90ஸ் கிட்ஸ்களின் காலத்தில் வந்த மேரியோ, ரோட் ரேஸ் போன்ற கேம்கள் பெரும்பாலும் ஆபத்தில்லதவை. ஒருகட்டத்தில் அது முடிந்துவிடும். இரண்டு மூன்று தடவைக்கு மேல் விளையாடத் தோன்றாது. அதன் பிறகு வந்த GTA போன்ற கேம்கள் கொஞ்சம் நீளமானவை. ஆனால் அதற்கும் முடிவு இருந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விளையாட்டுகள் உருவானபோது ஏழரை ஆரம்பித்தது.
கேண்டிக்ரஷ் விளையாட்டை ஒரு உதாரணமாக சொல்லலாம். ஆரம்பத்தில் ஈசியாக ஆரம்பித்து போகப்போக கொஞ்சம் கடினமாகப் போகும். கேண்டிக்ரஸில் ஆயிரம் ஸ்டேஜ்களை கடந்து விளையாடிக் கொண்டிருப்பவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். இவைகள் எல்லாம் நேரத்தை திண்பவை.
ஆனால் நமது புத்திசலித்தனத்தை ஒரு ப்ரொக்ராமிடம் காட்டுவது முட்டாள் தனமானது என்ற புரிதல் இல்லாமல் போய் விழுவது தான் ஆன்லைன் ரம்மி போன்ற விளைட்டுகள்.
சாலிட்டரி ரீப்பர் என்ற விளையாட்டு எல்லா கணினிகளிலும் டீஃபால்ட்டாக இருக்கும். அதை விளையாடுவதே கொஞ்சம் கடினமாக இருக்கும். அதையே பணம் கட்டி விளையாடுவது எனபது ஆகப்பெரும் முட்டாள் தனம். ஏனென்றால் மனிதர்களோடு விளையாடும்போது சில சமயங்களில் மனித தவறுகள் ஏற்படும் சமயங்களில் எவ்வளவு பெரிய ஜாம்பவானையும் வெற்றி பெறலாம்.
ஆனால் டீப் லேர்னிங் என்ற அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆன்லைன் ரம்மி போன்றவற்றில் தொழில்நுட்பத்தை மீறி வெற்றி பெறுவது என்பதெல்லாம் மிகமிக கடினம்.
கேண்டி க்ரஷ் போன்றே ஆரம்பத்தில் எளிமையாக இருக்கும். சிறிய தொகையை நம்மிடம் தோற்று நம்மை சந்தோசப்பட வைக்கும். ஆனால் சில ஆட்டங்களுக்குப்பிறகு நாம் இழக்க ஆரம்பிப்போம்.
விட்டதை பிடிக்க என்று ஆரம்பித்தால் இவரைப்போன்று 20 லட்சம் கடனில் விட்டுவிடும். கடனுக்கு கடன் வாங்கி கடைசியில் முட்டுச்சந்தில் நிறுத்தும் போது வரும் விரக்தியில் தான் த.கொ யில் முடிகிறது.
சில ஆயிரம் பணத்திற்காக லட்சங்களை இழந்து, வேலையை இழந்து நல்ல குடும்பத்தை இழந்து போய்சேரும் ஒரு நிலை தேவையா. குடும்பத்தினர் இரண்டு நாள் அழுவார்கள். மூன்றாவது நாள் கடன்காரன் வீட்டு வாசலில் வந்து நிற்பான். அவனால் மொத்த குடும்பமும் அழும். மானம் மரியாதை எல்லாம் போகும். விளையாடி காசை இழந்துவிட்டு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரைவிட்டு விடுவது சில காலத்திறகுள் நடப்பது. ஆனால் அது ஏறபடுத்தும் பாதிப்பு மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்துவிடும்.
செய்தித்துறையில் இருப்பதால் இதுபோன்ற உருக்கமான கடிதங்களை பார்த்து அலுத்துவிட்டது. இறந்தவர்கள் மேல் பரிதாபம் வருவதற்கு பதிலாக அவர்கள் குடும்பத்தின் மீது தான் வருகிறது. கடனை அடைத்து மீதி வாழ்க்கையை வாழப்போகிறார்கள் என்று.
சொல்லவருவது ஒன்றே ஒன்று தான். நீங்கள் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் தொழில்நுட்பத்தின் மேல் பந்தயம் கட்டாதீர்கள். மனித மூளை தவறு செய்யும். பக்காவாக எழுதப்பட்ட புரொக்ராம் தவறு செய்யாது இழப்பு உறுதி என்பதை நினைவில் வையுங்கள். எந்த விளையாட்டிலாவது அடிக்ட் ஆவது போன்று தோன்றினால் அதை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள். உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு செத்துப்போவதால் பத்து பைசா பிரயோஜனம் கிடையாது. ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்தால் வேறு ஒரு வகையில் பணத்தை இழப்பார்கள். ஏனென்றால் இங்கே பணத்தை இழப்பதற்கான வழிகள் ஆயிரம் இருக்கிறது. நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
0 Comments