நான் யாழ்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளம் வரும் போது எனக்கு வயது 3. அதன் பின்னர் கல்வியை முடித்துக் கொண்டு புத்தளத்தில் சிறிது காலம் வேலை செய்துவிட்டு 2011ம் ஆண்டு தொடக்கம் யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் வேலை செய்து வந்தேன். ஏனைய பகுதிகளைப் போல இலகு இல்லை வடக்கில் வேலை செய்வது. காரணம் அங்கு இராணுவத்தின் கெடுபிடி அதிகம். எழுதிக் கதைப்பதைப் போல இல்லை அதை அனுபவித்தால்த்தான் அதன் உண்மை நிலை புரியும்.
இராணுவ மயமாக்களின் போக்கினை சாதாரண மக்களால் கண்டு பிடிப்பது மிகக் கடினம். எல்லைக் காவலர்கள் ஊர்க்காவலர்களாவது நல்லது இல்லை. மக்களது அன்றாட வாழ்வில் இராணுவம் தலையீடு செய்வது என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அகல பாதாளத்திற்கே இட்டுச் செல்லும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் புத்தளம் கடற்கரைக்கு எனது பாடசாலை நண்பர்களைச் சந்திப்பதற்காக மாலை நேரம் சென்றிருந்தேன். விடுமுறை என்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் நிறைந்திருந்தனர். குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் அதிகமாக வருகை தந்திருந்தனர். அப்போது புத்தளம் கொழும்பு பேஸ் (colombo face beach) ல் புதிதாக ஒரு மாதத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட கப்பல் இறங்கு துறைக்கு (jetty) கடற்படையினரின் படகு ஒன்று வந்திருந்தது ஒரு கடற்படை அதிகாரியை ஏற்றிச் செல்வதற்காக.
சன நெரிசலில் கப்பலில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பமட்டு அந்த கடற்படை உத்தியோகத்தர் கப்பலை அடைந்தார். பெண்களும் மிக சிரமப்பட்டு விலகி நின்றார்கள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கஸ்டமாக இருந்தது. ஏனென்றால் கரையோரத்தின் வேறு ஏதாதவது ஒரு பகுதியில் அந்த இறங்குதுறையை அமைத்திருக்கலாம். புத்தளத்தில் பொதுமக்களுக்காக குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான களியாட்ட இடமாக புத்தளம் கொழும்பு பேஸ் பீச் மற்றும் பூங்கா இரண்டும்தான் பிரதானமாகக் காணப்படுகின்றது.
அதிலும் கடற்கரைப்பகுதிதான் பிரதானமானதாக இருந்து வருகின்றது. அதையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி கடற்படைக்கும் பங்கு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் எமக்கான இடமாக இருக்காது. அபிவிருத்தி செய்யும் போது தூர நோக்கில்த்தான் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.
நான் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போதே எழுதி இருந்தேன் வெகு விரைவில் இலங்கையின் அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவம் தலையீடு செய்து இலங்கையை இராணுவம் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று. அதற்கு ஏற்றால் போல் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஞானசார தேரர் அவர்கள் "நாட்டை இராணுவத்திடம் ஒப்படையுங்கள்" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். எமது நாட்டின் ஜனாதிபதியாக தற்போது இருப்பவர் முன்னர் (Difence ministry secretary) பாதுகாப்பு அமைச்சு செயலாளராக இருந்தவர் என்பதையும் இங்கு நினைவூட்டுகின்றேன். அதனால் மிகவும் இலகுவாக இலங்கையை இராணு ஆட்சிக்குள் கொண்டு செல்கின்றார்.
இன்னும் சில காலங்களுக்கு பின்னர் இலங்கை நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலப்பகுதி இருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம் அரசு அதிகமான நிலப்பரப்பை வெளிநாடுகளுக்கு நஸ்டஈடாகவும் காசுக்காகவும் எழுதிக் கொடுத்துவிட்டனர். உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! அரசுதான் பொதுமக்களது செயற்பாடுகளுக்குள் முப்படைகளையும் உள் நுழைக்கின்றது என்றால் உங்களது சபைகளுக்குள் இருக்கும் பகுதிகளிலும் தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் முப்படைகளை உள்நுழைக்கின்றீர்கள்.
புத்தளம் நகரசபைத் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் புத்தளம் கொழும்பு பேஸ் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள இறங்கு துறையை பாவிக்கும் கடற்படையினரை பொதுமக்கள் அதிகமாக வந்து போகும் தினங்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அவர்களை அந்தப் பகுதிகளில் போக்குவரத்து செய்ய வேண்டாம் என ஒரு வேண்டுகோளை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இது இப்படியே தொடருமாயின் புத்தளத்தில் உள்ள ஆண்கள் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளை எதிர்காலத்தில் கடற்கரைக்கு அழைத்துச் செல்வதையே நிறுத்தி விடுவார்கள்.
-Bisliya Bhutto-
முன்னால் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்
சமூக ஆர்வலர்
0 Comments