கிளர்ச்சி அல்லது ஆயுதப் போராட்டத்தின் பேரில் ஜே.வி.பி தென்னிலங்கையில் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை போன்று புலிகளாலும் கடந்த காலங்களில் சேதங்களும் பாதிப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்…
அதற்கப்பால் அரச தலைவர் ஒருவருக்கு எதிராக இந்நாட்டின் சிவிலியன்களான எந்த தமிழரோ, முஸ்லிமோ என்றாவது அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனரா?
அவர்கள் பொது சொத்துக்களான பஸ்களை எரித்துள்ளார்களா ? பொலிஸாரை அடித்துள்ளார்களா ? கற்களை வீசி பொது சொத்துக்களை சேதம் பண்ணியிருக்கிறார்களா ?
ஆனால் காலாகாலமாக தமிழர்கள் மீது கலவரம் கட்டவிழ்ப்பு , அவர்களின் உடைமைகள் பகிரங்கமாகவே எரிக்கப்பட்டன, நாய்களை போன்று தமிழர்களை கொன்றார்கள் ,அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கும் அதே நிலைதான்... நேற்றைய சம்பவங்கள் கூட 83 ஆம் ஆண்டு கலவர நிகழ்வுகளை நினைவூட்டின.
2 பஸ்கள் , ட்ரக் ஒன்று , 2 ஜீப் வண்டிகள் , 4 மோட்டார் சைக்கிள்கள் நேற்று அழிக்கப்பட்டன . அவை எரிவதை பார்த்து எந்த தமிழ் ,முஸ்லிம் குடிமகனோ நிச்சயம் உள்ளத்தில் மகிழ்ந்திருக்கமாட்டான்..
ஆனால் நாடாளுமன்றம் முன்னால் அமைதி சத்தியாக்கிரக போராட்டம் செய்த தமிழ்த் தலைவர்களை அடித்துத் தூக்கியது முதல் ,தமிழ் பேசும் மக்களின் உயிர் உடமைகளை எரித்ததுவரை அரசியல் பின்புலத்துடன் இதுநாள்வரை தமிழர்விரோத நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இனியும் அரங்கேறும்...
இப்போதும் நாட்டின் நெருக்கடியை தாங்கிக் கொண்டு , கிளர்ச்சிகளில் ஈடுபடாமல் அமைதி காக்கின்றனர் இந்த மக்கள்... சிங்கள அரசியல்வாதிகளின் பாஷையில் கூறுவதானால் சிறுபான்மையின மக்கள்...
சிறுபான்மையின மக்கள், தம் மனதில் பெரும்பான்மை வீத தேசப்பற்று கொண்டவர்களே.. அடிக்க அடிக்க வளைந்து, அனைத்தும் தாங்கி ஓர்மத்துடன் உயிர்வாழும் அவர்களை இனியாவது சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா ? தமிழ் அரசியல்வாதிகளும் ,புத்திஜீவிகளும் இதனை அவர்களுக்கு சுட்டிக்காட்ட முயலுங்கள்..
அதேசமயம் சிங்கள மக்கள் , சிங்கள அரசியல்வாதிகள் ,சிங்கள புத்திஜீவிகள் உடனடியாக தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய தேவையும் நேரமும் வந்திருக்கிறது.
பசியும் பட்டினியும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இன்று வீதியில் இறங்கியுள்ள சிங்கள மக்களுக்கு ஆதரவாக பிக்குமார் சத்தியாக்கிரக போராட்டங்களை நடத்தவில்லையே ?3 ஆம் திகதி மக்கள் வீதிக்கு இறங்குவதற்கு ஆதரவில்லையென தேசப்பற்றாளர்களான விமல் ,கம்மன்பில கூறுவது ஏன்? இனவாத அரசியலால் சிக்கி சீரழிந்துள்ள சிங்கள சமூகம் இதனை புரிந்துகொள்ளும் காலம் உருவாகியிருக்கிறது.
தமிழ் ,முஸ்லிம் மக்களை இன்னும் அடியுங்கள்.அவர்கள் அதற்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் சிங்கள மக்களை ஏமாற்றும் வேலைகள் இனியும் எடுபடாது.அண்மைய சம்பவங்கள் அதனையே சுட்டிநிற்கின்றன.
நேற்றைய போராட்டங்கள் நேற்றுடன் முடிந்ததாக எனது சிற்றறிவுக்குப் படவில்லை....
-Siva Ramasamy-
0 Comments