டெல்லியில் உள்ள விசாகபுரியில், `ஒரு காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அவர்கள் மீது யாரோ ஆசிட் வீசிவிட்டார்கள். அதில் இளைஞரின் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் அதிக காயம் ஏற்பட்டுள்ளது. பெண்ணுக்குச் சிறிய அளவிலேயே காயம் உள்ளது’ என அப்பகுதி காவல் நிலையத்துக்கு யாரோ ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்கள் மீது யார் ஆசிட் வீசியது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்துள்ளது டெல்லி காவல்துறை. ஆசிட் வீசியவரைக் கண்டுபிடிப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்துள்ளனர்.அதிலும் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. பெண்ணிடம் நடந்த விசாரணையிலும் ‘தங்கள் மீது யாரோ ஆசிட் வீசிவிட்டார்கள், யார் என தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆசிட்டால் தாக்கப்பட்ட இளைஞன் நேற்றுதான் சற்று குணமடைந்து போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறிய தகவலில் உறைந்து போனது காவல்துறை. இது பற்றி பேசிய போலீஸார், ``இளைஞரும் அவருடன் வண்டியில் சென்ற பெண்ணும் மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்படவே, காதலை முறித்துக் கொள்ளலாம் என இளைஞர் பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால், பெண் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனப் பிடிவாதத்துடன் இருந்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்துகொள் எனப் பலமுறை இளைஞரிடம் கூறியும் அவர் அதை காதில் வாங்கவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையில், இருவரும் கடந்த 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்துள்ளார். ` நீ ஹெல்மெட் அணிந்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை அதைக் கழட்டு’ எனப் பெண் இளைஞரிடம் தெரிவித்துள்ளார். பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டு இளைஞரும் ஹெல்மெட்டை கழற்றியுள்ளார். ஹெல்மெட்டை கழற்றிய அடுத்த கனத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை இளைஞர் மீது ஊற்றியுள்ளார் அந்தப் பெண்.
இதில் இளைஞருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் தெரிந்ததும் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளோம். தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண் காதலன் மீது ஆசிட் ஊற்றியுள்ளார். வீட்டைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் திரவத்தை இளைஞர் மீது ஊற்றியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. (விகடன்)
0 Comments