கல்வி, உயர்கல்வி, தொழில், திருமணம் குறித்து சரியான பருவத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறின் விளைவுகளை வாழ் நாள் முழுவதும் அறுவடை செய்து விட்டு, விட்டும் சென்று விடுவோம்.
வாழ்வு உங்களுடையது, பிறர் பார்க்க, அல்லது பிறரை பார்த்து வாழ ஆரம்பித்தால் அதை தொலைத்து விடுவீர்கள்.
அடிப்படைத் தேவைகள், தேவைகள், ஆசைகள், பேராசைகள், அடுத்தவர் காண்பதற்கான தேவைகள் என்பவற்றை வேறுபடுத்தி முன்னுரிமைப் படுத்த முடியாத மனிதன் கடன் கஷ்டங்களால் தன்னை தண்டித்துக் கொள்கிறான்.
அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வரைதான் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் ஊர் உலகம் துறந்து கடல் கடந்து வாழும் அத்தியாவசியத் தீமை ஆகுமாகிறது, ஆசைகள் பேராசைகள் ஆடம்பரங்களுக்கல்ல.
திட்டமிடல்: உதாரணத்திற்காக, ஊரில் இடம் இல்லா விட்டால் மஸ்ஜித் பாடசாலை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ள வேறு பிரதேசங்களில் வீடு வளவுகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
சில பகுதிகளில் பல மடங்கு விலை குறைவாகவும் இருக்கும், விவசாயம், வியாபாரம் தொழில் வாய்ப்புகளை எதிர்கால இடத் தேவைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
வாகனம் ஒன்றை வாங்குவதாயின் உங்கள் வரவு செலவு பொறுப்புக்கள் கடமைகள், எதிர்கால கடன் சுமைகள் என பல கோணங்களில் சிந்தித்து உங்களுக்கு தேவையான பொறுத்தமான பாதீட்டில் வாங்குங்கள்.
நகர்ப்புற வாழ்வை அவசரமாக தேர்ந்தெடுக்காதீர்கள். செலவினங்கள் மாத்திரமல்ல தனிமை ஆபத்தானது, குடும்பம் பிள்ளைகள் என்று ஆகும் பொழுது நகர வாழ்வில் சுகங்களை விட சுமைகள் அதிகம் உள்ளன.
ஊர், உறவுகளுக் கிடையிலான போக்கு வரத்து செலவினங்கள், சௌகரியங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்,வாழ்வது உழைப்பதற்காக அல்ல, வாழ்வதற்காகவே உழைக்கிறோம், வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் ஆயிரங்கள் மட்டுமல்ல.
பிறர் பார்க்க அல்லது பிறரை பார்த்து வாழ முயலும் நாம் இருப்பவை குறித்து திருப்தியின்றி இல்லாதவற்றிற்காக ஏங்கித் தவிக்கின்றோம், பெரிய பெரிய கனவுகள் கான்பதில் தப்பில்லை ஆனால் அன்றாட வாழ்வில் பல சிறிய சிறிய சந்தோஷங்களை தொலைத்து விடுவதில் தவறு செய்கின்றோம்.
வங்கிக் கடன்களை (வட்டி) முற்றாகவே தவிர்த்துக் கொள்ளுங்கள், இஸ்லாமிய வங்கிகளாக இருபினும் சரியே,வருவாய்க்கு ஏற்ற செலவும், திட்டமிடலும் இல்லாமல் நாம் கடன்படுகிறோம்.
கடன் சுமைகளில் இருந்து இறைதூதர் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்:
"இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்". புஹாரி 2893
ஆசைகள், தேவைகள், அடிப்படைத் தேவைகள், ஆடம்பரங்ககள் என்பவற்றை வேறுபடுத்தி முன்னுரிமை பட்டியலை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
"இறைவா! உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு! உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!" : திர்மிதி 3563
பெற்றார் சகோதரர்களின் உழைப்பாயின் இரட்டிப்பு பொறுப்புணர்வுடன் கேட்டுப் பெறுங்கள்; உதாரணத்திற்கு அவர்களிடமில்லாத ஸ்மாரட், ஐ போனுக்கு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
உங்கள் மாதாந்த அலைபேசி மற்றும் இன்டர்நெட் கட்டணங்களை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள், பணவிரயம் மாத்திரமன்றி உழைப்பிற்கும் கல்வியிற்கும் தேவையான கால நேர விரயமும் அதிகரித்துச் செல்கிறது.
ஸகாத் கொடுக்கும் அளவிற்கு இல்லா விட்டாலும் சிறிய சிறிய ஸதகா செய்வது வாழ்வில் பறக்கத்தை ஏற்படுத்தும், கடன் கஷ்டங்களில் இருந்து உங்களை பாது காக்கும்.
"யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் ) இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (ஸுரத்துல் பகரா 2:274)
பெண் வீட்டாரை நம்பி உங்கள் சொந்த
வாழ்வை திட்டமிடாதீர்கள்.
நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டபோது, “அவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு “இல்லை” என்று பதிலளிக்கப்பட்டது. அடுத்து “அவர் மீது கடன் உள்ளதா?” என்று கேட்டதற்கு “ஆம்” என்று சொல்லப்பட்டது. உடனே நபியவர்கள் “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்” என்றார்கள். அப்போது அபூகதாதா(ரலி), “அவர் கடனுக்கு நான் பொறுப்பு, நீங்கள் தொழுகை நடத்துங்கள்” என்றதும் நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்: புகாரி 2289
எங்களையும் உங்கள் துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments