Subscribe Us

header ads

பர்கர் உணவில் எலிக்கழிவு | ரூ.5 கோடி அபராதம் வழங்கும் மெக்டொனால்ட்ஸ்…!

 


உலகின் முன்னணி உணவு பொருள் விற்பனை பிராண்டாக திகழ்வது மெக்டொனால்ட்ஸ். அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை பரப்பி பர்கர், ப்ரைஸ் போன்ற துரித உணவுகளை விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் ரெஸ்டாரென்ட் கிளை ஒன்று பிரிட்டன் நாட்டின் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோன் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு பெண் வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டில் சீஸ் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். வாங்கிய பர்க்ரை சாப்பிடத் தொடங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த பெண் சாப்பிட்ட பர்கரில் எலியின் கழிவுகள் இருந்துள்ளன.

அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்த பெண் வால்தம் பாரஸ்ட் கவுன்சிலை நாடி புகார் அளித்தார். அதன்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது தான் கடை சுகாதாரமற்ற முறையில் இயங்கியது தெரியவந்துள்ளது. புகார் தொடர்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இதற்கான தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, சுகாதார விதிகளை மீறி செயல்பட்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் பெண் சட்ட நடவடிக்கைக்கு மேற்கொண்ட செலவுத்தொகை ரூ.22.6 லட்சம் மற்றும் கூடுதல் தொகை ரூ.19,537 என மொத்தம் சுமார் ரூ.5 கோடி அபராத தொகை தர வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற நிறுவனங்களிடம் வாடிக்கையாளர்கள் உயர்ந்த சுகாதாரத்தை எதிர்பார்த்து வருகின்றனர் எனக் கூறிய நீதிமன்றம், அதை தக்க வைக்கும்படி நடக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது. அதேவேளை, தவறை ஒப்புக்கொண்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டது பாராட்டத்தக்கது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments