ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுபவர்கள் அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு
விசாரணைக்கு அழைத்து, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என முன்னாள்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று
சாட்சியமளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி
செயலகம் அனுமதி மறுத்திருந்த இன்சாப் இப்ராஹிமின் ஏற்றுமதிப்
பொருட்களுக்கான அனுமதியை, தனது அமைச்சினூடாகப் பெறமுயன்ற அவரின் அத்தனை
முயற்சிகளையும் தான் முற்றாக நிராகரித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த
இன்சாப் இப்ராஹீம், தனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்
வகையில், சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் (Letter of demand)
அனுப்பியிருந்தார்.
இன்சாப் இப்ராஹிமின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான
அனுமதியை ஜனாதிபதி செயலகம் நிறுத்தியிருந்தது. இவ்வனுமதியை எனது
அமைச்சினூடாகப் பெறும் நோக்கில், எனது அமைச்சுக்கு வந்து, அதிகாரிகளுக்கு
அழுத்தம் கொடுத்திருந்தார்.
இவ்விடயம் கை கூடாததால், எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனைத் தொடர்புகொண்டு, தனது நிலைமைகளை விளக்கியுள்ளார்.
ஏற்றுமதிகள்
தடைப்பட்டதால் கம்பனியில் பணியாற்றுவோருக்கு சம்பளம் கூடக் கொடுக்க
முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பான அமைச்சரான உங்களது
சகோதரரிடம் பேசி, அனுமதியைப் பெற்றுத்தருமாறும் இன்சாப் இப்ராஹீம், எனது
சகோதரரான ரியாஜ் பதியுதீனைக் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் 2019 ஆம்
ஆண்டு ஆறு உள் தொலைபேசி அழைப்புக்களை, அவர் எனது சகோதரருக்கு
எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், எனது சகோதரர் ஒரு அழைப்பையாவது
இன்சாப் இப்ராஹிமுக்கு எடுக்கவில்லை.
வியாபாரத் தொடர்பில்
தெரிந்தவராகவும், எனது ஊரவர் ஒருவரின் நெருங்கிய உறவினருமாகவும் அறிமுகமான
இன்சாப் இப்ராஹிமின் வேண்டுகோள் தொடர்பில், எனது சகோதரர் என்னை
தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதி செயலகம் அனுமதி மறுத்த விடயத்தை,
என்னால் செய்ய முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன்.
இதுபற்றி
அறிந்த இன்சாப் இப்றாஹீம் ஆத்திரமடைந்தவராக, எனது சகோதரரிடம் தொலைபேசியில்
திட்டியதுடன் , கோரிக்கை கடிதம் (Letter of demand) அனுப்பவுள்ளதாகவும்
அவரிடம் தெரிவித்துள்ளார்.
இவர் குறிப்பிட்டது போல 2019.04.03 இல்
அக்கடிதம் (Letterof demand) எனது அமைச்சுக்கு வந்தது. அவருக்கு
வேண்டப்பட்டவராகவோ, விருப்பமுடையோராகவோ நாம் இருந்திருந்தால், எங்களை
ஏசியது மட்டுமன்றி, சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமும் (Letter of demand)
அனுப்பியிருக்கமாட்டார்.
இன்சாப் இப்ராஹிமுடன் தொலைபேசியில்
தொடர்புகொண்டதாக, 2020 ஏப்ரல்14 ஆம் திகதியன்று ஆறுபேர் கைது
செய்யப்பட்டனர். இவர்களில் இன்சாப் இப்ராஹிமுடன் 250தடவைகள் தொலைபேசியில்
உள், வெளி அழைப்புக்களால் தொடர்புற்றிருந்த ஒருவர், கைதான தினமே விடுதலை
செய்யப்பட்டார். மேலும், 600 தடவைகள் தொடர்புகொண்டவரும் சில நாட்களின்
பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால், வெறும் ஆறு உள் அழைப்புக்கள்
மாத்திரமே வந்திருந்த எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை மட்டும், இரண்டு
மாதங்களாகத் தடுத்து வைத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின்
வெளிப்பாடுகளே இவை.
அரசியலுக்காக எனது சகோதரர் போன்ற அப்பாவிகள்
பழிவாங்கப்படுவது பெரும் கவலையளிக்கிறது. இந்நாட்டில் நீதி, நேர்மை
நிலைக்கும் போது, உண்மை வெளிவந்து, சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கை
எனக்குள்ளது என்றும்கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சுமார்
ஏழு மணி நேரம், இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விசாரணை
செய்தது. இதன் போது, ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனது குடும்பத்திற்கும்
எவ்விதத் தொடர்புமில்லையென, அவர் தகுந்த ஆதாரங்களுடன் சாட்சிகளை
முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments