இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்படும் இந்து மஹா சபா மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் என்றழைக்கப்படும் ஆர். எஸ். எஸ் .ஆகிய இந்து தேசியவாத அமைப்புகளுடன் பொதுபலசேனா இணைந்து செயற்படுவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார்.
இதேவேளை ஞானசார தேரருக்கு எதிரான கைதினை தடுப்பதற்கு இந்து மஹாசபா மற்றும் ஆர் .எஸ் .எஸ். ஆகிய அமைப்புகள் ஊடாக பொதுபல சேனா இந்தியாவிடம் உதவிகள் கோரியமை உள்ளிட்ட தொடர்புகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் மீண்டும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இஸ்லாம் அடிப்படைவாதத்திற்கு எதிரான தீவிர போக்கில் செயற்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பு நல்லாட்சியின் ஆரம்ப காலப்பகுதியில் மௌனித்திருந்தாலும் தற்போது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக நீதிமன்றில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அவை தற்போது தீர்வுகளையும் எட்டியுள்ளன.
கடந்த ஆட்சியிலும் தற்போதைய நல்லாட்சியிலும் பொதுபல சேனா வலுவாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் உண்மையாகவே பொதுபலசேனாவின் பின்னணி என்ன? என்ற கேள்விகள் பல தரப்பினர் மத்தியிலும் காணப்படுகின்றது.
இந்நிலையில் பொதுபலசேனா அமைப்பு இந்தியாவுடனான தனது நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தி செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆர் .எஸ். எஸ். அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராவார்.
அதே போன்று இந்து மஹாசபா மற்றும் ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்புகளுடன் பொதுபலசேனா உதவிகளை கோரியுள்ளதுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான விருப்பத்தையும் அறிவித்துள்ளது.
இதன் விளைவாக டில்லியை தளமாக கொண்டு இயங்கும் இந்து மஹாசபா தலைவர் கலாநிதி சந்தோஷ் ராய் இந்திய அரசிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி பொதுபல சேனாவையும் ஞானசார தேரரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.
0 Comments