‘சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசியதால் விபத்து’, ‘செல்போன் வெடித்து உயிர்பலி’ போன்ற செய்திகளை அவ்வப்போது படித்திருப்போம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களிலும் இந்தச் செய்திகள் அதிகளவில் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். இதன் காரணமாக, சார்ஜர் போட்டுக்கொண்டே செல்போன் பேசுவது மிகவும் ஆபத்தானது என்ற விஷயம் நம் ஆழ்மனதிலேயே பதிந்துவிட்டது. உண்மையில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்தினால் விபத்து ஏற்படுமா? அப்படி ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்துவது தவறா?
சார்ஜர் இயங்கும் முறை : நாம் பயன்படுத்தும் மொபைல் சார்ஜரானது, ஏ.சி (Alternating Current) எனப்படும் மாறுதிசை மின்னழுத்தத்தை, டி.சி (Direct Current) எனப்படும் நேரடி மின்சாரமாக மாற்றி மொபைல் பேட்டரியை சார்ஜ் செய்யும் கன்வெர்ட்டராகத்தான் செயல்படுகிறது. AC மின்சாரத்தின் மின்னழுத்தம் அதிகமானதாக இருப்பதோடு, மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இந்த மின்சாரம் மனித உடலை நேரடியாகத் தாக்கினால், நிச்சயமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், சார்ஜரானது தனது பணியைச் சரியாகச் செய்யும் பட்சத்தில், குறைந்த அளவிலான மின்னழுத்தமே மொபைலுக்கு வந்து சேரும். அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
10 மில்லி ஆம்ப்ஸ் முதல் 100 மில்லி ஆம்ப்ஸ் வரையிலான மின்சாரம் வலியைக் கொடுக்கும். மூச்சைச் சிரமமாக்கும். 100 முதல் 200 மில்லிஆம்ப்ஸ் (0.1Amps -0.2 Amps) வரையிலான மின்சாரம் உயிரையே பறிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. 200 மில்லி ஆம்ப்ஸைவிட அதிகமான மின்சாரம் மயக்கமடையச் செய்யும். தீக்காயங்களை உண்டாக்கும். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டால் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கலாம். செயற்கை சுவாசம் (Artificial respiration) இந்தச் சூழலில் உதவும்.
பொதுவாக மொபைல் போன்கள் 3.7 வோல்ட் Li-ion பேட்டரிகளைக் கொண்டிருக்கும். ஐபோன் 6 மாடலில் 1810 மில்லி ஆம்ப்ஸ் பேட்டரி இருக்கும். அதாவது, ஒரு மணி நேரத்துக்கு 3.7 வோல்டேஜ் அழுத்தத்தில்
1.8 மில்லி ஆம்ப்ஸ் மின்சாரம் தரும். இது ஆபத்தான மின்சாரம்தான். ஆனால், சார்ஜர் தனது பணியைச் சரியாக செய்தால், சார்ஜ் போட்டுக்கொண்டிருக்கும்போது பயன் படுத்தினால்கூடப் பிரச்னை இல்லை. ஆனால், நாம் ஏன் அந்த ரிஸ்க் எடுக்க வேண்டும்?
விபத்துக்கான காரணங்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்: சந்தையில் கிடைக்கும் விலை குறைவான சார்ஜர்கள் பொதுவாகத் தரம் குறைந்தவையாக இருக்கின்றன. அவை வோல்டேஜை முறைப்படுத்தும் வேலையைச் சரியாகச் செய்வதில்லை. இதனால், சார்ஜரும் மொபைலும் விரைவில் சூடாகும் பிரச்னை ஏற்படுவதோடு, சமயங்களில் மொபைல் வெடிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. முறைப்படுத்தப்படாத மின்சாரம் மொபைலைத் தாக்கும்போது, அது மொபைலைப் பயன்படுத்துபவர்மீதும் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் விபத்தால் காயங்கள் ஏற்படுவதும் சில சமயம் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. எனவே, விலை குறைவான தரமற்ற சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மொபைலுக்கும் இத்தனை வோல்டேஜ்/ஆம்பியர் கொண்ட சார்ஜர்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்ணயம் இருக்கிறது. மொபைலின் பேட்டரி அளவு மற்றும் மாடலுக்கேற்பதான் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் சார்ஜர்களை வடிவமைக்கின்றன. மொபைலுடன் வழங்கப்பட்ட சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனப் பயனாளர்களை வற்புறுத்துவதன் காரணம் இதுதான். மேலும், விலை குறைவான மொபைல்களில் உள்ள உதிரி பாகங்களும் பல்வேறுவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மொபைல் விபத்துகளுக்கு, தரமற்ற பொருள்களைப் பயன்படுத்துவதுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது. விலை குறைவாக இருக்கும் காரணத்தால், தரமற்ற பொருள்களை வாங்குவதென்பது, வம்பை நாமே விலைகொடுத்து வாங்குவதற்குச் சமம். இதுவரை நடந்த பெரும்பாலான விபத்துகளுக்குத் தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தியதே காரணமாக இருந்திருக்கிறது. எனவே, பாதுகாப்பைக் கருதித் தரமான மற்றும் மொபைல் நிறுவனங்கள் அங்கீகரித்த பொருள்களை மட்டுமே பயன்படுத்து வது நல்லது. மேலும், மொபைல் பாதுகாப்புக்காக மேனுவலில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களைப் பின்பற்றினாலே பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
முதலாவதாக, தரமற்ற சார்ஜர் வாங்கும்போது சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், மொபைல் விரைவில் சூடாகும் பிரச்னையும் ஏற்படும். தரமில்லாத பேட்டரி வாங்கும்போதும் இதேவிதமான பிரச்னைக்கு ஆளாகலாம். அடுத்ததாக, ஏ.சி மின்சாரத்தை டி.சி மின்சாரமாக மாற்றும் கன்வெர்ட்டர் வேலையை, தரமற்ற சார்ஜர்கள் செய்வதில்லை. சார்ஜரில் வோல்டேஜ் அதிகமாகும்போது, அதை முறைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விலை குறைவான சார்ஜர்களிலும் செல்போன்களிலும் இருப்பதில்லை. எனவே, அவை வெடித்துச் சிதறுகின்றன.
இரவு நேரத்தில் சார்ஜ் போட்டுக்கொண்டிருந்த மொபைல் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததாகச் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். இதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. மொபைல் போனுக்குக் காற்றோட்டம் அவசியம். அதைத் தடுக்கும் விதமாக, தலையணை அல்லது வேறு பொருளால் முற்றிலுமாக மொபைலை மூடும்போது, தேவையான காற்றோட்டமின்றி மொபைல் விரைவில் சூடாகக்கூடும். இதனால், தீப்பற்றி எரிவது அல்லது மொபைல் வெடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இரவு நேரங்களிலும் பயன்படுத்தாத நேரங்களிலும் ஸ்விட்ச் ஆஃப் செய்வதும்கூட அவசியம்.
கதிரியக்கப் பாதிப்பு உண்மையா?
இதேபோல், மொபைலில் சார்ஜ் குறைவாக இருக்கும்போது அதைப் பயன்படுத்தினால் ரேடியேஷன் அளவு அதிகமாக இருக்கும் எனப் படித்திருப்போம். இதுவும் முற்றிலுமாக உண்மையில்லை என்கிறார்கள். செல்போன் சிக்னல் இல்லாதபோதுதான் அதிகளவில் கதிரியக்கம் ஏற்படுகிறது. அதுவும், அங்கீகரிக்கப் பட்ட எல்லைக்குள்தான் ஏற்படும் என்கிறார்கள் வல்லுநர்கள். சிக்னல் நன்கு கிடைக்கும் பட்சத்தில், சார்ஜ் குறைவாக இருந்தால் அதிகளவு கதிரியக்கப் பாதிப்பு ஏற்படாது. சார்ஜ் குறைவாக இருக்கும்போது அதிக நேரம் மொபைலைப் பயன்படுத்தினால், விரைவில் சூடாக வாய்ப்பிருக்கிறது. காதில் உள்ள நரம்புகளும், திசுக்களும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, அந்தமாதிரியான தருணங்களில் இயர்போன் அல்லது ஹேண்ட்ஸ் ஃப்ரீ மோடில் முடிந்த அளவுக்குப் பயன்படுத்துவது நல்லது.
- கருப்பு
மற்ற பாதிப்புகள்
ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்தும்போதும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தினால், அது சூடாகும். சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் பயன்படுத்தும்போது அது இன்னும் அதிக சூடாகும். இது பேட்டரியின் ஆயுளைப் பாதிக்கும். மேலும், இந்தச் சூடானது காதுகளிலுள்ள திசுக்களைப் பாதிக்கும்.
பழைய மொபைல்கள் அடிக்கடி சூடானால், அதன் பேட்டரி உப்பிக்கொண்டே போகும். உப்பிய பேட்டரியைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதும், அது வெடிக்கும் வாய்ப்பிருக்கிறது. பேட்டரி தொடர்ந்து இதுபோன்று சூடானால், அதன் திறன் பாதிப்படையும். ஃபுல் சார்ஜ் ஏற அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, விரைவிலேயே பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடும்.
இதுவரைக்கும் நடந்த விபத்துகள் பெரும்பாலானவற் றில் தரம் குறைந்த மொபைல்களும், டூப்ளிகேட் சார்ஜர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரிஜினல் அளவுக்கு வோல்டேஜைக் கட்டுப்படுத்தும் விஷயமோ பாதுகாப்பு அம்சங்களோ இவற்றில் நிச்சயமாகக் கிடையாது. எனவே, அவை மிகவும் ஆபத்தானவை.
0 Comments