உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 19 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள, மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம், நேற்றைய தினம் வெளியான த மோர்னிங் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய முதல் நேர்காணல் இதுவாகும். அதனை விடிவெள்ளி வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம்.
அதன் பிறகுதான் எனது வீட்டுக்கு வந்து என்னைக் கைது செய்தனர். நான் 2019 ஜூன் அல்லது ஜூலையில்தான் அப் பாடசாலையில் பணிபுரியத் தொடங்கினேன். நான் அந்த தங்குமிடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தேன். 2012 முதல் 2019 வரை, நான் பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய நிறுவனத்தில் படித்தேன், அங்கு நான் அரபு, இஸ்லாமிய ஆய்வுகள், இலக்கியம் மற்றும் சமூகவியல் பாடங்களைக் கற்றேன். நான் எனது உயர்தரத்தையும் அங்கேயே செய்தேன். நான் 2019 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பில் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்தேன், அதனை முடிப்பதற்காக இன்னும் காத்திருக்கிறேன். நான் பாடசாலையில் தரம் 9,10 மற்றும் சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் தமிழ் இலக்கியம் கற்பித்தேன்.
மறுநாள் காலை வரை இதைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். எனக்கும் பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினேன். தீவிரவாதிகளுக்கு எதிராக நான் எனது நூலில் எழுதியுள்ளவற்றைப் படிக்கும்படி கேட்டுக் கொண்டேன். தொடர்ந்தும் என்னிடம் நிறைய விசாரித்தார்கள். என்னிடம் கிறிஸ்தவ புத்தகங்கள், இந்து புத்தகங்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் இருப்பதாகவும் ஆனால் என்னிடம் பௌத்த சமயம் சார்ந்த புத்தகங்கள் இல்லை என்றும் சொன்னார்கள். இதற்கான காரணம் என்ன என்றும் கேட்டனர். நான் இரண்டு அல்லது மூன்று பௌத்த நூல்களைப் படித்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவை எனக்குச் சொந்தமானவையல்ல என்று கூறினேன். பௌத்த புத்தகங்கள் என்னிடம் இல்லாததால் நான் தீவிரவாதி என்று அதிகாரிகள் கூறினர்.
பின்னர் என்னை ஒரு வாகனத்தில் ஏற்றி எனது வீட்டின் அருகே அழைத்துச் சென்றனர். புத்தகத்தின் சுமார் 10 பிரதிகளை அயலவர்களிடம் இருந்து சேகரித்தோம். அப்போது இராணுவத்தில் இருந்து இரண்டு பேர் வந்தனர். அவர்கள் என்னை கடுமையாக நோக்கி, “நீ சஹ்ரானுடன் தொடர்புபட்டிருக்கிறாய். உன்னை கொழும்புக்கு அழைத்துச் சென்று நான்கு வருடங்கள் இருட்டு அறையில் அடைக்கப் போகிறோம். உனக்கு என்ன நடந்தது என்று கூட யாருக்கும் தெரிய வராது” எனக் கூறினார்கள்.
எனக்கு எதுவும் தெரியாது என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது. என்னை பயமுறுத்துவதற்காக இரண்டு மொழிகளிலும் கதைத்தார்கள். நான் சஹ்ரானின் வகுப்பிற்குச் சென்றதாகவும் ஏன் அங்கு சென்றேன் என்றும் ஏன் நவரசம் புத்தகத்தை எழுதினேன் என்றும் கேட்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது எனக்கென சட்டத்தரணிகள் இருக்கவில்லை.
இது சஹ்ரானுடன் தொடர்புடையது என்றும், அவனது குண்டுத்தாக்குதல்கள் நல்ல விடயங்கள் என்றும் மாணவர்களுக்கு நான் கற்பித்ததாக கூறினார்கள். நான் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும், நான் பயங்கரவாதத்திற்கு எதிரானவன் என்றும், எனது எழுத்துக்கள் அனைத்தும் அதற்கு எதிரானது என்றும் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன். இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அவர்கள் என்னை கைவிலங்கிட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தினார்கள்.
இந்த நேரத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள். என்னை 15 அல்லது 20 ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என்று மிரட்டினார்கள். அப்போது, எனக்கு திருமணம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. நான் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணையும் கைது செய்வோம் எனக் கூறி என்னை மிரட்டினர். இவ்வாறுதான் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் கேட்டு மிரட்டினார்கள்.
14 நாட்களுக்குப் பிறகு, நான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு மூன்று மாதங்கள் கைவிலங்கிடப்பட்டு வைக்கப்பட்டேன். அந்த மூன்று மாதங்களில், அவர்கள் விரும்பும் போதெல்லாம், சில நேரங்களில் நள்ளிரவில் கூட என்னை விசாரிப்பார்கள், சில சமயங்களில் அவர்கள் என்னை விசாரிப்பதற்காக கட்டாயப்படுத்தி தூக்கத்திலிருந்து எழுப்புவார்கள். நான் தூங்கும் போது கூட, என் கை ஒரு மேசையின் காலுடன் சேர்த்து இணைத்து விலங்கிடப்பட்டிருக்கும். இவ்வாறு மொத்தம் சுமார் ஐந்து மாதங்கள நான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்தேன்.
நான் காலையிலும் மாலையிலுமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டேன். அந்த 14 நாட்களில், கைகளை பின்னால் கட்டியபடி மண்டியிட வைத்தார்கள். மேலும் நான் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது அல் கைதாவுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஒப்புக்கொள்ளும்படி கடுமையான வார்த்தைகளால் மிரட்டினார்கள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் ஏனையவர்களை அடிப்பார்கள். “நாங்கள் சொல்வதைச் செய்வாயா அல்லது இப்படி அடி வாங்கப் போகிறாயா?” என்று கேட்பார்கள்.
பின்னர் ஜமாத்தே இஸ்லாமி மாணவர் இயக்கத்திற்கு எதிரான ஆதாரங்களை தருமாறு என்று கேட்டனர். எனக்கு அவர்களுடன் தொடர்பில்லை, நான் அந்த அமைப்பின் உறுப்பினரும் இல்லை என்றேன். இறுதியாக, ஜாமிஆ நளீமியா நிறுவனம் எனக்கு தீவிரவாத சிந்தனைகளை கற்பித்ததாகவும், நான் அதனை மாணவர்களுக்கு போதித்ததாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னை வற்புறுத்தினர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த மாதங்களில், அவர்கள் என்னை என் குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேச அனுமதிப்பார்கள். நாம் பேசிக் கொள்வது வெளியில் கேட்கும் வகையில் தொலைபேசியை செயற்படுத்துவார்கள். இந்த சமயத்தில் என்னைச் சூழ மூன்று அல்லது நான்கு அதிகாரிகள் நிற்பார்கள். அவர்கள் நான் பேசுவதையெல்லாம் கேட்டு, குறிப்பெடுத்துக் கொள்வார்கள். வழக்கு தொடர்பான எதையும் பேச அனுமதிக்கமாட்டார்கள். நான் நலமாக இருக்கிறேன் என்று மட்டுமே கூற அனுமதிக்கப்பட்டேன். நான் வழக்கு சம்பந்தமாக ஏதாவது பேச ஆரம்பித்தால், அவர்கள் தொடர்பை துண்டித்துவிடுவார்கள்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் ஆறாவது மாடியில் 100 நாட்களும், அதற்குப் பிறகு இரண்டாவது மாடியில் 40 நாட்களும் கழித்தேன். நான் இப் பிரிவில் மாத்திரம் மொத்தம் ஐந்து மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள் இருந்தேன்.
ஏனென்றால் நான் தமிழில் கூறுவதை, மொழிபெயர்ப்பாளர் சிங்கள மொழி பேசும் அதிகாரிக்கு சிங்களத்தில் கூறுவார், பின்னர் அந்த அதிகாரி பதிவு செய்யும் அதிகாரி தமிழில் என்ன எழுத வேண்டும் என சிங்களத்தில் கட்டளையிடுவார். ஜாமிஆ நளீமியா கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் போது எனக்கு தீவிரவாத சிந்தனைகள் வந்ததாகவும், அதனை மாணவர்களுக்கு நான் கற்பித்ததாகவும் வாக்குமூலத்தில் எழுதப்பட்டிருந்தது. வாக்குமூலத்தைப் படிக்க நான் அனுமதிக்கப்படவில்லை, அதில் கையெழுத்திடச் சொன்னபோது, நான் கையெழுத்திடாவிட்டால் 20 ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப மாட்டோம் என்று மிரட்டினர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, நான் வீட்டிற்குச் செல்ல வேண்டுமானால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) சி.பி. ரத்நாயக்கவிடம் வாக்குமூலம் அளிக்குமாறும், நீதிபதி ஒருவருக்கு முன் வாக்குமூலம் அளிக்குமாறும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு, எனது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்புகளை எடுக்க விடாமல் தடுத்ததுடன், என்னை அதிகம் திட்டவும் ஆரம்பித்தனர். அவர்கள் என் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாங்கள் சொல்வது போன்று நடந்து கொள்ளுமாறு என்னிடம் கூறுமாறும் இன்றேல் என்னை 20 வருடங்கள் சிறைக்கு அனுப்புவோம் என்று கூறினார்கள். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரே தந்தையிடம் இவ்வாறு கூறியிருந்தார்.
சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் என்னை ஏஎஸ்பியிடம் அழைத்துச் சென்றனர். நான் அங்கு அழைத்துச் செல்லப்படுவதை அறிந்திருக்கவில்லை. – எனது கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் கால்நடைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்டோம். – எங்களுக்கு அங்கு எந்த உரிமையும் அங்கு வழங்கப்படவில்லை. அங்கு ஏஎஸ்பி ரத்நாயக்க, “மகன், உனக்கு எங்கிருந்து தீவிரவாத சிந்தனைகள் வந்தன, அவற்றை மாணவர்களுக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தாய்?” எனக் கேட்டார். எனக்கு யாரும் தீவிரவாதக் கருத்துக்களைக் கற்பிக்கவில்லை என்றும், நான் யாருக்கும் தீவிரவாதத்தைக் கற்பிக்கவில்லை என்றும் தமிழில் பதிலளித்தேன். என் உம்மாவையும் வாப்பாவையும் நேசிப்பது குற்றம் என்றால், நான் அதைச் செய்தேன் என்று, என் மீது வழக்குத் தொடுத்து என்னைக் கொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதன்பின், நீதிபதி முன் வாக்குமூலம் அளிக்கும்படி என்னை வற்புறுத்த முயன்றனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் எனக்கு சரியாக உணவு வழங்கவில்லை, அவர்கள் என்னை வீட்டாருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. அவர்கள் மற்ற கைதிகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிப்பார்கள், நான் ஒப்புக்கொண்டால் மட்டுமே எனக்கு தொலைபேசி அழைப்பெடுக்க அனுமதிக்கப்படும் என்று கூறுவார்கள். ஒப்புக்கொள்ளாவிட்டால் 15 அல்லது 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பார்கள். அவை சிறைக் கூண்டுகளில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தன. தேவையான மருந்துப் பொருட்கள் தரப்படவில்லை.
அதன் பின்னர் அவர்கள் என்னை இரண்டு மாதங்களுக்கு தங்காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்தனர். பின்னர் என்னை மீண்டும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் ஆறாவது மாடிக்கு மாற்றினர். பின்னர் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு விளக்கமறியல் சிறையில் அடைத்தனர். காவலர்கள் என்னைப் பார்த்து உரக்க கத்துவார்கள், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று திட்டுவார்கள். எங்களால் அங்கு குளிக்க முடியவில்லை, சரியான உணவு இல்லை. ஒரு அறையில் அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மட்டுமே இருக்க முடியும், ஆனால் ஒரு அறையில் சுமார் 50 பேர் இருந்தனர்.
-Vidivelli
0 Comments