சவுதி அரேபியா, ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தின் ஹஜ் டெர்மினலில் வந்திறங்கும் ஹஜ் யாத்ரீகர்களின் உள்நுழைவு விசா நடைமுறைகள், கஸ்டம்ஸ் சோதனைகள், மருத்துவ சோதனைகள் மற்றும் ஹஜ் வழிகாட்டி அலுவலக நடைமுறைகள் என அனைத்தையும் சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள் முடித்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜித்தா விமான நிலையத்திலிருந்து வெளியேறும் ஹஜ் யாத்ரீகர்கள் புனித மக்கா அல்லது புனித மதினா செல்வதற்கான பேருந்துகளும் தயார் நிலையில் இருக்கும்.
தற்போது தினமும் வருகை தரும் சுமார் 35,000 ஹஜ் யாத்ரீகர்களை கையாள்வதற்கு சுமார் 15,000 சவுதி ஆண், பெண் அலுவலர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர். துல்ஹஜ் மாதம் நெருங்கும் தருணத்தில் ஹஜ் பயணிகளின் வருகை இரப்டிப்பாக அதிகரித்து நாளொன்றுக்கு சுமார் 70,000 பேர் வருகை தருவர்.
ஹஜ்ஜூக்கான விமானங்கள் ஹஜ் டெர்மினலுக்கு கடந்த துல்காயிதா பிறை 5 (ஜூலை 28) முதல் வருகை தர ஆரம்பித்துள்ளன இவற்றின் வருகைகள்; எதிர்வரும் துல்ஹஜ் பிறை 4 (ஆகஸ்ட் 26) அன்றுடன் நிறைவுறும்.
திங்கட்கிழமை மாலை வரை சுமார் 45,000 ஹஜ் பயணிகள் உலகின் பல நாடுகளிலிருந்தும் சுமார் 245 விமானங்கள் மூலம் வருகை தந்துள்ளனர். இவர்களில் பாகிஸ்தான், இந்தியா, எகிப்து மற்றும் இந்தோனேஷிய நாட்டு ஹஜ் பயணிகளே அதிகம்.
சுமார் 500,000 சதுர அடியில் அமைந்துள்ளது, உலகின் 4 வது பெரிய லவுஞ்சை உடையதுமான இந்த ஜித்தா விமான நிலையத்தில் விமான நிலைய நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 27 அரசுத்துறைகளும் பணியாற்றி ஹஜ் பயணிகள் தங்களின் குடியேற்றக் கடமைகளை இலகுவாக முடித்து தாங்கள் செல்ல வேண்டிய புனித மக்கா மற்றும் மதினா நகர்களுக்கு செல்ல உதவி வருகின்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
கூடுதல் செய்தி:
ஜித்தா விமான நிலையத்தின் ஹஜ், உம்ரா பயணிகளுக்கான டெர்மினல் ஒரே நேரத்தில் சுமார் 175,000 பயணிகளை அதாவது 91,000 வருகை பயணிகளையும், 84,000 புறப்பாடு பயணிகளை கையாளத் தேவையான வசதிகளை பெற்றுள்ளன.
நன்றி: அரப் நியூஸ்
0 Comments