Subscribe Us

header ads

(ஒரு நாடு ஒரு சட்டம்) மக்கள் பாரிய விளைவுகளுக்கு முகங்கொடுக்கும் நிலையுருவாகும் - அமைச்சர் சாணக்கியன்


புதிதாக ஒரு செயலணியை உருவாக்கி, அதற்கு இலங்கை நாட்டிலிருக்கும் சட்டத்தை மதிக்காத ஒருவரை நியமித்தமையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்றைய தினம் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rajapaksa) இன்று காலை புதிய ஒரு ஜனாதிபதி செயலணி ஒன்றை அறிவித்திருக்கிறார். அந்த செயலணிக்கு தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை(Galagoda Aththe Ganasara) நியமித்திருக்கிறார்.

உண்மையிலே இந்த நாட்டிலே தற்பொழுது இருக்கும் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற என்பதை அமுல்படுத்துவதற்காக இந்த செயலணியை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. உண்மையிலே இந்த நாட்டிலே இருக்கின்ற சட்டத்தை அமுல் படுத்தினால் போதும் என்பதை நாங்கள் சொல்லி வருகிறோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்பதிலே நாங்கள் சொன்ன விடயம் இருக்கின்ற சட்டத்தை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்துங்கள் என்பதேயாகும்.

   ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்படுகிறவர்களுக்கு ஒரு சட்டமும் தமிழ் மக்களுக்கு கிழக்கிலேயும் வடக்கிலேயும் இன்னொரு சட்டம் என்று இல்லாமல் ஒரு சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்பதையே தான் நாங்கள் கூறியிருந்தோம்.

ஆனால் அதை விடுத்து புதிதாக ஒரு செயலணியை உருவாக்கி, அதற்கு இலங்கை நாட்டிலிருக்கும் சட்டத்தை மதிக்காத ஒருவரை நியமித்தமையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

எதிர்காலத்தில் இதன் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பாரிய விளைவுகளுக்கு முகங்கொடுக்கும் நிலையுருவாகும். இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடிவருகின்ற நிலை காணப்படுகின்றது.

இன்னும் இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் பசியினால் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்படும். இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்களைத் திசைதிருப்புவதற்காகப் போலியான விடயங்களைச் செய்யாமல்,நாட்டு மக்களின் நலனுக்காகச் செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments