தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வனபர்தி(19). இவர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி வனபர்திக்கு ஒரு கை மற்றும் கால் இயங்கவில்லை என்று கூறி, அவரது தாய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு வனபர்தியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘மூளையில் செல்லும் ரத்தம் தடைபட்டதால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் தான் வனபர்தி வீடியோ கேமில் மூழ்கியிருந்ததை அவரது தாயார் தெரிவித்தார்.
அதன் பின்னர், இளைஞரின் முழு கவனமும் வீடியோ கேமில் இருந்ததால், முறையான உணவையோ, தண்ணீரையோ அவர் எடுத்துக்கொள்ளவில்லை. அத்துடன் தூக்கமும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இளைஞரின் தாயார் கூறுகையில், ‘இரவு 9 மணிக்கு பப்ஜி விளையாட்டை ஆடத் தொடங்கினால், அதிகாலை 4 மணிவரை விளையாடிக் கொண்டிருப்பான். காலையில் செய்தித்தாள் போடுகின்ற பகுதிநேர வேலை இருப்பதால் மட்டுமே, கேமை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிடுவான்.
கல்லூரியில் இருக்கும்போது கூட, நேரம் கிடைத்தால் Log on செய்து விளையாடத் தொடங்கிவிடுவான். எங்கள் கிராமத்தில் பொழுது சாய்ந்ததும் அனைவரும் உறங்கிவிடுவார்கள். ஆனால், வனபர்தி மட்டும் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பான்.
அவனுக்கு உணவு மீதான ஆர்வமும் முழுமையாக குறைந்துவிட்டது. விடுமுறை நாட்களில் எல்லாம் ஒருநாள் முழுவதும் வீடியோ கேம் ஆடிக் கொண்டிருப்பான்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வனபர்தி உறவினர்களும், அவர் தினமும் 7 முதல் 8 மணிநேரம் வரை கேம் விளையாடியதால், 4 கிலோ அளவுக்கு உடல் எடை குறைந்துவிட்டது என்று தெரிவித்தனர். குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments