ஊரின் நலன் கருதி படித்த, பண்பாடான, மரியாதைக்குரிய ஆட்களை நம்பி ஊர், மத்ரஸா மற்றும் பள்ளிவாயலை நிர்வகிப்பதற்காக தேர்ந்தெடுக்கின்றோம்.
இவ்வாறு தெரிவு செய்யும் நாம், நாளடைவில் தலைவர்களாக விளங்குபவர்களது நடவடிக்கைகள், பொறுப்புகள், குறித்த ஊர், மதர்ஸா மற்றும் பள்ளிவாயலின் அபிவிருத்திகள், அவற்றின் கணக்கறிக்கைகளை என்றாவது அவர்களிடம் கேட்டிருக்கிறோமா? அல்லது அவர்கள் தான் முறையாக பொறுப்புகளை செய்கிறார்களா அல்லது முறையாக அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் முன் வைக்கின்றனரா என்று அவதானித்திருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே விடை வரும்.
இவ்வாறு பொடுபோக்காகவும், அலட்சியமாகவும் இருந்ததால் தான் இன்றும் பல ஊர் மத்ரஸாக்கள், பள்ளிவாயல்களது நிர்வாகத்தினர், அதிபர்கள் அல்லாஹ்வின் பயமின்றி மக்களை ஏமாற்றி, மாணவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து தமது குடும்பத்தின் வருமானத்துக்காக பொதுச் சொத்தில் கை வைக்கின்றனர்.
இங்கு தெரிந்த சில அதிகாரமுள்ள அதிபர்மார் எவ்வாறெல்லாம் ஊர் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றர் என்பதைப் பார்த்தாவது இன்னமும் நாம் விதிக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்வோம்.
இலங்கையின் பழமையான மத்ரஸா அதிபர், அம்மத்ரஸாவில் அதிபராக பல தசாப்தங்களாக கடமையாற்றுகிறார், எனினும் அங்குள்ள புதிய பல மாணாக்களுக்கு அதிபர் யாரென்றே தெரிவதில்லை என்கின்றளவு அதிபரின் மத்ரஸாவுடனான, மாணவர்களுடனான, கற்பித்தலுடனான ஈடுபாடு, தொடர்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதை இதை வாசிக்கும் உங்களுக்கு ஊகிக்க முடியும்.
ஊரின் முக்கிய பொறுப்புகளின் தலைவர், பல சங்கங்களது தலைவர், பல அமைப்புகளது தலைவர் என ஊருக்கும் உலகத்துக்கும் காண்பிக்கும் ஆள், ஆனால் தனக்கு கீழால் இயங்கும் மத்ரஸாவோ பூச்சிய நிலையில் இருப்பதை சற்றும் ஏறெடுத்து பாராது தனது வருமானத்தில் முழு மூச்சாக ஈடுபடுவதைப் பார்க்கையில் உள்ளம் மறத்து, இறந்நு போனவரோ என எண்ணத் தோன்றும்.
பெற்றோர் தன்னை நம்பி ஒப்படைத்த பிள்ளைகளது வாழ்க்கையை வீணாக்கி, அவர்களது படிப்பிற்காக முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா, அவர்களது அடைவுகள் என்ன, பாடப் புத்தகங்களையாவது வாசிக்கின்றனரா, மேலதிக புத்தகங்களை வாசிக்கின்றனரா, குறைந்தபட்சம் அடிப்படை நூற்களை மத்ரஸா வாசிகசாலைக்கு சென்று பார்க்கின்றனரா, நாளாந்தம் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றனவா, ஒழுக்க நெறிகளை பேணி நடக்கின்றனரா, ஒழுக்கங்கள் முறையாக கவனிக்கப்பட்டு திருத்தப்படுகின்றனவா, உரிய கல்வியாண்டை தாண்டும் போது உரிய பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டு, சரியாக விளங்கியிருக்கின்றனரா என்பன போன்ற ஒன்றைக் கூட அறியாமல், அவதானிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு மத்ரஸாவை இயக்குவாக ஊருக்கு காண்பிக்க முனைவது அவ்வூர் மக்களில் ஆசிரியர் குழாமைத் தாண்டி யாருக்குமே தெரியாதென்பதே கசப்பான உண்மை. இவர்கள் ஏழு வருடங்களை வீணாகவும் விளையாட்டாகவும் கழித்து ஏதோ நூற்களும் தெரியாமல் அடிப்படை இஸ்லாமும் தெரியாமல் ஆலிம்கள் எனும் பெயரில் வெளியாகுவதும் ஒருவித விசித்திரம் தான்!!!
