முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
முதலாவது தொடர்.......
மியன்மாரில் சிறுபான்மையாக வாழ்கின்ற ரோஹிங்கிய
முஸ்லிம்கள், அமைதியை போதிக்கவந்த புத்தரின் சீடர்களால் மிகவும் கொடூரமான முறையில்
கொலை செய்யப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும், சொத்துக்கள் சூறையாடப்பட்டும்
எஞ்சியவர்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறுகின்ற பாரிய இனச்சுத்திகரிப்பு அங்கு
நடைபெறுகின்றது.
பலமானவன் பலயீனமானவர்களை அடக்கி ஆழ
முற்படுவதும், அடங்க மறுக்கின்றவர்களை அழிக்க நினைப்பதும் மனித இயல்பாகும்.
வல்லரசு நாடுகள் ஏழை நாடுகளை தங்கள்
கட்டுப்பாட்டின் கீழ் வைத்துகொண்டு பொருளாதார சுரண்டல்களை மேற்கொள்வதும்,
மறுக்கும் நாடுகளுக்கு எதிராக போர் தொடுப்பதனையும் நாம் கண்டுள்ளோம்.
அதேபோல் ஒரு நாட்டை ஆட்சி செய்கின்ற
பெரும்பான்மை சமூகத்தினர் அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற ஏனைய சமூகத்தினை
அடிமைச் சமூகமாகவும், சம அரசியல் அந்தஸ்து இல்லாது உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவும்
கையாள்கின்ற நிலைமை உலகம் தோன்றியதில் இருந்து இன்று வரைக்கும் உலகில் பரவலாக நடைபெறுகின்றது.
இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்பு இந்நாட்டின்
சிறுபான்மை சமூகத்தினர்களான தமிழர்களும், முஸ்லிம்களும் உரிமை இழந்தவர்களாக
இருந்தும், தமிழர்கள் தங்களது
உரிமைக்காக போராடினார்கள்.
மொழி ரீதியாக ஒன்றுபட்டு தமிழர்களது உரிமைக்கான
ஆயுத போராட்டத்தில் முஸ்லிம்களும் முழுமையாக இணைந்து கொண்டால், நாடு
துண்டாடப்படுவதனை தடுக்க முடியாது என்று உணர்ந்த சிங்கள ஆட்சியாளர்கள், முஸ்லிம்களை தமிழர்களுடன் சேரவிடாது பல
சூழ்ச்சிகள் மூலம் பிரித்து தங்களுடன் அரவணைத்துக் கொண்டார்கள்.
ஆனாலும் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக சிங்கள
பேரினவாதிகள் தங்களது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை காலத்துக்கு காலம் கட்டவிழ்த்துக்
கொண்டே இருந்தார்கள்.
சிங்கள ஆட்சியாளர்களின் அரச இராணுவத்துக்கு
சமனாக இராணுவ சமநிலை இருந்தும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வி கண்டது. அதன்
பின்பு முஸ்லிம்களின் மீது இனச் சுத்திகரிப்புக்கான முஸ்தீபுகள் அவ்வப்போது
நடைபெற்று வருகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக ஒவ்வொரு காலகட்டத்திலும்
ஒவ்வொரு வகையான சிங்கள இனவாத இயக்கங்கள் தோன்றினாலும், யுத்தம் முடிவுற்றதன்
பின்பு பொதுபலசேனா இயக்கத்தின் எழுட்சியே மிகவும் ஆபத்தானதாகவும், இந்நாட்டு
முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குட் படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான
இனச்சுத்திகரிப்பினை மேற்கொள்கின்ற 969 என்கின்ற பௌத்த தீவிரவாத இயக்கத்துடன் மிகவும்
நெருக்கமான உறவுகளை பொதுபலசேனா இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
தொடரும்................
0 Comments