கத்தர் பெண்களை மணந்த வெளிநாட்டு ஆண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மற்றும் கத்தர் நாட்டுக்குப் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்காற்றிய வெளிநாட்டு பணியாளர்களுக்குக் கத்தரில் நிரந்தரக் குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக துறை உருவாக்கப்பட்டு வெளிநாட்டுக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.
இவ்வாறு நிரந்தரக் குடியுரிமை பெறும் வெளிநாட்டு குடிமக்கள், கத்தரில் சொத்துகள் வாங்கவும் கத்தர் பார்ட்னர் இல்லாமல் தனியாகவே வியாபாரம் செய்யவும் உரிமை பெறுவர். மேலும், கத்தர் குடிமக்களுக்குக் கிடைப்பது போன்று இலவச கல்வி, மருத்துவம் போன்றவையும் கிடைக்கும்.
அரபு நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கஃபாலா என்ற முறையில், தொழில் அனுமதி மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தனர். இவ்வகையில் பணிக்கு வரும் வெளிநாட்டு மக்களுக்குத் தனியாக வியாபாரம் செய்யவோ, விருப்பப்பட்ட வேலைகளுக்கு மாறிக்கொள்ளவோ அனுமதி கிடையாது. சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென்றால்கூட, தமக்கு ஸ்பான்ஸர் செய்த கஃபீலின் அனுமதி கிடைக்காமல் போக முடியாது.
புதிய நிரந்தரக் குடியுரிமையில் இவ்வகையான எந்தக் கட்டுப்பாடும் வெளிநாட்டு மக்களுக்கு இருக்காது. வேறெந்த அரபு நாட்டிலும் இதுவரை இவ்வாறான சட்டம் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Abdur Rahman)
0 Comments