்புகைக் குண்டு
பிரயோகம் மற்றும் கைதுகள் என்பவற்றை வைத்துப் பார்க்கின்ற போதுஇ
இரண்டாம் நாள் போராட்டம் தூரசிந்தை கொண்டதல்ல என்பதை கோபப்படாமல்
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சிந்தித்துப் பாருங்கள்! ஆனானப்பட்ட புலிகள் இயக்கத்தையே வேரறுத்த
பாதுகாப்பு தரப்பினர் முன்னே எவ்விதமான அரசியல் பக்கபலமும் இன்றி.
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பது எவ்வளவு தூரம் பாதுகாப்பற்றது?
கலகத்தை அடக்குவதற்கான எல்லாத் தளவாடங்களோடும் வருகின்ற
பொலிஸாருக்கு முன்னால் - கடைசி வரை போராடும் திறனோ வளமோ இல்லாத ஒரு
சமூகம் வெறும் கூழாங்கற்களில் தமது உயிரைப் பணயம் வைக்க முடியுமா
என்பதை காலங்கடந்தாவது சீர்தூக்கிப் பார்க்க
வேண்டியிருக்கின்றது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களில்
வயதில் குறைந்த 6 பேரும் சித்த சுவாதீனமற்ற ஒருவரும் நீதிமன்றத்தால்
விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமான 14 பேரும் நேற்று பிணையில்
விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களை யார் மீட்டு
வரப்போகின்றார்கள்? எந்த அரசியல் மீட்பரும் அதனைச்
செய்யப்போவதில்லை. அவர்களது பெற்றோர்தான் இருப்பதை அடகுவைத்து
வழக்கு நடத்த வேண்டும்,
அவர்கள் விரைவில் விடுதலையானாலும் வழக்குத் தவணைகள்
முடிவடைவதற்கு எத்தனை வருடங்கள்இ மாதங்கள் எடுக்குமோ தெரியாது.
எனவேதான் சொல்கிறேன் - இப்போதில்லாவிட்டாலும் தவணைகளுக்கு சென்று
மனம் வெறுக்கின்ற ஒரு நாளிலேனும் ‘இந்த நடவடிக்கை
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது’ என்ற எனது கருத்துடன்
உடன்படுவீர்கள் என்று.
பொறுப்புள்ளவர்களின் பொறுப்பு
சரி, நிந்தவூரில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுஇ சிலர்
கைதாகினர். இது வழக்கமானதுதானே. இந்த இக்கட்டான சூழலில் எங்கே
போனார்கள் முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பர்களும் மீட்பர்களும்
தேர்தல்காலம் என்றால் உடுத்திருந்த சாரத்தோடு இரவோடிரவாக பறந்து
வந்திருப்பார்கள். ஆனால், இது மக்களின் பிரச்சினை என்பதால் மறந்தும்
நிந்தவூர் பக்கம் போய்விடக் கூடாது என இருக்கின்றார்கள் போலும்.
மு.கா.வின் வாக்கு வங்கி என நிந்தவூரை வர்ணிக்கின்ற நீதி அமைச்சரும்
கட்சித் தலைவருமான ரவூப் ஹக்கீம் தகவல் கிடைத்த உடனேயே பதறியடித்து
ஓடி வருவார் என்று மக்கள் நம்பினர். ஆனால்இ இந்த நிமிஷம் வரைக்கும் அது
நடக்கவில்லை. திருகோணமலைக்கு வந்திருந்த தலைவர் தமது
பிரதேசத்திற்கு வந்து எட்டிப்பார்க்காமல் போனது நிந்தவூர்
மக்களிடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று,
சின்ன ஒரு விடயத்திலும் அக்கறை கொண்டு அறிக்கை விடுகின்ற எம்.ரி.
ஹசனலி எம்.பி. அதைக் கூட செய்யாமல் விட்டதும் அவரது சொந்த ஊரில்
பேசுபொருளாக ஆகி இருக்கின்றது.
இவர்கள் இருவருக்குமே இப்பிரச்சினையை தீர்த்து வைக்கும் கடப்பாடு
அதிகமிருக்கின்றது. என்றாலும், அங்குள்ள மாகாண சபை
உறுப்பினருக்கும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் கூட இதில்
தார்மீக கடமையிருக்கின்றது. ஏனென்றால் இதனை முளையில் கிள்ளி
எறியாவிட்டால் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவும்
அபாயமிருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை
கொண்டு வந்த உறுப்பினர் ஜெமீல், பொலிஸ் மா அதிபரிடம் இவ்விடயமாக
பேசிய அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் கருத்து வெளியிட்டுள்ள
அசாத்சாலி போன்றோர் நன்றிக்குரியவர்களின் பட்டியலில் சேர்ந்து
கொண்டுள்ளனர்.
இதேவேளை, இன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதாவது – யுத்தம்
குடிகொண்டிருந்த நேரத்தில் பொலிஸாரும் படையினரும் மக்களை காப்பாற்றுவதற்காக
செய்த தியாகங்களை முஸ்லிம்கள் மறந்து விடவில்லை.
இறைவனுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பு தரப்பினரை நம்பி வாழ்க்கை நடத்திய
காலம் மறந்து விடக்கூடியதுமல்ல. ஆனால், ‘போர் நாயகன்கள்’ என்ற அடைமொழியுடன்
அழைக்கப்படுகின்ற படையினர் மற்றும் ‘மக்களின் காவலன்’ என அழைக்கப்படும்
பொலிஸார் ஆகியோருடன் மக்கள் கொண்டிருந்த நல்லுறவில் கண்பட்டது போலவே
அண்மைக்கால சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதில் இம்மியளவும் அரசுக்கோ படையினருக்கோ தொடர்பில்லை என்பதை மக்கள் நம்ப
வேண்டுமென்றால், உண்மையானவர்களை கண்டு பிடிக்க வேண்டும். கிறீஸ் மனிதன்
விவகாரத்தின் அடுத்த பாகம் போல இப்போது உருவாகியுள்ள இந்த மர்ம நபர்களின்
நடமாட்டத்தை அடக்க வேண்டியதே இன்றைய உடனடி தேவையாகும். பாதுகாப்பு
தரப்பினரும் பொதுமக்களும் முரண்பட்டுக் கொள்ளாமல் கூட்டாக செயலாற்றி சமூக
விரோத சக்திகள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
இவ்வளவு பிரச்சினை நடந்தேறிய பிற்பாடும் நிந்தவூரில் முன்னர் போன்ற
அச்சமளிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே குறிப்பிட்ட
சில படையினர் வேறொரு நிகழ்ச்சி நிரலுக்காக இவ்வாறு நடந்து கொள்கின்றனரா?
அல்லது அவர்களுக்கும் இதற்கும் அறவே தொடர்பில்லையா? அன்றேல் பாதுகாப்பு
தரப்பினருக்கு தெரிந்திருக்க வேறு யாரோ முஸ்லிம்களை சீண்டிப்பார்க்க
முனைகின்றனரா?.... என ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கு விடைகாண
வேண்டியிருக்கின்றது. நிந்தவூரில் பிடிபட்ட படையினரை தீரவிசாரித்து
அவர்களது வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டால் அரைவாசி கேள்விகளுக்கு விடை
கிடைக்கும்.
உண்மையில் அரசாங்கத்தை செயற்கை அசௌகரியம் ஒன்றிற்குள் தள்ளுகின்ற ஒரு
கைங்கரியமாக இருப்பதால் ஜனாதிபதியும் அரசியல்வாதிகளும் இது விடயத்தில்
கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும்.


.jpg)

0 Comments