ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தனித்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் இன்னும் சில இடங்களில் வேறு சின்னங்களிலும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டது. “சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறவில்லை” என்ற கோட்பாட்டுக்கு அமைவாக, எதிர்பார்த்ததை விட அதிகளவான வாக்குகளை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் களமிறக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றியடைந்துள்ளனர். கடந்த தேர்தலைவிட இம்முறை அதிகளவான உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த, எமது வாக்காள பெருமக்களுக்கு கட்சி சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு அதிக சபைகளை கைப்பற்றியுள்ளோம். மட்டக்களப்பில் தனித்துப் போட்டியிட்டு சில சபைகளில் வெற்றிபெற்றுள்ளதோடு, ஓட்டமாவடி பிரசே சபையில் ஒட்டகச் சின்னத்தில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள், பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் சமநிலையில் உள்ளது. இருப்பினும் புதிய தேர்தல் முறையினால், சில சபைகளில் வேறு கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிறுபான்மைக் கட்சிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட புதிய தேர்தல் முறையில் எங்களுடைய பலத்தை உலகுக்கு காண்பித்திருக்கிறோம்.
தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்ட திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஒரு சில சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சில சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. அது தவிர, வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றுமில்லாத அளவு கனிசமான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை கட்சிகளுடன் போட்டியிட்டு பெற்ற இந்த வெற்றியானது, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுத்தளம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மக்கள் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள்.
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர். அத்துடன் கண்டியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு கிட்டாத சில பிரதேச சபைகளில் தனித்துப் போட்டியிட்டு எதிர்பார்த்த ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளோம்.
இதுதவிர கொழும்பு, கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், களுத்துறை, மாத்தறை, பதுளை, மாத்தளை, கேகாலை, நுவரெலியா, போன்ற மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் கனிசமான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதேவேளை, தெஹியத்த கண்டி, பதியதலாவ போன்ற சிங்கள பிரதேசங்களில் களமிறக்கப்பட்ட எமது வேட்பாளர்களுக்கு பட்டியல் மூலம் சில ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது காட்டுகின்ற அபிமானம் மற்றும் ஆதரவுக்காக நாடு முழுவதிலுமுள்ள கட்சி முக்கியஸ்தர்கள், கட்சிப் போராளிகள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரவூப் ஹக்கீம்
தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அமைச்சர் – நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்
0 Comments