கொவிட் 19 நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் வெள்ள அனர்த்தங்களும் அதிகரித்துள்ளன.
மக்கள் உடனடியாகவே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டாலும் நோய்த்தொற்று அச்சுறுத்தல் பாரிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழு அளவில் முடக்கப்பட்டுள்ளதால் இடம் பெயர்வதில் போக்கு வரத்து பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அதேபோன்று கடந்த காலங்களில் பல இஸ்லாமிய அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த நிவாரணப் பணிகள் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், கொவிட் 19 பரவலுடன் ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகளில் ஈடுபடுவதற்கான ஆளணிகள் பற்றாக்குறை, ஒன்றுகூட முடியாத நிலை என்பவற்றால் நிலைமைகள் மேலும் கவலைக்கிடமாகியுள்ளன.
வழமை போன்று இம்முறை நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் சென்று தங்குவதில் உள்ள சுகாதார நடைமுறைகள் பாதிக்கப்பட்டவர்களின் நிர்க்கதி நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
என்றாலும் அவ்வப் பிரதேசங்களிலுள்ள மஸ்ஜித் முகாமைத்துவங்கள் மேற்கோள்கின்ற பணிகளுக்கு தம்மாலியன்ற அனைத்து பங்களிப்புகளையும் உள்நாட்டிலும் பிறநாடுகளிலும் உள்ளவர்கள் வழங்க முன்வருதல் வேண்டும்.
மழை சற்று குறைந்த பொழுதும் பிரதான ஆற்றுப்படுக்கைகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளநீர் மட்டம் உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் தமது வாகனங்களை முச்சக்கர வண்டிகளை மற்றும் இலத்திரனியல் சாதனங்களையும் வீட்டு தளவாடங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான அவகாசம் போதாமையால் அல்லலுறுகின்றனர்.
வெள்ள நீரில் மூழ்கியுள்ள பிரதேச மக்களுக்கு உலருணவு பொருட்களை வழங்குவதனை விடவும் சமைத்த உணவுகளை, தேவையான மருந்து வகைகளை, சிறுவர் குழந்தைகளுக்கான பால்மா, மாதருக்கான சுகாதார துவாய்களை உடனடியாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீர்மட்டம் உயரும் நிலையிலும் பல இடங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் மின்சார வினியோகம் தடைப்பட்டும் துண்டிக்கப்பட்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுவதால் மெழுகுவர்திகள் மற்றும் விளக்குகள் தற்காலிக மின்வலுவூட்டிகள் போன்றவை தேவைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வனர்த்த நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளப் படும் முயற்சிகளுக்கும் அழைப்புகளுக்கு வேண்டுகோல்களுக்கு காத்திருக்காது உடனடியாகவே சுயேற்சையாக எமது பங்களிப்புகளை வழங்க நாம் முன் வர வேண்டும்!
எல்லாம் வல்ல இறைவன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமான விமோசனத்தை வளங்குவானாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உடுபட்டுள்ளோருக்கும் பங்களிப்புகளை செய்வோருக்கும் நிறைவான கூலியை வழங்குவானாக!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

05.06.2021
0 Comments