இலங்கை கிரிக்கட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்க, அணியினரின் குறைந்த தரத்தை உயர்த்துவதுடன், அவர்களை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
அணியினரை தெரிவு செய்வதில் முழு கட்டுப்பாட்டுடன் பக்கசார்பற்ற முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை அணி, இந்த வருடத்தில் பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டது.
இந்த நிலையினை மாற்றி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு அணியினை தயார் படுத்தும் செயல்பாட்டிற்காக கட்டுப்பாட்டுடன் செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அணியினரின் முதல் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஹத்துருசிங்க கருத்து தெரிவிக்கையில், பயிற்சி நேரத்தில் இசை முற்றாக தடைசெய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
அதனை மீறி செயல்படுபவர்கள் கிரிக்கட்டினை கைவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை அணிக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த உளவியலாளர் ஒருவரை சேவைக்கு அமர்த்த ஸ்ரீலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் இலங்கை வரும் அவர், இலங்கை அணி பங்களாதேஷிற்கான விஜயத்தை ஆரம்பிக்கும் வரை அவர்களை ஊக்குவிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பங்களாதேஷ் செல்லும் அணியுடன் அவர் இணைந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments