(எம்.எப்.எம்.பஸீர்)
முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையின் முன்னெடுக்கப்பட்ட வெறுக்கத்தக்க நடவடிக்கைகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக சட்டத்தை அமுல் செய்து சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
சவூதியின் ஜித்தாவை மையமாக கொண்டு செயற்படும் 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டுறவில் இயங்கிவரும் குறித்த ஸ்தாபனத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதைமீன் இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தமது அமைப்பு தொடர்ந்தும் வழங்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் அவநம்பிக்கையினையும் உருவாக்கும் தீவிரப்போக்குக் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான வன்முறை நிலைமைக்கு எதிராக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பு வழங்கும். வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்கள் மிகுந்த கரிசனைக்குரியனவும் ஆழ்ந்த கவலைக்குரியனவுமாகும்.
சமூகங்களுக்கிடையே அமைதிக்கும் சமாதானபூர்வமான உறவுக்கும் வேண்டுகேள் விடுத்திருக்கும் அதேவேளை, சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அவற்றுக்கு காரணமானவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலங்கையில் நீண்டகால இருப்பைக் கொண்டுள்ளதோடு, ஏனையோருடன் சமாதானமாகவும் இணக்கப்பாட்டுடனும் வாழும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது அத்துடன் ஒட்டுமொத்தமாக நாட்டின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கும் முஸ்லிம் சமூகம் பங்களிப்புச் செய்து வருகின்றது . எனவே இத்தகைய சம்பவங்கள் உடன் நிறுத்தப்பட்டு சட்டத்தின் மீதான ஆட்சிப் படுத்தல் உறுதி செய்யப்படல் வேண்டும். என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments