A/L கற்க தகுதி பெறும் மாணவர்கள் மாவட்ட ரீதியாக தெரிவு
ரூ. 360 மில்லியன் செலவாகும் எனவும் மதிப்பீடு
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஒரே தடவையில் சித்தி பெற்று உயர்தரத்துக்கு தெரிவாகும் மாணவ, மாணவியருக்கு இரண்டு வருட காலத்துக்கு 5,000 ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்கும் ‘ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் - 2023’ திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இத்திட்டத்தை அடையாளரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்திபெற்று க.பொ.த உயர்தரத்துக்கு தெரிவான மாணவ, மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து
முன்னெடுக்கின்றன. இதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதி பெற்ற 3,000 மாணவ, மாணவியருக்காக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக நாடு முழுவதிலுமுள்ள 100 வலய அலுவலகங்களை உள்ளடக்கியதாக வலயமொன்றுக்கு 30 என்ற அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
மேல்மாகாணத்தின் 11 கல்வி வலயங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 110 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கலின் அடையாள ரீதியாக ஜனாதிபதியினால் புலைமைப் பிரிசில்கள் நேற்று வழங்கப்பட்டன.
இதன் கீழ், புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு உயர்கல்வியை நிறைவு செய்யும் இரண்டு வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 360 மில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்படி புலமைப் பரிசில் வேலைத்திட்டத்துக்கு இணையாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பாடசாலைப் பைகள், அப்பியாச கொப்பிகள், குடை, கடிகாரம் மற்றும் 5,000 ரூபா பெறுமதியான பரிசில்களும் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.
நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் டபிள்யூ.ஏ.சரத் குமார ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புலமைப் பரிசில் பெற்றுக்கொண்ட ஏனைய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் என்பவற்றை அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 Comments