பங்காளர்களாக அன்றி பார்வையாளர்களாக இருக்கும் சமூகமே அவர்களை உருவாக்குகின்றார்கள்.
ஆயுட்காலத் தலைமைகள் சொந்தப் பண்ணைகளுக்கு, கம்பெனிகளுக்கு இருப்பதில் தப்பில்லை, ஆனால் ஒரு சமூகத்தின் அரசியல், சிவில், சன்மார்க்க, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இருக்கவே கூடாது.
அது தனிநபர் ஆதிக்கத்திற்கு அடையாளமாகும், அதேபோன்று அவர்களைத் தவிர சமூகத்தில் தகுதியும், திறமையும், அனுபவ முதிர்ச்சியும் உடையோர் இல்லவே இல்லை என்ற செய்தியை மறைமுகமாக எடுத்துச் கொள்வதாகும்.
அரசியல், சிவில், சன்மார்க்க, இயக்க, அமைப்புக்களின் யாப்புக்களில் கூட்டுப் பொறுப்புள்ள ஷூரா முறையிலான தலைமைத் துவ கட்டமைப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப் படல் வேண்டும்.
ஒருவருக்கு இரண்டு முறை மாத்திரமே தலைமை பதவி வழங்கப் படல் வேண்டும், அடுத்தடுத்த படிமுறை தலைவர்கள் அவர்களது பங்களிப்புகள், செயற்திறன், மதி நுட்பம் , சிரேஷ்டம் என்ற காரணிகளை வைத்து அடையாளப் படுத்தப் படல் வேண்டும்.
எமது யா(ஆ)ப்புக்கள் பலரை சர்வாதிகளாக மாற்றியுள்ளன, தேசிய அரசியலில் மாத்திரமன்றி, முஸ்லிம் அரசியலில் நாம் அதனை தெளிவாக காண்கின்றோம்.
அடுத்தடுத்த படிகளில் திறமைகளை இயல்பாக வெளிக் கொணரும் பலர் எவ்வாறு ஓரங்கட்டப் பட்டார்கள், துரோகிகள் ஆக்கப் பட்டார்கள், உண்மையான துரோகிகள் உருவாக்கப் பட்டார்கள், உள்வாங்கப் பட்டார்கள், நேற்றைய துரோகிகள் நண்பர்கள் ஆக்கப் பாட்டர்கள், இன்றைய நண்பர்கள் நாளைய துரோகிகள் ஆக்கப் பட்டார்கள் என்பதையெல்லாம் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.
இளம் தலைமைகள் உருவாக்கப் படாமைக்கு இந்த எதேசாதிகார யாப்புக்களே பிரதான காரணம்.
தலைமைகளை பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஊழல் மோசடிகள் சந்தோஷங்கள், பதவி பட்டங்கள், மெகா சாப்பாடுகள், கையூட்டல்கள் வழங்கப் படுகின்றன.
சில வேளைகளில் சில்லறைகளுக்காக குரான் ஹதீஸ் கூட விலை பேசப் பட்டு விளம்பரங்களாகின்றன, சமூகத்தை ஏமாற்றுவதற்காக தம்மைத் தாமே ஒரு கூட்டம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.
ஆயுட்காலத் தலைமைகள் விலை பேசப் படுகின்றன, கொள்கைகள், இலக்குகள், போராட்டங்கள் விலை போகின்றன.
சர்வாதிகாரிகள் தேசத்தில் ஜனநாயக தேர்தல் போல் பொதுச் சபை கூட்டங்கள் இடம் பெறுகின்றன.
ஆயுட் காலத்தலைமைகள் அவர்களது பலவீனங்கள், மோசடிகளை காரணமாக அச்சுறுத்தப் பட்டு பணயக் கைதிகள் போல் அதிகார வர்க்கங்களால் நடாத்தப் படுகின்றார்கள், சரணாகதி அரசியல் செய்ய நிர்பந்திக்கப் படுகின்றார்கள்.
இன்று பதவிகள் ஒரு சிலருக்கு அலங்காரமாகவும், சூதாட்டமாகவும் மாறிவருக்கின்றது, அதேவேளை எந்தப் பதவிகளையும் அலங்கரிக்க வல்ல பலர் ஓரங்கட்டப் பட்டுள்ளார்கள்.
சந்தர்ப்பங்கள் அடுத்தடுத்த படிமுறைகளிற்கு வழங்கப் படுகின்ற பொழுது அங்கு பெரறுப்புக்கூரல், வெளிப்படைத் தன்மை, ஆக்கத் திறன், சாதித்துக் காட்டுவதில் ஊக்கம் என பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.
நன்றாக திட்டமிடப்பட்ட கௌரவமான ஆயுட்கால ஆக்கிரமிப்புகள் பல நிறுவனங்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன.
மன்னிக்க வேண்டும் எல்லா ஆயுட்காலத் தலைமைகளும் வங்குரோத்து என்றோ சர்வாதிகாரிகள் என்றோ நான் சொல்லவில்லை ஒரு சில நாள்கவர்களும், சில அப்பாவி பிள்ளை பூச்சிகளும் இருக்கத் தான் செய்கின்றனர்.
சுவாரசியம் என்னவென்றால் முன்னணி உறுப்பினர் சிலர் தமக்கு தகுதி இல்லாவிட்டால் தகுதி உள்ளவர்களுக்கு சென்று விடக்கூடடாது என்ற பொறாமையில் திரும்பத் திரும்ப ஒருவரை கட்டாயப் படுத்துவதாகும், சிலர் தாம் பாதிக்கப் படும் பொழுது தாமும் பங்காளிகளாக இருந்த தலைமை மோசடிகளை பட்டியலிடுகின்றனர்.
அந்த நல்லவர்களை மனதில் வைத்து சட்டங்கள் யாப்புகள் தயாரிக்கப் படக் கூடாது, அடுத்த படிமுறைகளிற்கு அநீதி இழைக்கப் படக் கூடாது.
பொறுப்புக்கள் அம்மானிதங்களாகும், உரியவர்களிடம் உரிய காலங்களில் ஒப்படைக்கப் படல் வேண்டும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments