“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உடன் காணப்பட வேண்டும். அந்தப் பிரச்சினையை அடுத்த சந்ததிக்கும் நாம் விட்டுச் செல்லக்கூடாது” இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசமைப்பு நிர்ணய சபையில் நேற்று நடைபெற்ற புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என இடைக்கால அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மாத்திரமே, வழிநடத்தல் குழுவின் நிலைப்பாடு அல்ல. எனினும் கூட்டமைப்பின் யோசனையைத் தூக்கிப்பிடித்து சிலர் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். கிழக்கின் முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன்தான் அந்த நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்ற விடயத்தை பிரசாரம் முன்னெடுப்பார்கள் மறந்து விட்டனர் போலும்.
குறிப்பாக கூட்டமைப்பின் கோரிக்கையைத் தூக்கிப்பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஏன் ஜாதிக ஹெல உறுமயவின் யோசனையைப் பற்றிப் பேசுவதில்லை.
இடைக்கால அறிக்கையில் இலங்கை பிரிக்கப்படாத நாடாக இருக்க வேண்டும் எனத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலமை இப்படி இருக்கும்போது நாடு பிளவுபடுவது பற்றி சட்டத்தரணிகள் சங்கம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. எந்த நோக்கத்தோடு அந்த சங்கம் இந்தக் கேள்வியை எழுப்பியது என்று தெரியவில்லை. தேசியப் பிரச்சினையை அடுத்த சந்ததிக்கு நாம் விட்டுச்செல்லக் கூடாது. பௌத்த மதத்துக்கான முன்னுரிமை வழங்கப்படும் அதேநேரம், ஏனைய மாதங்களுக்கான கௌரவம் மற்றும் இரண்டாம் பட்சமான கவனிப்பு என்பவற்றைத் தடுக்கும் சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றார்.
0 Comments