வாழ்க்கையின் உண்மையான அர்த்தங்களை புரிந்தவர்கள் ஆத்மார்த்தமாக அதன் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளிலும் ஈருலக ஈடேற்றங்களுக்கான சந்தர்ப்பங்களை கண்டு கொள்வார்கள்!
பசி பட்டினி, அச்சம் பயம், உயிர் பொருள் இழப்பு, வியாபார விவசாய நஷ்டங்கள் என எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தரப்படும் அனைத்து சோதனைகளுக்குப் பின்னாலும் மனித நடத்தைகள் பண்பொழுக்கங்கள் பரீட்சிக்கப் படுகின்றன!
இந்த சவால்களுக்குப் பின்னால் மறைந்துள்ள சந்தர்ப்பங்களைக் கண்டு கொள்ளும் உண்மையான விசுவாசிகள் தமது மனித நேயத்தின், ஜீவகாருண்யத்தின் அதிகபட்ச அடைவுகளை எய்திக் கொள்கின்றனர்.
அவர்கள் மனிதர்களில் புனிதர்கள்..
அதேவேளை இத்தகைய சோதனைகளை தமது குறுகிய விருப்பு வெறுப்புக்கள் அபிலாஷைகள் இலாப நஷ்டங்களுக்கான சாதகமான சந்தர்ப்பங்களாக பார்கின்ற மனித அவலங்களில் பொருள் முதல்வாத இலாபங்களை ஈட்டிக் கொள்ள விரும்புகின்ற கீழ்த்தரமான மனிதர்களும் இருக்கிறார்கள்.!
அவர்கள் தீயவர்கள், மிருங்களை விடவும் கேடு கெட்டவர்கள்...
அவர்களில் இருந்து இவர்களை பிரித்தறிவதற்காகவே சோதனைகள் தரப்படுகின்றன...
பலர் பகற் கொள்ளையடிக்கிறார்கள், சிலர் நன்மைகளை கொள்ளையடிக்கிறார்கள்...
உதாரணத்திற்காக: சிலர் முறையாக வியாபாரம் விவசாயம் செய்து மனித நேயத்துடன் தானதர்மங்கள் செய்து மக்கள் துயர் துடைப்பவர்கள்...
இன்னும் சிலர் பொருட்களை பண்டங்களை பதுங்கியுள்ள, விலைகளை அதிகரித்தும் கொள்ளை இலாபமீட்டும் கயவர்கள் ...!
பாதாள உலக மாஃபியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் தஜ்ஜாலிய யுகத்தில் மக்களை ஏமாற்றி அவர்களை சுரண்டி வாழும் அரசியல் வாதிகள் ஊழல் மோசடிப் பேர்வழிகள், கருப்புச்சந்தை மொத்த சில்லறை மாஃபியாக்கள் என அனைத்து தீய சக்திகள் மீதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் நிச்சயமாகவே இறங்கத்தான் போகின்றன!
நாம் தனி நபர்களாகவும் குடும்பங்களாகவும் சமூகமாகவும் தேசமாகவும் சத்தியத்தின் பக்கம் சார்ந்திருப்பதுவும் அசத்தியத்தை அடியோடு வெறுத்து அதற்கெதிராக அணிதிரண்டு நிற்பதுவும் எமக்கான மிகப்பெரும் சோதனையாகும்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

0 Comments