உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானின்
குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை
அவரது அம்பாறை அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து இன்று திங்கட்கிழமை (13)
அதிகாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் கொழும்பு
குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணையின் அடிப்படையில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ்
நிலையத்தில் கடமையாற்றிவந்தவரும் அம்பாறை பொலிஸ் தலைமையக வாகன கராச்
பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொலிஸ்
பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தில் அவரது வீட்டில் வைத்து
குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும்
மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும்
புலத்தினி உயிரிழந்துள்ளதாக மீட்கப்பட்ட சடலத்தில் மேற்கொண்ட டி.என்.ஏ.
மரபணு பரிசோதனையில் பொருந்தவில்லை என்ற நிலையில் அவர் தொடர்பாக விசாரணைகள்
மேற்கொண்டுவந்துள்ள நிலையில் அவரது சிறிய தந்தையார் நேற்று முன்தினம் கைது
செய்யப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments