அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் பகிர்ந்து அளிப்பதற்காக மாத்திரம் அவசர கால சட்ட ஒழுங்கு விதிகள் வரையறுக்கப்பட்டு இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற அவசர கால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இதன் இறுதி பயனை நாட்டின் அப்பாவி மக்கள் பெற்றுக் கொள்வார்கள். மக்கள் பயன் அடைவதற்கு எதிர்க்கட்சிகள் எதிராக இருப்பது ஏன் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
தற்போதுள்ள தொற்று நிலைமையை தேசிய பிரச்சினையாக கருதி அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர உரையாற்றும் போது மக்களின் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் இந்த ஒழுங்கு விதிகளை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டினார். இதனை ராணுவ மயமாக்கலாக எடுத்துக் காட்டுவதற்கு எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மக்களின் வாழ்வதற்கான உரிமைக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தற்போதைய எதிர்க்கட்சி எதிர்க்கின்றது என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
யுத்தமொன்று இடம்பெறும்போது அல்லது வன்முறைச் சம்பவங்களின்போது அல்லது கட்டுப்படுத்த முடியாத பிரச்சினைகளின் போதே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அவசரகால சட்டம் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஆனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையான பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இயலாமையே இதன் ஊடாக தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
0 Comments