Subscribe Us

header ads

சம்பிக்க விட்ட இடத்தில் இருந்தே ஞானசார தேரர் ஆரம்பித்தார்..


நாட்டின் இனவாத தந்தை என பார்க்கப்படும் சம்பிக்க ரணவக்க விட்ட  இடத்தில் இருந்தே ஞானசார தேரர் இனவாதத்தை ஆரம்பித்தார் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்...

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை பரவச் செய்தவர்களில் அமைச்சர் சம்பிக்க முதன்மையானவர். அவர் முஸ்லிம்களுக்கு முன்னின்று செய்த இனவாத நடவடிக்கைகளில் ஹலால் பிரச்சினையை பிரதானமானதாக கோடிட்டு காட்டலாம்.

ஞானசார தேரர் தனது தோற்றத்தின் ஆரம்பத்தில் இதனை தூக்கிப் பிடித்துக் கொண்டே பிரச்சாரங்களை முன்னெடுத்தார். இதில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றார் எனலாம். பிற்பட்ட காலப்பகுதியில் அவரது செயற்பாடுகள் வேறு திசை நோக்கி திரும்பின.

இதன் போது அவர் தனிப்பட்ட இலாபங்களை பெற்றிருந்தாலும், அவரது செயற்பாடுகளை பேரின மக்களின் ஆதரவை பெற்றிருக்கவில்லை. அண்மையில் அவரது கைது விடயங்களில் கூட மக்கள் பெரிதும் கவனம்கொள்ளவில்லை எனலாம்.

இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்ட ஞானசார தேரர் மீண்டும் ஹலால் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். அதாவது அமைச்சர்
சம்பிக்க ஆரம்பித்த இடத்தில் இருந்து மீண்டும் ஞானசார தேரர் ஆரம்பித்துள்ளார். அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் ஆதரவளிக்க பொது பல சேனா அமைப்பை தற்போதைய நிலையில் இருந்து சற்று நிதானமான பாதைக்கு கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.


மீண்டும் அண்மைக்காலமாக அமைச்சர் சம்பிக்கவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை  பகிரங்கமாக கூறி வருகிறார். இதன் மூலம் அவர் மறைமுகமாக ஞானசார தேரருக்கு பலம் சேர்க்கின்றார். மிக நீண்ட காலமாக  முஸ்லிம்கள் தொடர்பிலான இனவாத கருத்துக்களை நேரடியாக கூறாது ( இக் காலப்பகுதியில் இவரது கருத்துக்களை போதுபல சேனா சிங்கள மக்களிடையே கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தது ) இருந்தார். இப்போது கூறுவதானது பொது பல சேனா அமைப்புக்கு அவர் நேரடி ஆதரவு வழங்க தயாராவதை எடுத்து காட்டுகிறது.


அது மாத்திரமல்ல பொது பல சேனாவின் அடுத்த இலக்கு உண்மையான பௌத்தரை ஜனாதியாக்குவது. சம்பிக்கவும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கொண்டவர். தற்போது பெளத்தர்களுக்காக போராடுபவர் என்ற தோரணையையும் காட்டுகிறார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது பொது பல சேனா தற்போது போன்றல்லாது நிதானமான பாணியின் சம்பிக்கவின் அனுசரணையுடன் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை கொண்டு செல்லப் போகிறதேன்றே தோன்றுகிறது.

Post a Comment

0 Comments