Subscribe Us

header ads

கருணா அம்மானின் போராட்ட வரலாற்றில் கருணை காட்டப்படாத முஸ்லிம் சமூகம்!



தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது சக்திமிக்க தலைவராகவும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் ஒரு காலத்தில் திகழ்ந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தனது போர்க் கால விடயங்கள் சிலவற்றை மட்டும் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் தெரிவித்துள்ளார்.

‘தான் போராடச் செல்லாவிட்டால் இன்று தான் ஒரு மருத்துவராக இருந்திருப்பேன்’ என்ற தனது ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.

குறித்த பேட்டியில், ‘உரிமைகளை வென்றெடுக்கப் போராடியது என்றால் புலிகள் அமைப்பு ஏன் பொதுமக்களைக் கொன்றது?’ என்ற ஒரு கேள்வியை குறித்த சிங்கள ஊடகத்தின் ஊடகவியலாளர் எழுப்பிய போது அவர், பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்ததுடன்,

‘பொதுமக்களைக் கொலை செய்வது தொடர்பில் இயக்கத்தில் இருந்த சில தலைவர்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன’ எனத் தெரிவித்துள்ளார் அதாவது, முரண்பாடான கருத்துகள் காணப்பட்டன என்ற அர்த்தத்தில் அவர் கூறியுள்ளார் என்றே தெளிவுபடலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவதற்கும் மடிவதற்கும் காரணகர்த்தா என பெரும்பாலான தமிழ் மக்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களால் வெறுக்கப்படும் உங்களிடம் நான் இரண்டு கேள்விகளை இங்கு முன்வைக்கிறேன். 

அதற்கு முன்னர் சில விடயங்களை நான் இங்கு பேசியே ஆக வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு எந்தத் தொந்தரவுகளையும் ஏற்படுத்தாத அப்பாவி முஸ்லிம் மக்களை அழித்தமை தொடர்பில் உங்களது நிலைப்பாட்டை நீங்கள் தெளிபடுத்த வேண்டும். 

விசேடமாக, காத்தான்குடி, ஏறாவூர் அழிஞ்சிப்பொத்தானை மற்றும் அம்பாறை, திருமலை மாவட்டங்களில் அப்பாவி முஸ்லிம்களை பதறப் பதற சுட்டுக் கொன்ற சம்பவங்களை நீங்களும் நாங்களும் மறந்து விட முடியாது. பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த மக்களைச் சுட்டுக் கொன்று பள்ளிவாசலை இரத்த வெள்ளக் காடாக்கியதனையும் தாயின் வயிற்றைப் பிளந்து குழந்தையை வெளியே எடுத்துக் கொலை செய்த கொடூரத்தையும் நாங்களும் மறந்து விடமாட்டோம்.

தமிழ்மக்களின் போராட்டத்துக்கு எவ்வித இடையூறுகளையும் செய்யாத எங்கள் மக்களைக் கொலை செய்து குற்றுயிராக்கி கதறப் பதறத் தீயில் வீசிய கொடூரத்தையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். புனித ஹஜ்ஜுக்குச் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தவர்களைக் கடத்திச் சென்று கொடூரக் கொலை செய்து ஒரே புதைகுழியில் புதைத்த சம்பவத்தை அறிந்து மனம் பதறியவர்கள் நாங்கள். 

கடத்திச் சென்றவர்களையே குழி தோண்டச் செய்து பின்னர் அவர்களைக் கொன்று குவித்து அதே குழியில் போட்டு மூடிய சம்பவங்களை முடிந்த சம்பவங்களாக மறக்கக் கூட முடியாதவர்களாக நாங்கள் உள்ளோம். 

இப்படி எத்தனையோ அநியாயங்களையும் இழப்புகளையும் அப்பாவிகளான நாங்கள் எதிர்கொண்டோம். அப்படியிருந்தும், உங்களை நோக்கி நாங்கள் ஒரு போலித் துப்பாக்கியை பொய்க்காகக் கூட நீட்டவில்லை என்பதனை நீங்கள் கண்டிருப்பீர்கள். 

இப்போது விடயத்துக்கு வருகிறேன், ‘பொதுமக்களைக் கொலை செய்வது தொடர்பில் இயக்கத்தில் இருந்த சில தலைவர்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன’ என்று நீங்கள் கூறியுள்ளீர்களே. இந்த நிலையில், அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்வது தொடர்பில் உங்களின் சில தலைவர்களிடையே எவ்வாறான கருத்துகள் காணப்பட்டன? அத்துடன் இது தொடர்பில் நீங்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தீர்கள் என்பதனைக் கூறுங்கள். எங்களைக் கொலை செய்ய வேண்மென்றா அல்லது கொலை செய்யக் கூடாது என்றா உங்கள் தீர்மானம் இருந்தது? 

கிழக்கு மாகாணத்தின் தளபதியாக செயற்பட்ட உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது அதிகபட்ச பொருத்தம் உள்ளது என நினைக்கிறேன். ஏனெனில், உங்களை மீறி எதுவும் நடந்திருக்கமாட்டா என்றும் நம்பலாம் அல்லவா? 

தலைமைத்துவ உத்தரவை மீறி துப்பாக்கி ஏந்தி வேட்டுக்களைத் தீர்க்கும் எந்தப் போராளியையும் விட்டு வைத்த வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இல்லை என்பதனையும் நான் அறிவேன்.

மேலும், அண்மைக் காலமாக நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தெரிவித்திருந்த கருத்துகள், தமிழ்- முஸ்லிம் இன ஐக்கியத்துக்கு எதிரான உங்கள் பேச்சுக்கள் இவையனைத்தையும் நோக்கும்போது முஸ்லிம்கள் தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தாலும் நீங்கள் பதில் தருவதே சிறப்பு அல்லவா? 

எனது இறுதியான கேள்வி, வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்ட போது, அதற்கும் மேலாக ஒருபடி சென்று வெளியேற்றப்படும் முஸ்லிம்களை வெறுங்கையுடன் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டது யார் என்பதனையும் நீங்கள் அறிந்திராதிருக்க நியாயம் இல்லை. அவ்வாறு உத்தரவிட்டவர் யார் என்பதனையும் நீங்கள் கூறுங்கள்.
எனவே, இந்த இரு கேள்விகளுக்கும் நீங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

Post a Comment

0 Comments