Subscribe Us

header ads

கற்பிட்டி இப்பன்தீவில் 1,210 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

 


கற்பிட்டி இப்பன்தீவு பகுதியில் இருந்து 1,210 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 மற்றும் 39 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த பகுதியில் நேற்று (05) மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திரங்களை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 503 கிலோ கிராம நிறையுடைய 12 மூடைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் குறித்த டிங்கி இயந்திரப் படகில் காணப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, 503 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் மேலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்படையினர், கைவிடப்பட்ட நிலையில் கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மற்றுமொரு டிங்கி இயந்திரப் படகு ஒன்றினை கடற்படையினர் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதில் 17 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 707 கிலோ கிராம் நிறையுடைய உலர்;ந்த மஞ்சளையும், டிங்கி படகினையும் கடற்படையினர் மீட்டனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள், உள்ளுர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் குறித்த மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், 503 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளும், சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர்; தெரிவித்தனர்.

அத்துடன், கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 707 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி இயந்திரப் படகு என்பன தொடர்ந்தும் கடற்படையினரின் பொறுப்பில் உள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நேற்று வரையிலான காலப்பகுதியில் 5980 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பன்னிரென்டு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

Post a Comment

0 Comments