க.பொ.த உயர் தரப் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் பரீட்சை மண்டபத்தில் நடந்து கொள்ள வேண்டுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட அறிவுறுத்தல் கூட்டத்தில் மேற்படி முடிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து கொள்வதில் எந்த தடையுமில்லை. ஆயினும், அவர்கள் பரீட்சை மண்டபத்தில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தங்களின் முகங்களை மறைத்து (Face Cover) திரையிடுவது தடுக்கப்பட்டுள்ளது. காரணம் பரீட்சை எழுதுகின்றவரின் ஆள் அடையாளம் என்பது முகத்தை கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. பரீட்சார்த்திகள் தங்களின் தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு முகத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும். இதற்கு மாறாக முகத்தை முழுமையாக மறைத்து பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments