Subscribe Us

header ads

ஹூனைன் பள்ளத்தாக்கில் நடந்த போர்


நபி(ஸல்) அவர்கள், மக்களின் மனப்பூர்வமான சம்மதத்தை அறிந்தபின் கைதிகளை விடுவித்து ஹவாஸினருடன் அனுப்பி வைத்தார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் போர் படையுடன் ஹுனைன் என்ற இடத்தின் அருகில் சென்றடைந்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரம் வீரர்கள் இருந்தனர். அதில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள். 

முஸ்லிம்களுக்கு முன்னதாகவே ஹவாஜின் படையைச் சேர்ந்த மாலிக் இப்னு அவ்ஃப் நஸ் தனது வீரர்களுடன் ஹுனைன் பள்ளத்தாக்குக்கு வந்து, தமது அம்பெறி வீரர்களை ஹுனைன் பள்ளத்தாக்கின் பதுங்குக் குழிகளில் மறைவாகப் பதுங்க வைத்தார். எதிரிகள் அந்த இடத்தில் நுழைந்தவுடன் அம்பு மழையால் அவர்களைத் தாக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். 

அதிகாலையில் சற்று மங்கலான நேரத்தில் முஸ்லிம்கள் ஹுனைன் பள்ளத்தாக்கினுள் நுழைய ஆரம்பித்தார்கள். பதுங்கியிருந்த ஹவாஜின் படை வீரர்கள் முஸ்லிம்களை நோக்கி சராமாரியாக அம்புகளை எறியத் தொடங்கினர். அந்த இடத்தில் தாக்குதலை சிறிதும் எதிர்பார்த்திராத முஸ்லிம் வீரர்கள் துணிந்து முன்னேறாமல், ஆயுத பலம் இல்லாதவர்களாக நிராயுதபாணிகளாக, பயத்தால் புறமுதுகு காட்டி, பிளவுப்பட்டு ஓடினர். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், “வீரர்களே! நான் இருக்கும் பக்கம் வாருங்கள்” என்று அழைத்தார்கள். ஆனால் அவர்களுடைய கூற்றைக் காதில் வாங்காமல் முஸ்லிம் வீரர்கள் தலை தெறிக்க ஓடினர். வெகு சிலர் மட்டுமே நபி(ஸல்) அவர்கள் சொல்லுக்குச் செவி சாய்த்து, நபி(ஸல்) அவர்களுடன் உறுதியாக நின்றனர். 

நபி(ஸல்) அவர்கள் தம் ‘பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறு கழுதையின் மீது அமர்ந்திருந்த நிலையில் “நான் உண்மையான இறைத்தூதராவேன். இது பொய்யல்ல, நான் அப்துல் முத்தலிபின் மகனின் மகனாவேன்” என்று கூறி முன்னேறினார்கள். தமது வாகனத்தைவிட்டு இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள். 

நபி(ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் தமது வீரம் வெளிப்படும் வகையில் களத்தில் நின்று போர் புரிந்தனர். சில வீரர்கள் பின் வாங்கி ஓடியது ‘அல்லாஹ் விதித்த விதி’ என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) கூறினார்கள். அப்பாஸ்(ரலி) மக்களை அழைத்தபோது அவர்கள் போர்க் களத்திற்குத் திரும்பி வந்தனர். தீரத்துடன் போராடி வென்றனர். 

இணைவைப்பவன் ஒருவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொல்ல முயன்றதை அபூகத்தாதா(ரலி) பார்த்து, உடனே அவனை வாளால் அவனுடைய கழுத்துக்குக் கீழே தோள் நரம்பில் வெட்டினார்கள். உடனே அவன் அந்த முஸ்லிமை விட்டுவிட்டு அபூகத்தாதாவை இறுகப் பிடித்தான். ஆனால் மரணம் அவனைத் தழுவவே அவன் அபூகத்தாதாவை பிடித்திருந்தபிடி தளர்ந்ததால் அபூகத்தாதா(ரலி) உயிர் பிழைத்தார். 

போர் முடிந்ததும், ஹவாஸின் குலத்தின் தூதுக்குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் 'ஜிஇர்ரானா' என்னும் இடத்திற்கு முஸ்லிம்களாக வந்தனர். வந்தவர்கள் நபியவர்களிடம் முஸ்லிம்கள் ஹுனைன் போரில் கைப்பற்றிய தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித்தந்து விடும்படி கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் போர் வீரர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கும் நான் போர்ச் செல்வத்தில் பங்குதர வேண்டியுள்ளது. அதனால் போர்க் கைதிகள் அல்லது உங்கள் செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெறுங்கள். நான் உங்களை எதிர்பார்த்துக் கைதிகளைப் பங்கிடாமல் இருந்தேன். பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது   உண்மையான பேச்சேயாகும். உண்மையைச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். 

நபி(ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, 'எங்கள் கைதிகளையே நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்துவிட்டு, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். 

நம்மிடம் போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் பொருத்தமானதாகக் கருதுகிறேன். உங்களில் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறவர் திருப்பித் தந்து விடட்டும். அல்லாஹ், இனி வரும் நாள்களில் முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் வெற்றி கொள்ளப்படும் நாட்டின் செல்வங்களிலிருந்து அவருக்கு நாம் தருகிற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க விரும்புகிறவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்' என்று கூறினார்கள். மக்கள், 'நாங்கள் மனப்பூர்வமாகப் போர்க் கைதிகளைத் திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கிறோம், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், மக்களின் மனப்பூர்வமான சம்மதத்தை அறிந்தபின் கைதிகளை விடுவித்து ஹவாஸினருடன் அனுப்பி வைத்தார்கள். 

ஸஹீஹ் புகாரி 3:56:2864, 2929, 2930, 3:57:3142, 4:64:4318,4319

- ஜெஸிலா பானு.

Post a Comment

0 Comments