Subscribe Us

header ads

கௌரவ நகர பிதா M.S.M.Rafeek அவர்களின் கண்டன அறிக்கை

 


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் இல்லம் மற்றும் காரியாலயம் தாக்கி தீக்கிரையாக்கப்பட்டமை மனிதாபிமானமற்ற செயலாகும்.

மக்களின் அறவழிப் போராட்டங்களை ஒடுக்க முனைவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது அரச ஆதரவாளர்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமானது மிகவும் கண்டிக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றவேளை வாழ்க்கைச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் திண்டாடும் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அறவழிப் போராட்டங்களை நடாத்தும்போது அதற்கெதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கியொடுக்க முற்படுவதானது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்து பாரிய விளைவுகளையே ஏற்படுத்தும்.

நேற்றைய சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.

எமது நகருக்குள்ளேயே எமது பாராளுமன்ற உறுப்பினரின் சொத்துக்கள் எரியூட்டப்பட்டமையானது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான செயலாகும்.

பொறுப்பு மிக்க நகரசபையாக நாம் பொது மக்களுடன் இணைந்து மிகுந்த பிரயத்தனத்துடன் செயற்பட்டு தீயை அணைத்ததுடன் ஏனைய பகுதிகளுக்கும் பரவ விடாது தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இறைவா பாராளுமன்ற உறுப்பினருக்கும், அவரின் உறவுகளுக்கும் நன்மையை நாடுவாயாக இழந்ததை விட சிறந்ததை அவர்களுக்கு வழங்குவாயாக..!

Post a Comment

0 Comments