மடவளை மதீனா விளையாட்டு மைதானத்தினை புனர் நிர்மாணம் செய்வதற்காக
அண்மையில் 40 லட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டும் மைதானம் முன்னரை
விடவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாக பிரதேச இளைஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் இது பயனற்றுப்
போயுள்ள நிலையில் மைதான அபிவிருத்திக்கு மேலும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான
முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நிதியைப் பெற்றுத் தருவதில் முன்நின்ற மடவளை ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கிளையினர் மீது பிரதேசத்தில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு
வரும் நிலையில், அவ்வமைப்பினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக
தன்நிலை விளக்கம் வழங்கி வருவதுடன் நிதியைப் பெறுவதற்கே தாம் உதவியதாகவும் எனினும்
மாவட்ட செயலகத்தினூடாக கொந்தராத்தைப் பெற்றுக்கொண்டவர்களும் மேற்பார்வை செய்த
கல்வித் திணைக்களமுமே அவ்வாறான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும்
தெரிவித்து வருவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இம்மைதானம் விரயமாக்கப்பட்ட அபிவிருத்திப்
பணிகளுக்கு முன்னராக நல்ல நிலையில் இருந்ததாகவும் தற்போது முறையான பணிகள்
மேற்கொள்ளப்படாமையால் அம்மைதானத்தின் பயன்பாடு கவலைக்குரியதாக இருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள
திட்டங்களையாவது முறைப்படி நெறிப்படுத்தி பயனுள்ள வகையில் அபிவிருத்தித் திட்டங்களை
மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Fawzul.A
0 Comments