அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக எல்லா விடயங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மினுவன்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
மஹிந்த ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியே தற்போதைய அரசாங்கம் பேசி வருகின்றது.
மக்களிடம் எதனையும் சொல்ல முடியாத அரசாங்கம், மஹிந்தவின் அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து அவரையே விமர்சனம் செய்து வருகின்றது.
இன்று நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம் இலங்கையில் மட்டுமன்றி உலகின் மிகவும் மோசமாக தோல்வியடைந்த அரசாங்கமாகும்.
பிரிவினைவாதிகள் மற்றும் மேற்குலக நாடுகளின் விருப்பு வெறுப்புக்களையே இந்த அரசாங்கம் பூர்த்தி செய்து வருகின்றது.
அரசாங்கத்தின் இயலாமையை இன்று வீதியில் இறங்கிப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும், ஒரு புறத்தில் டெங்கு மறு புறத்தில் குப்பைகள் நிறைந்து வழிகின்றன.
சில அமைச்சர்கள் நாட்டு மக்களை குருடர்களாகவும், செவிடர்களாகவும் நினைத்துப் பேசி வருகின்றனர்.
ஒட்டுமொத்த நாடே அரசாங்கத்தை திட்டும் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சில அரசாங்க விசுவாசிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திட்டித் தீர்க்கின்றார்கள்.
குப்பையாகியுள்ள இந்த அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
0 Comments