ஒரு நோயின்போது டாக்ட்டரிடம் போவது சில வருடங்களுக்குள் எப்படி மாறிப்போயிருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறேன்.
முன்னரெல்லாம் ஏரியாவுக்கு ஒரு டாக்ட்டர் இருப்பார். அந்த டாக்ட்டர் தான் அங்கு கடவுள். ஒரு சிறிய அறை, ஒரு பதினாறு வயது பார்மஸிஸ்ட், டாக்ட்டர் நம்மை பார்த்து விட்டு பார்மஸிஸ்ட்டிடம் முணுமுணுப்பார் பார்மஸிஸ்ட் சிறிய ஜன்னலூடாக மருந்தை நீட்டுவார். கற்பனையில், அந்த ஜன்னலுக்குப்பின்னால் உலகின் அத்தனை நோய்களுக்குமான மருந்துகள் இருப்பது போலத்தோன்றும். அவர் ஆயுர்வேதமா, யூனானியா, இலங்கையா, வெளிநாடா எந்த பேதமும் அப்போது இருக்கவில்லை. அக்கரைப்பற்றில் அந்நாட்களில் அருணகுலசிங்கம் என்றொரு டாக்ட்டர். பேச்சுவழக்கில் அன்னோசிங்கமாகிப்போய் தீவிர தமிழ் முஸ்லிம் பிரச்சனைகளின்போது கூட முஸ்லீம்களுக்கும் அவர்தான் வைத்திய தெய்வம்.
மாளிகாவத்தையில் அமல்தீன் டாக்ட்டர். ஒருவிதத்தில் சொந்தக்காரர். 'அமல்ட மருந்து மாதிரி வேறெந்த மருந்தும் எனக்கு கேக்குறல்ல' என்று உம்மா அடிக்கடி சொல்வதுண்டு. அவரும் மருந்துக்கு காசு வாங்குவதில்லை. பார்மஸிஸ்ட்டுக்கு ஒரு சைகை செய்வார். அவ்வளவு தான். எங்களுக்கு இவலச மருத்துவம். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை தெரியும் என்பதை விடவும், ஒரு வைத்தியசாலையில் டாக்ட்டரை தெரியும் என்பதற்கு மதிப்பு அதிகம். அதன்பிறகு தெமட்டகொட வீதியில் ரம்ஸீன் டொக்ட்டர். டொபிக்களை ஒரு குவளையில் வைத்திருப்பார். சிறியவர்கள் போனால் டொபி கொடுப்பார். அதற்காகவே ரம்ஸீன் டொக்ட்டரிடம் போவோம் என்று அடம்பிடித்த நாட்களும் உண்டு.
இப்போதெல்லாம் வைத்தியம் தூரமாகிவிட்டது. என்ன பிரச்சனை என்று அதற்கு யார் நிபுணர் என்கிற கலாசாரம் ஆகிவிட்டது. தோலில் சிரங்கு என்றால் டாக்ட்டரிடம் போய் அவர் தந்த க்ரீமை நம்பி பூசிய காலம் போய், யார் சிறந்த டேர்மாட்டாலஜிஸ்ட் என்று தேடும் காலம் வந்துவிட்டது. அப்பாயின்மன்ட் என்று கொள்ளையில் டாக்ட்டருக்கு பேஷன்ட்டின் எந்தவித ஹிஸ்ட்டரியும் தெரியாமல் வைத்தியம் பார்க்கும் நிலைக்கு மாறியாயிற்று. இந்த சேர்ஜன் கலாசாரம் இல்லாத நோய்களையும் இருப்பதாய் நம்பவைத்து விடுகிறது. நம் தெருவில் Dispensary and Surgery நடாத்திக்கொண்டிருந்த ஒரு ஆயுர்வேத மருத்துவர் இருந்த காலத்தில் இருந்த ஆரோக்கியம், Echanneling செய்து சேர்ஜனை நேரடியாக சந்திக்கும் காலத்தில் இல்லாமல் போய்விட்டது.
-Rimaz Ahmed-
0 Comments