Subscribe Us

header ads

உங்களது பொறுப்புக்கள் முடிந்து விட்டனவா என்ன??


இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை Facebook ஐப் பதம் பார்த்து, பாராட்டு மழைகள் பொழிந்து, பட்டாசுகள் கூட சப்தமேயில்லாமல் வெடிக்கச் செய்து ஆரவாரமாய்க் கொண்டாடி முடித்த ஒரு திருவிழாப்போல நடந்து முடிந்தது சென்ற வருடம் ஆகஸ்டில் A/L செய்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளின் வருகை.
ஒரு பக்கம் நல்ல results எடுத்த மாணவர்களின் புள்ளிகள் screen shot க்களாய்ப் பகிர விட்டதும், இன்னொரு பக்கம் அந்த மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் நின்ற ஆசிரியர்களின் புகழ்ச்சிக் கட்டுரைகளும், ஒரு புறம் கலக்குக் கலக்க, இன்னொரு பக்கம் பல்கலைக்கழகத்திற்குப் போதிய புள்ளிகள் கிடைக்காத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான ஆறுதல்களோ, pass பன்னியவர்களை எதுக்காக நாங்கள் pass பன்னினோம் என்று யோசிக்கும் அளவுக்கும் ஆறுதல்கள் இருந்தன.
இந்த அலப்பறைகள் ஒரு பக்கம் இருக்க, மருத்துவ பீடம் தெரிவானவர்களுக்கு ஏதோ செவ்வாய்க்கிரகம் செல்வதற்கு இலவச டிக்கட் கிடைத்து விட்டது போன்றும், பொறியியல் பீடம் தெரிவு செய்யப் பட்டவர்களுக்கு சந்திர மண்டலத்துக்கு செல்ல அனுமதி கிடைத்து விட்டது போன்ற பாராட்டுக்களும், வர்த்தகம் மற்றுக் கலைப் பிரிவினர்களுக்கு முறையே அமெரிக்காவும், பக்கத்தில் இருக்கும் அக்குறனைக்கும் செல்ல அனுமதி கிடைத்து விட்டதும் போன்ற இறங்கு வரிசைப் பாராட்டுக்கள் ஆங்காங்கே பாதி ஷேவிங் முடிய ஷேவிங் கிறீம் தீர்ந்து விட்டு சோப்பைத் தேடி அழைவது போல ஒரு கூட்டம் பாராட்டு மழைகளினால் தூவித் திரிந்தனர்.
எமது நாட்டில், அதுவும் முஸ்லீம் சமூகத்தில் ஒரு பழக்கம் உள்ளது. "அதிகமாய் உணர்ச்சி வசப் படுவது". அது சந்தோசமான நிகழ்வாக இருக்கட்டும், அல்லது துக்ககரமான நிகழ்வாக இருக்கட்டும், சந்தோஷத்தையும் ஆத்திரத்தையும் உணர்ச்சி வசப்பட்டே தீர்த்து விடுவர். முஸ்லீம் சமூகமென்பது ஒரு சோடா போத்தல் போன்றது. நாம் எவ்வளவு அதனைக் குலுக்குகிறோமோ, அந்தளவு அவை குலுங்கி நுரையாய்க் கொட்டி, கடைசியில் அந்த உணர்வுகள் யாவும் எவருக்கும் பிரயோசமில்லாமலே போகும்.
இதனை அண்மைக் காலங்களில் நடந்த பிரச்சினைகளிலிருந்தே அவதானிப்போம். அளுத்கமைப் பிரச்சினையாகட்டும், பள்ளி உடைப்பு, ஹலால் பிரச்சினைகள் தொடங்கி கடையெறிப்புக்களூடாக கடைசியாய் நடந்த ஜின்தொட்டைப் பிரச்சினையாக இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் ஆவேசப் பட்டோம், அவசரப் பட்டோம், பொங்கி எழுந்தோம், இப்போது அடங்கி தத்தமது வேலைகளுக்குச் சென்று விட்டோம். மழைக்கு முளைத்த காளான்கள் போல எப்போவெல்லாம் ஏதும் நடக்கிறதோ, அப்போவெல்லாம் முளைத்து நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்றுதான் காட்டிக் கொள்கிறோம். எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விடயத்துக்கு வருகிறேன்.
A/L results வந்தாச்சு, வழமை போல பாராட்டு மழைகள், ஆறுதல் வார்த்தைகள், வழாகாட்டல்கள் எனப் பகிர்ந்த கட்டுறைகள், ஆசிரியர்களின் பெருமைகளைப் பகிர்ந்து முடித்து விட்டோம். வழமை போல கெகுணகொல்லயில் இத்தனை டாகடர்கள், அக்கறைப்பற்றில் இத்தனை எஞ்சினியர்கள், குருநாகலில் இத்தனைக் கலைப் பட்டதாரிகள், ஹபுகஸ்தலாவையில் இத்தனை விஞ்ஞானப் பட்டதாரிகள் என எண்ணிக்கைகளும் வெளியாக்கி வெற்றி விழா கூட கொண்டாடி முடித்து விட்டார்கள்.
அடுத்த பக்கம் பல்கலைக்கழக வாய்ப்புத் தவறியவர்களுக்கு வேறென்ன வழிகாட்டல்கள் இருக்கின்றன என வழிகாட்டல்களும் நடந்து முடிந்து விட்டன என வைத்துக் கொள்வோம். இவையணைத்தும் நடந்து விட்டால் சமூகத்தின் மீதான எமது பொறுப்புக்கள் முடிந்து விட்டனவா?
ஒருவரின் Facebook பதிவொன்றில் "மருத்துவ பீடம் தெரிவாகும் அனைத்துப் முஸ்லீம் பெண் மாணவிகளும் பெண் நோயியல் வைத்திய நிபுணர்களாக (VOG) ஆக வர வேண்டும், அல்லது அந்தப் படிப்பையே விட்டு விட்டு வீட்டில் கிடக்க வேண்டும்" என்ற அடிப்படையில் பதிந்திருந்தார்.
இன்று நாம் பாடசாலைகளில் போட்டி போட்டுக் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு வைத்திய பீடத்துக்கும், பெறியியல் பீடத்துக்கும், முகாமைத்துவ பீடத்துக்கும், கலைப் பீடத்துக்கும் மாணவர்களை அனுப்புகிறோம். அனுப்பிய எல்லோரும் பட்டத்துடனா திரும்பி வருகிறார்கள்? எத்தனை மாணவ/ மாணவிகள் பட்டத்தை நிறைவு செய்கிறார்கள்? எத்தனை பேர் வந்து தமூகத்துக்குப் பிரயோசனமாகச் செயற்படுகிறான்கள்? எத்தனை பேர் வீட்டோடு இருக்கிறார்கள். ஏன் இவற்றை நாம் தேடிப்பார்க்க மறந்து விட்டோம்?
அண்மையில் ஒரு தெரிந்த பாடசாலையில் வழமை போல பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாக இருப்பதாக தகவலறிந்ததும் குறித்த பாடசாலையின் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு வாழ்த்துச் சொன்ன அடுத்த கணமே வந்த பதில்
"பல்கலைக்கழகம் தெரிவாக வாய்ப்புள்ளவர்கள் எல்லோரும் போகப் போவதில்லையாம். 3A எடுத்த மூன்று மாணவிகள் போகவில்லை என இப்போதே அவர்கள் பெற்றோர்கள் சொல்லி விட்டார்கள்"
"ஏனாம்?"
" ஒருத்தருக்கு வறுமை, அடுத்தவருக்கு திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும், மற்றையவருக்கு மகள் அங்கு சென்றால் கெட்டுப் போய் விடுவாள் எனப் பயமாம்"
"போய்ப் பேசலாமே. இவற்றுக்குத் தீர்வுகளை அவர்கள் பெற்றோரிடம் முன்வைக்கலாமே?"
"இன்ஷா அல்லாஹ் அதனைச் செய்ய வேண்டும்"
அதன் பிறகு அவரோடு பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நிச்சயம் மூன்று பேரும் போகப் போவதில்லைதான்.
அடுத்ததாக?? உங்களது ஊரில் மூன்று பேர், எனது ஊரில் நால்வர், பக்கத்து ஊரில் மூன்று. அங்கே, இங்கேயென்று மொத்தமாய்க் கூட்டிப் பாருங்கள். மொத்த சமூகமும் ஒரு பாதாளத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம்.
ஒரு பக்கத்தில் தொப்பி போட்ட முள்ளாக்கள் பல்கலைக்கழகங்களை விபச்சார விடுதிகளுக்கு ஒப்பிடுவது, பாடசாலைகளை யூதர்களின் கைக்கூலி எனக் கூவித் திரிவது.
இன்னொரு பக்கம் கிணறு கட்டவும், டொய்லெட் கட்டவும் ஊரை இரண்டாகப் பிரிக்க பள்ளி கட்டவும் நிதியுதவிகள் வருகின்றனவே தவிர எமது சமூகத்தில் கல்விக்காக எந்தளவு முதலீடுகள் செய்யப் படுகின்றன? Foreign trip போகவும், உயர்தர restaurant களில் சாப்பிட்டு விட்டு போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடவும் எமது சமூகத்துக்குத் தகுதி இருக்கிறதே தவிர கல்விக்காக குறைந்த பட்சம் உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்கும் பென்சிலையாவது பாதியாய் உடைத்து ஏழை மாணவரொருவருக்காவது கொடுத்ததுண்டா?
இன்று பாடசாலைகளில் resuts வந்ததும் பெயர்ப்பலகை அடித்து வெளியில் காட்சிக்கு வைக்கும் மாணவிகள் பல்கலைக்கழகம் நுழைந்து வெளிவரும் போது மாத்திரம் பாதியாய் நின்று போவது ஏன்? ஏன் எமது சமூகத்தில் மாத்திரம் இது நடக்கிறது?
இன்று வைத்திய பீடத்துக்குத் தெரிவாகும் மாணவி நாளை VOG ஆகவோ, அல்லது சட்ட பீடத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர் ஒரு வழக்கறிஞராகவோ வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கும் நாம், நம்மால் அவர்களுக்கு எந்தளவு பங்களிப்பை வழங்கியுள்ளோம்? எப்போதாவது ஒரு நிதியுதவி? ஏதாவது ஒரு வகையில் ஓர் உதவி? எத்தனை செல்வந்தர்கள் எமது சமூகத்தில்? குறைந்த பட்சம் மனசார ஒரு துஆப் பிரார்த்தனை? ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை இவற்றை? வெளியான பின்னர் மாத்திரம் ஏன் இத்தனை பாராட்டு மாலைகள்?
ஒரு மாணவனோ அல்லது மாணவியோ பல்கலைக்கழகமொன்றினுல் நுழைந்து பட்டப்படிப்பு வரை சென்று வெளிறேறுவதென்பது மிகப்பெரிய போராட்டம். முதல்ப்போராட்டம் பணத்திலிருந்தே ஆரம்பிக்கிறது, வறுமை, என்னதான் சாப்பாடு குறை விலைக்கும், Room குறை விலைக்கும் கிடைத்து விட்டாலும் அதைத் தாண்டி அவர்களுக்குரிய செலவுகளை ஈடு செய்வதில் உள்ள கஷ்டங்கள்.
இன்று ஒரு பல்கலைக்கழக முஸ்லீம் மாணவி தனது செலவுகளுக்குக் கிடைக்கும் பணம் போதாதென்று ஏதாவது பகுதி நேர வேலை இருக்கிறதா எனத் தேடுகிறாள்.இன்னும் சிலர் தமது பெற்றோரால் இதற்கு மிச்சம் செலவழிக்க சக்தியில்லை என கல்வியையே இடை நிறுத்தி விடுகிறார்கள்.
படிக்கப் பணமில்லை என எத்தனை மாணவ மாணவிகள் கல்வியை இடை நிறுத்தி இருப்பார்கள். தவறான தகவல்களால் எத்தனை மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்புக்களை இடை நிறுத்தி இருப்பார்கள், ஏன் எமது சமூகத்துக்கு மாத்திரம் இந்த சாபக்கேடு...
உங்கள் சதகாக்களையாவது கல்விக்காக செலவிடுங்கள். ஒரு ஊருக்கு வைத்தியரை உருவாக்குவது, முஸ்லீம் சமூகத்துக்கு பெண் VOG யை உருவாக்குவது, ஊருக்கு ஒரு கற்ற மனிதரை உருவாக்குவதென்பது பர்ளு கிபாயா.. ஆனால் அவை இன்றளவும் பயான்களோடு நின்று விடுகிறதே தவிர யாரும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை என்பது கூட பலருக்குத் தெரியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய கவலையே...
வெறுமனே பாராட்டுக்களோடு நின்று விடாமல் அடுத்தடுத்ததாக அவர்களது தேவைகளை நிறைவு செய்ய முன்வாருங்கள். எத்தனையோ தனவந்தர்கள் தமது பணத்தை செலவழிக்க வழியின்றி முறைகேடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர். அவர்களை நோக்கி இவர்களுக்காக உதவிக் கரம் நீட்டுங்கள். குறைந்த பட்சம் உங்களது பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்கும் ஒரு பென்சிலின் பாதியையாவது உடைத்து கல்வி கற்கும் ஒரு ஏழைக்கு உதவுவதன் மூலம் முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளுங்கள்.
(தயவு செய்து இந்தப் பதிவை உங்கள் சுய விளம்பரத்துக்காகப் பயன்படுத்த வேண்டாம், நாங்கள் படிப்பவர்களுக்கு அது செய்தோம், இது செய்கிறோம் என உங்களது செயல்களை விளம்பரப்படுத்தவும் முனைய வேண்டாம். அல்லாஹ் உங்களது செயல்களைப் பொருத்திக் கொள்வானாக).

Post a Comment

0 Comments