மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்ஹ நாட்டை வங்குரோத்து நிலையடைந்த நாடாக பிரகடனம் செய்து கடன்களை மீளச் செலுத்த முடியாதென அறிவித்தமை காரணமாக வருடாந்தம் நாம் செலுத்த வேண்டிய சுமார் 500 கோடி அமெரிக்க டாலர்களை தற்காலிகமாக செலுத்தாமல் ஒருவாறு நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறோம்.
எமது தேசத்தின் மொத்த தேசிய உற்பத்தியோடு ஒப்பிடுகையில் தற்போதைய நிலையில் சுமார் 110% வீத கடனில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது, வெளிநாட்டு கடன்கள் மாத்திரம் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
வெளி நாட்டுக் கடன்களை செலுத்தாது தற்போது எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள், பால்மா, சீனி, கோதுமைமா, இரசாயன பசளை உற்பட அத்தியாவஷ்ய பண்டங்கள் பொருட்களை நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து நாட்டில் இருந்து டாலர்கள் வெளியே செல்வதனை தவிர்த்துள்ளோம்.
விலைவாசி, வாழ்க்கைச் செலாவணி உயர்வினால் மக்களது நுகர்வு வலிமையை பாரிய அளவில் பலவீனப்படுத்தி பணவீக்கத்தை குறைத்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
எரிபொருள், எரிவாயு, நீர், மின்சாரம் என அத்தியாவஷ்ய பண்டங்கள் சேவைகளின் விலைகளை பன்மடங்காக அதிகரித்து, சலுகைகளை, மானியங்களை குறைத்து மக்கள் மீதான சுமைகளை அதிகரித்து நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
பொருளாதார நெருக்கடிகள் காரணணமாக நாட்டை விட்டு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு ஓடிவிட ஆரம்பித்துள்ளதால் தற்காலிகமான ஏற்பட்டுள்ள குறுகியகால நன்மைகளை தீர்வுகளாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
வாழ்கைச் செலாவணி உயர்வு, பணவீக்கம் என்பவற்றிற்கு ஈடுகொடுக்க முடியுமான சம்பள உயர்வை வழங்காது மத்தியதர வர்க்கத்தை வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளியுள்ளோம்!
தற்பொழுது டாலர்களாக கிடைக்கின்ற சிறிய அளவிலான வெளிநாட்டு கடனுதவிகள், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் எதிர்கொண்டுள்ள வீழ்ச்சி, சுற்றுலாப்பயணிகள் வருகை, வெளிநாட்டு தொழிலாளர்களது வைப்பீடுகள் காரணமாக அசாதாரணமாக உயர்திருந்த டாலரின் பெறுமதி குறைவடைவதை வைத்து இலங்கை ரூபாய் பலப்பட்டு வருவதாக தற்காலிக சுகத்தை அனுபவித்து வருகிறோம்.
எமக்கு வருடாந்தம் கடன் செலுத்த 5000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் நிலையில் 200 /300 மில்லியன்களில் கிடைக்கும் சிறு சிறு கடனுதவிகளை நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ள 2.9 பில்லியன் கடனுதவியை நிரந்தரத் தீர்வாக எண்ணிக் கொண்டு அதற்காக பாரிய விலையை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
கொள்ளையிடப்பட்ட நாட்டின் வளங்களை மீட்பதற்கு திராணியற்றவர்களாக சர்வதேச சமூகத்திடம் மேலும் மேலும் கடன்களுக்காக யாசகம் கேட்பதனை சாதனைகளாக பேசிக் கொண்டிருக்கிறோம், மாறி மாறி ஆட்சிக்கு வரும் பக்காத் திருடர்களின் ஊழல் மோசடி அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க நாம் தயாராக இல்லை.
கடன்வழங்கிய நாடுகள் குறிப்பாக இந்தியா சீனா நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் நாம் தற்போது தாரை வார்க்கின்ற நாட்டின் வளங்கள் நலன்கள் குறித்த பிரக்ஞையற்றுப் போயிருக்கின்றோம்.
இவையெல்லாம் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்கும் கடினமான தீர்வுகள் என்று சில தரப்புக்கள் அரசியல் ரீதியாக பெருமைப்பட்டுக் கொண்டாலும் அவை நீண்டகாலத்தில் நெருக்கடிகளை தீவிரப்படுத்துகின்ற தற்காலிக வலி நிவாரணிகள் மாத்திரமே என்பதனை நாம் நடுநிலையாக சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.
நிரந்தரமாக சர்வதேச சமூகத்தினது நம்பிக்கையை வெல்லக் கூடிய ஆட்சி முறைமை மாற்றம் ஒன்றே நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கக் கூடிய முதல் எட்டாக இருக்கும்.
வெறுமனே தலைகளை தனியாட்களை கட்சிகளை மாற்றும் தற்காலிக வியூகங்கள், அரசியலமைப்பை அரசியல்மயமாக்கள், சர்வாதிகாரம், அதிகார பலம், இராணுவ பலம், காவல்துறை பலம் என்பவற்றால் இந்த பொருளாதார சுனாமியிற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதுவே உண்மையாகும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
10.03.2023
0 Comments