விமானம் ஒன்று தயாராக உள்ளது அவசரமாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற நற்செய்தியுடனா!!
வர வேண்டாம் கொரண்டைனில் இருக்க வேண்டும், PCR க்காக மூக்கினுல் குத்துவார்கள், கருவாடுதான் சாப்பாடு என்ற பயமுறுத்தல்களினால் டிக்கட் புக் செய்ய தடுமாறி பின்னர் வாரது வரட்டும் போறது போறதுதான் என்ற சத்தியப் பிரமாணத்திலிருந்தா!!!
தட்டுத் தடுமாறி ஸ்ரீலங்கனுக்கு சொந்தமான வயது முதிர்ந்த ஒரு கிழட்டு அலுமினியப் பறவையில் சவாரி செய்து கட்டுநாயக்கா வில் நூறு வீத ராணுவ ஒழுங்கமைப்புடன் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து, மஞ்சள் தெளித்து, வாகனங்களுக்கு மூச்சுவிட முடியாதளவு நெருக்கடி உள்ள அந்தி சாயும் நீர்கொழும்பு பிரதான வீதியில் 70km/h வேகத்தில் சைரன் பூட்டிய ஜீப்கள் முன்பின் செல்ல ராஜ மரியாதையோடு கிளிநொச்சியில் பிந்திய இரவொன்றில் கண்ணைக் கட்டி கொண்டு போய் விட்டதிலிருந்தா!!!
தேர்தல் கால unofficial ரிப்போர்டர்களைப் போல ஜகார்த்தா விமான நிலையத்தில் வைத்தே தம்புள்ளை தான் கொரன்டைன் சென்டர் என அரசல் புரசலாக செய்தி வெளியாகி இருந்தாலும் பஸ் நீர்கொழும்பு புத்தளம் வீதியால் புத்தளம் வழியாக அநுராதபுரம்செல்லும் போதே எமக்கான இரணம் இரனமடுவில் தான் என்பதை உறுதி செய்து கொள்ள முடிந்தது.
ஒரு சில நேரங்களில் இறைவன் பொறுமையை சோதித்தாலும் அநேகமாக திருப்தியாகவே சாப்பிட்டோம்.
அநேகர் பயம்காட்டியது போல் pcr ஒண்டும் மூக்கினுள் கிணறு தோண்டும் சமாச்சாரமல்ல.
அது ஒரு விதமான உணர்வு தான்.
வடிவேலு பாஷையில் சொல்வதென்றால் அப்பிடி ஒரு உருட்டு இப்பிடி ஒரு உருட்டு அம்புட்டுத்தே.
(அப்பறம் எதுக்குயா கண்ணு கலங்கிச்சி என்று இந்த பதிவை படிக்கும் என்னோடு இருந்த ஒருவர் பார்த்து சிரிக்கத்தான் போகிறார்.
)

மூன்றாம் உலக நாடுகளுக்கே உரித்தானதாய் சாகா வரம்பெற்று அதிலும் இலங்கையில் இன்னும் பல வருடங்களுக்கு நின்று பேசக்கூடிய இனவாத அரசியல் எங்கள் பல்லின மக்களைக் கொண்ட குழுவினருக்கு மத்தியில் செயலற்றுப் போனது.
இடைக்கிடையே வரும் பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் சம்பல் ப்ளஸ் கொத்தமல்லி தண்ணீர் என்பன நீ ஒரு இலங்கையன்தான் என்பதை நினைவூட்ட முகாம்களுக்கு மத்தியில் பொருத்தப்பட்டிருந்த ஒளி பெருக்கியில் மொகிடீன் பேக்கும் காலை, மாலை தவறாமல் தன் பங்குக்கு நீங்கள் இருப்பது லங்காபுரியில் தான் என்பதை நினைவூட்டிக் கொண்டிருந்தார்.
அந்திப்பட்டால் கிரிக்கெட் ஏனைய நேரங்களில் வெட்டிப் பேச்சு என பொழுது போவதே தெரிவதில்லை. சமயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட சில இரவுகள் பன்னிரெண்டு, ஒரு மணி வரை கதைகளில் நீண்டு விடுவதும் உண்டு.
வியாபாரிகளாக, பணியாளர்களாக, மிஷனரி மாணவர்களாக, ஐரோப்பிய நாடொன்றுக்கு பிழைப்பு தேடி செல்வதற்காக, தப்லீக் ஜமாத்தினராக என பாத்திரங்களை அங்கிருந்தவர்கள் ஏற்றிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் பாத்திரமேற்று நடிக்கும் இவ்வுலகமே ஒரு நாடக மேடை தானே!! நான் மட்டும் விதிவிலக்கா என்ன. பல்கலை மாணவன் என்ற ரோலை வலிந்து மாட்டிக் கொண்டேன்.
பல நாடுகளுக்கு சென்றவர்கள், வாழ்வின் பல கோணங்களையும் அலசியவர்கள், கனவுகள் சிதைந்து திரும்பியவர்கள், பிஸ்னஸ்ஸில் பழுத்த அனுபவம் உள்ளவர்கள் என கேட்பதற்கு பல்லாயிரம் கதைகள் உள்ளன.
அரசியல், நாட்டு நடப்புகள், ஊர் வழமைகள், பழக்க வழக்கங்கள் சடங்கு சம்பிரதாயங்கள் என பலவும் அலசுவோம்.
சொல்வதை விட கேட்பதில் பிரியமுள்ள எனக்கு ஒவ்வொறு நொடியும் ஒரு கதை சொல்லி சேவிப்பார். அங்கே ரணங்கள், ஆனந்தம், தவிப்பு, ஏக்கம், மகிழ்ச்சி என அத்துனையும் கொட்டிக் கிடக்கும்.
சுட்டெரிக்கும் வடமாகாண உஷ்ணம் சுற்றிவர உள்ள மரங்களின் தூய காற்றினால் சமன்படும்.
பணம் கட்டி ஹோட்டல்களில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் தங்கியவர்களுக்கு இந்த சௌகரியங்கள் வாய்க்கப் பெறுவதில்லை என அங்கலாய்ப்பதாக ஆங்காங்கு சிலர் பேசிக் கொள்வர்.
எது எப்படியோ இருப்பவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அனைவரும் எக்ஸ்ட்ராவாய் இரு வாரங்களுக்கு இருக்க வேண்டும் என்ற ஒரு விதி கிறங்கடிக்கத்தான் செய்யும். ( அப்படி 30 நாட்களுக்கு மேலாக தங்கியிருக்க வேண்டிய சில கசப்பான சம்பவங்களும் சில முகாம்களில் நடைபெற்றுள்ளது)
பதின்மூன்றாம் நாள் அதிகாலை பரிசோதனை செய்ய தாயாரான போது மத்சராவில் பரீட்சை முடிந்ததும் லீவு க்கு தயாராகும் நினைவுகள் மலர்ந்து சென்றன.
இறுதியாக அனைவரும் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு இலங்கையின் பல பாகங்களுக்குமாய் பலத்த பாதுகாப்புடன் தத்தம் ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறுதியாக:
வர இருப்பவர்களுக்கு;
Baggage allowance உடன் சேர்த்து கொஞ்சூண்டு மன உறுதியும், கால் கிலோ சூடு சொரனையும் கொண்டு வாருங்கள்.
இங்கே நெருங்கிப் பழகுபவர்கள், உயிருக்குயிரானவர்கள்கூட உங்களை விட்டு விரண்டோட வாய்ப்புள்ளது.
(அதிலும் நியாயம் உள்ளது)
எதுவும் சில காலம்
-Ilham Salih-
0 Comments