(எம்.மனோசித்ரா)
கொரோனா பரவலைக் காரணமாகக் கொண்டு வாக்காளரொருவர் வாக்களிப்பை புறக்கணிப்பாராயின் அது அவர் தன் முகத்தின் மீதுள்ள கோபத்தால் மூக்கை வெட்டிக் கொள்வதற்கு சமமாகும் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பு - 13 , ஜிந்துபிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளதோடு அங்கு வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அது பொதுத் தேர்தலை பாதிக்குமல்லவா என்று வினவிய போதே மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் என்று நாம் நம்பவில்லை. திட்டமிட்டுள்ள படி தேர்தல் நடைபெற வேண்டுமானால் பொது மக்கள் அனைவரும் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு கைகளை கழுவுதல் , சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதே சிறந்ததாகும்.
இவ்வாறாக நெருக்கடியான சூழலில் அச்சுறுத்தலான நிலைமையில் நாம் ஏன் சென்று வாக்களிக்க வேண்டும் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. நாட்டு மக்கள் யாவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத பெருமதியான உரிமை அவர்களது உயிராகும். அதே போன்று அதற்கு அடுத்தபடியாக முக்கியத்துவமுடையது வாக்குரிமையாகும்.
வறுமையிலிருப்பவர்கள் வசதியுடனிருப்பவர்கள் இனம், மதம், மொழி என்ற எவ்வித பேதமும் இன்றி மக்களுக்கு கிடைக்கப் பெறுவது வாக்குரிமை மாத்திரமேயாகும்.
எனவே அவ்வாறான வாக்குரிமையைப் புறக்கணிப்பதாவது தனது முகத்தின் மீதுள்ள கோபத்தில் முக்கை வெட்டிக் கொள்வதைப் போன்றதாகும்.
எனவே நாம் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் கோரிக்கை விடுக்கின்றோம். அனைவரையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஜனநாயகத்திற்கு பங்களிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
0 Comments