தீவிரமடைந்திருக்கும் உக்ரைன் - ரஷ்யப் போரால் அந்த இருநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படப் போவதில்லை; ஒட்டுமொத்த உலக நாடுகளுமே பல்வேறு விதத்தில் பலவாறாக பாதிப்படைய இருக்கின்றன.
உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக போர்ப் பதற்றம் புகைந்துகொண்டிருந்த நிலையில், தற்போது முழுப் போராகவே வெடித்துக் கிளம்பியிருக்கிறது. உக்ரைன் வான்வெளியில் புற்றீசல் போல ரஷ்யப் போர் விமானங்கள் பறந்துவருகின்றன. தலைநகர் கீவை நோக்கி தரைப்படை ஊடுருவிக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் தெற்கே கிரீமிய தீபகற்பத்திலிருந்தும், வடக்கே பெலாரஸிலிருந்தும், கிழக்கே டான்பாஸ் தன்னாட்சிப் பகுதியிலிருந்தும் ரஷ்யப் படைகள் மும்முனைத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளுடன் நிறுத்திக்கொள்ள, தனித்து விடப்பட்ட உக்ரைன் துணிச்சலுடன் போரிட்டு வருகிறது.
தீவிரமடைந்திருக்கும் உக்ரைன் - ரஷ்யப் போரால் அந்த இருநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படப் போவதில்லை; ஒட்டுமொத்த உலக நாடுகளுமே பல்வேறு விதத்தில் பலவாறாக பாதிப்படைய இருக்கின்றன. குறிப்பாக, உலக நாடுகளின் சாமான்ய மக்கள் இதன்மூலம் எந்தெந்த விதத்தில் பாதிப்படைவார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம்..!
பொருளாதாரத் தடை:
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்திருப்பதால் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்திருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. இதனால் ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், ரஷ்யாவை வர்த்தக ரீதியில் சார்ந்து வாழும் நாடுகளையும் கடுமையானபாதிப்புக்குள்ளாக்கும்.
பெட்ரோல், இயற்கை எரிவாயு விலையேற்றம்:
போர் தொடங்கியதும் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக, 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1 பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியிருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் நிலை நிலவுகிறது. சர்வதேசச் சந்தையில் மூலப்பொருளான கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவருவதால், அனைதது உலக நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், சாமான்ய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், பிற அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மிகக்கடுமையாக பாதிப்படையும்:
ஐரோப்பிய நாடுகளின் 40% பெட்ரோலியத்தேவையை ரஷ்யா மட்டுமே பூர்த்தி செய்துவருகிறது. இப்போது, அந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருப்பதால், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு `நார்டு ஸ்ட்ரீம்-2' எரிவாயுக் குழாய்கள் மூலம் பால்டிக் கடற்பகுதி வழியாக பெட்ரோலியம் கொண்டுசெல்லும் சேவை நிறுத்தப்படும். உலக அளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ரஷ்யாவின் பெட்ரோலியச் சேவை தடைபடுவதால், அவற்றை சார்ந்து வாழும் நாடுகள் கடுமையான பெட்ரோலியத் தட்டுப்பாட்டில் தத்தளிக்கும். இதுமட்டுமல்லாமல், உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜி.டி.பி-யிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெல்லேடியம் விலை உயர்வு:
பெல்லேடியம் என்பது ஸ்மார்ட் போன்கள், அதிதொழில்நுட்ப வாகனங்கள் மற்றும் தானியங்கி மென்பொருள் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகை உலோகம். இந்த உலோகத்தை ரஷ்யாதான் மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்துவருகிறது. தற்போது, ஏற்பட்டிருக்கும் போரால் பெல்லேடியத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது. மேலும், ரஷ்யாவின் ஏற்றுமதி தடைபடும்போது இன்னும் அதிகமாக விலை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை உயர்வு:
போரின் தாக்கத்தால் தங்கத்தின் விலையும் தற்போது உயர்ந்திருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,949 டாலரைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,240 ரூபாய் அளவுக்கு உயர்ந்து 38,992 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
பங்குச் சந்தை சரிவு:
எல்லாவற்றுக்கும் பிரதானமாக சர்வதேச பங்குச்சந்தை குறியீடுகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இந்தியா மற்றும் சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்றத் தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் நட்டம் ஏற்பட்டிருக்கிறது.
கோதுமை, சோளம் விலை உயர்வு:
ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன. உலகளாவிய கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்திலும், உக்ரைன் நான்காவது இடத்திலும் இருக்கின்றன. உலக நாடுகளின் கோதுமைத் தேவையில் 29% இந்த இருநாடுகள்தான் பூர்த்தி செய்கின்றன. இப்போது நடந்துகொண்டிருக்கும் போரின் விளைவால், கோதுமை விலை பன்மடங்கு அதிகரிப்பதோடு, கோதுமையை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இதர உணவுப்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். அதேபோல, சோளம் ஏற்றுமதியிலும் இந்த நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் வருவதால் அதன் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
மாணவர்களின் கல்வி பாதிப்பு:
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் உயர்கல்விக்காக உக்ரைனில் தங்கி படித்து வருகின்றனர். போர்ச் சூழலால் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும், தாயகம் திரும்பிய மாணவர்களும் உயர்ப் படிப்பை தொடரமுடியாமல், அடுத்து என்னசெய்வது எனத் தெரியாமல் தடுமாறிவருகின்றனர்.
இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் ஒரு போரின் விளைவே, பல நாடுகளின் பொருளாதார, வாழ்வாதார சமநிலையில் இப்படியான ஒரு கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளும் இந்தப்போரில் இணைந்து மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்தால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் நிலையும் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு பாதிப்பை எதிர்கொள்ளும்!
-vikatan-
0 Comments