இதற்கிடையில் மத நல்லிணக்கம், சகவாழ்வை மக்களுக்கு காண்பிப்பதற்காக மத்ரஸா மாணவர்களை அழைத்து சென்று ஆங்காங்கே சேவை செய்வதற்கு ஈடுபடுத்தி, அவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார்.
இது ஓர் ஊரின் மத்ரஸா அதிபராக, பல சங்கங்களது தலைவராக இருப்பவரின் நிலை!
மற்றொரு கிராமத்து ஊரில் அதிபர் என்றால் அங்குள்ள மக்கள் அவ்வளவு மரியாதை கொடுப்பர், ஆனால் அவர் மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை திரும்பிக் கூட பார்ப்பதில்லை, எனினும் தனது பல ஏக்கர் விவசாய நிலத்தை உழுவுதல், நீர் பாச்சுதல், வரம்பு வெட்டுதல், அறுவடை செய்தல் அனைத்துக்கும் சம்பளமில்லா வேலையாட்களாக உபயோகிப்பது அவரது மாணவர்களைத் தான்.
காலையில் விவசாய நடவடிக்கைகள், பகலில் விளையாட்டுகள் எனில் மாணவர்கள் எங்கே, எப்போது கற்பது.
இவ்வாறு ஓரிரண்டு இடங்களில் நடப்பதால் அனைத்து மத்ரஸாக்கள், பள்ளிவாயல், ஊர் தலைவர்கள் இவ்வாறு மோசமான, பொறுப்பற்றவர்கள் என பொதுமைப்படுத்தி குறை சொல்லவோ, சாடவோ முடியாது.
இங்கு நான் கூற வருவது யாதெனில் சமூகத்தின், ஊரின், அமைப்பின், மத்ரஸாவின், பள்ளிவாயலின் தலைமைகளை வெறும் மரியாதை நிமித்தம் நம்பி பொறுப்புகளுக்கான கேள்விகள், கணக்கறிக்கைகளை அவதானிக்காது, வினவாது போனால் இவ்வாறு மறைவில் ஆயிரமாயிரம் சமூக சீர்கேடுகள், அமானித மோசடிகள், பண மோசடிகள், கீழுள்ள மாணவர்கள், மக்களது உரிமைக்கான துரோகங்கள் நடந்தே தீரும் !!!
உங்கள் பகுதியில் பொறுப்பிளுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் திரும்பிப் பார்க்க முயல்வதோடு அவர்களது முறைகேடான நடத்தைகள், அநியாயக்களை முறையாக அணுகி தட்டிக் கேட்கவும் வேண்டும்.
அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுவது வெளிப்படையாக தெரிந்த எமக்கு எம்மை அறியாமலே ஊர்களில் பொறுப்பிலுள்ளவர்கள், மக்களை ஏமாற்றி வெளியில் நல்லவர்களாக மக்களுக்கு சித்தரித்து திறை மறைவில் பாரிய மோசடியில் ஈடுபடுவதை நாம் தெரிந்தும், பல வேளைகளில் தெரியாயலும் மறந்து வாழ்கிறோம் என்பதே நிதர்சனம்!
நாம் திந்தித்து, உணர்ந்து, விழிக்காத வரை எம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்துவோர் நடத்திக்கொண்டே இருப்பர்!
விழிப்போம், தலைமைகளை முறையாக அணுகி பொறுப்புகளை, அறிக்கைகளை கேட்டறிந்து, மாற்றத்துக்காக வித்திடுவோம்!
13/05/2023
0 Comments