சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓடுவதற்கு அனுமதியில்லாத காரணத்தால் சவூதி அரேபிய பெண்கள் சவூதி அரேபியாவிற்கு வெளியில் உள்ள நாடுகளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று தமது ஆசை தீர அந்த நாடுகளில் வாகனம் ஓட்டும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த வருடம் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், ஜோர்தான் ஆகிய மூன்று நாடுகளிலுமிருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற சவூதி அரேபிய பெண்களின் எண்ணிக்கை 7550 இதனால் சவூதி அரேபியா இழந்த பணத்தின் தொகை 1 கோடி 16 லட்சம் ரியால்கள்.
அது மட்டுமின்றி தமது நாட்டு பெண்கள் வேறு நாடுகளில் வாகனம் செலுத்தி அதன்மூலம் ஏற்படும் விபத்துகளின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த வாகன விபத்தொன்றில் ஆறு சவூதி அரேபிய யுவதிகள் மரணமடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்க விடயம்.
இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு அடுத்த வருடம் ஜூன் மாதம் முதல் சவூதி அரேபிய அரசாங்கம் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியை திறந்து விட இருக்கின்றது, இதன் மூலம் சவூதியின் பொது போக்குவரத்து துறைகளிலும் பெண்கள் சாரதியாக இருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதற்கான வயதெல்லை 20.
தமது சொந்த தேவைகளுக்காக சாரதி அனுமதிப்பத்திரம் பெற விரும்புவர்களுக்கான வயதெல்லை 18, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான வாய்ப்பு திறந்து விடப்படும்போது தற்போது வீட்டு சாரதி பணியிலிருக்கும் அதிகமான தொழிலாளிகள் வேலை இழக்கும் வாய்ப்பும் உருவாகும் அத்துடன் பொதுப்போக்குவரத்து துறையில் பெண்கள் உள்வாங்கப்படும் போது அங்கு பணிபுரியும் ஏராளமானவர்கள் வேலையிழக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
எது எப்படியிருந்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்பு கதவுகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு கொண்டே வருகின்றன இன்னும் சில வருடங்களின் பின்பு அந்த கதவுகள் முற்றாக மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இனி வரும் தலைமுறை மத்தியகிழக்கை மட்டும் நம்பிக்கொண்டிராமல் தமது நாடுகளில் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளை இறுக பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும்.
0 Comments