நாம் நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஜனநாயக முறையில் மேற்கொள்ள திட்டமிட்ட ஆர்ப்பாட்டத்தை, இவ்வரசு நீதி துறைமூலம் கட்டுப்படுத்த எத்தனித்து எம்மை நீதி துறையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வித்ததாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
தற்போதைய ஆட்சியில் எத்தனையோ விடயங்கள் மீது நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்தும் எங்கள் மீது அநியாயமாக நீதியை திணித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் எதை செய்யப் போனாலும் அதனை தடை உத்தரவுகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றார்கள். அதனை இவ்வாறு கட்டுப்படுத்தாது போனால் எங்கள் மக்கள் பலம் வெளிப்பட்டு விடுமென இவ்வாட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
நாம் அழகிய ஜனநாயக முறையில் இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டோம். இவ்வரசின் வெளிநாட்டு கொள்கையை எதிர்க்கின்றோம். நாம் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களை அடிப்படையாக கொண்டு, இலங்கை நாட்டை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதன் பழி எம்மை வந்து விடலாம் என்பதால் இதனை எதிர்க்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாக உள்ளோம்.
பல தடவைகள் ஞானசார தேரர் உட்பட பலர் நீதிமன்ற தடையுத்தரவை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மீது இலங்கை நீதி துறை கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை. இதன் போது எவரும் கைது செய்யப்பட்டவுமில்லை. அண்மையில் ரோஹிங்ய அகதிகளை அச்சுருத்த பலர் சென்றிருந்த போதும் நான்களவானோரோ கைது செய்யப்பட்டுள்ளனர். இச் செயல்களின் பின்னால் இவ்வரசினர் உள்ளதால் இதன் போதெல்லாம் நீதியை கடுமையான முறையில் பிரயோகிக்கவுமில்லை பிரயோகிக்கவுமுடியாது. ஆனால், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட எமது ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்ததோடு 20ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் இலங்கையில் நிலைநாட்டப்படும் நீதியாகும்.
இதன் மூலம் இலங்கை நாடு சர்வதிகார போக்கில் பயணித்துகொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதானது இலங்கை மக்களை தவறான பாதையின் பால் திருப்பிவிடுமோ என்ற அச்சத்தையும் தோற்றுவிக்கின்றது.
0 Comments