நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் 14 வயது சிறுமியை 2 வருடங்களாக கோழிக்கூட்டில்கட்டி சித்திரவதை செய்த மாமியாரை ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக நீதவான் எம்.எம்.இக்பால் கட்டளையிட்டுள்ளார்.
நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் வசிக்கும் சிறுமியின் மாமியாரான 29 வயதான கிருஷ்ணசாமி நிசன்சாலா என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிறுமியின் தந்தையான கிருஷ்ணசாமி ஜூலியட் தேவானந்தாவை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
சிறுமியை கண்டுபிடித்த போது அவர் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். மேலும் சிறுமியை பாடசாலைக்குக் கூட அனுப்பவில்லை என்றும் தெரிவித்தனர்.
உணவு வழங்கப்படாததால் அருகிலுள்ள வீடுகளில் இருந்து சிறுமி உணவைத் திருடியுள்ளார் என்றும் இதன் காரணத்தாலேயே மாமியார் அவரை தாக்கியுள்ளார் என்றும் நீதிமன்றில் தெரிவித்த பொலிஸார், சிறுமியின் உடலில் பல தீங்காயங்கள் காணப்படுவதாகவும் தலை உட்பட சில இடங்களில் காயங்கள் உள்ளன என்றும் தெரிவித்தனர்.
சிறுமிக்கு முறையான உணவு கூட வழங்கப்படவில்லை என்றும், அவருக்கு கடுமையான குடற்புண் நோய் ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தற்போது புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments