Subscribe Us

header ads

' BIG BOSS' நிகழ்ச்சியை இலங்கைக்கு அழைத்து வந்தால் இலங்கை பிரபலங்கள் யார் யாரைப் போட்டியாளர்களாகத் தெரிவு செய்யலாம் ? யார் தொகுத்தளிப்பது ?


மேற்கத்தேய ரியாலிட்டி ஷோக்கள், மக்களின் பெரு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் இந்தியா, அதன் கலாசார ரசனைக்கு ஏற்றவிதத்தில் சிறு மாற்றங்கள் செய்து, அறிமுகப்படுத்தி, ரகளை செய்ய அதன் ஜுரம் இலங்கை எங்கும் பரவி இங்கேயும் ஏதோ ஒரு பெயரில் பலத்த ஆரவாரத்துடன் அவை சங்கமமாவது தான் மரபு அல்லது வாடிக்கை.அமிதாப்பச்சன் ஹிந்தி சேனல் ஒன்றில் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ' என்ற பேரில் விஜய் டி.வி இல் தமிழ் பேசி சக்கை போட்டது.அது அப்படியே ' சிரஸ லக்‌ஷபதி ' என்ற பேரில் இங்கே நுழைந்து கொண்டது.

பத்து வருசங்களுக்கு முன்பு சிரஸ அறிமுகப்படுத்திய ' சிரஸ சூப்பர் ஸ்டார் ' நிகழ்ச்சியும் இதே போன்ற ஒரு வகையறா தான்.அன்று முதல் கற்பனைப் பஞ்சம் நிகழும் பெரும்பான்மை சமூகத்தில் இன்னமும் ஏதாவது ஒரு டகல்பாஜி டி.வி சேனலில் 'ஏதோ ஒரு ஸ்டார்' என்ற பேரில் இந்த ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டே இருக்கிறது.

விளைவு தடுக்கி விழுந்தாலும் எவனாவது பாடகனின் மேல் விழவேண்டும். 

போதாக்குறைக்கு இந்த பாடகர்கள் கூட்டம் எல்லாம் ஒன்று சேர்ந்து பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிகளுக்கு தூரங்களின் அடிப்படையில் வெவேறு ஆயுள் தண்டனை பெக்கேஜ்களை தந்து இம்சைப் படுத்தி சாவு அடிக்கிறது.

எல்லாவற்றையும் இங்கே முதன் முதலில் அறிமுகம் செய்து திருப்பணி செய்து இருக்கும் சிரஸ, அடுத்ததாய் விஜய் டி .வி இல் கமலஹாஸன் தொகுத்தளிக்கும் ,ஆரம்பமான ஜோரிலேய சர்ச்சைகளுக்கும், சமூகவலைதளங்களில் கலாசார காவலர்களினால் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கும் ' BIG BOSS' நிகழ்ச்சியை அழைத்து வரலாம். வரும் என்றே நம்பலாம்.சரித்திரங்கள் கற்றுத் தந்தவைகள் ஏராளம்....அப்படி வரும் பட்சத்தில் இலங்கையில் பிரபலங்கள் யார் யாரைப் போட்டியாளர்களாகத் தெரிவு செய்யலாம் ? யார் தொகுத்தளிப்பது ?.சும்மா ஒரு கற்பனை.

போட்டியாளர்கள் பத்து பேர் விபரம்:செல்வன் கலகொட அத்தே ஞானசார, மேர்வின் சில்வா, கீதா குமாரசிங்க, கருணா அம்மான், சுஸந்திகா ஜயசிங்க,இகிலன மாலுவோ சர்ச்சை திரைப்பட நடிகை கயேஷா,சனத் ஜயசூரியா, மகிந்தவின் முன்னாள் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ, முன்னால் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர், லெஜண்ட் சந்திமால் நிகழ்ச்சியை நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தொகுத்து வழங்கலாம்...

ஏற்கனவே பைத்தியகாரர்களின் விடுதி போல இருக்கும் நாட்டில் இப்படி ஒரு பத்து பேரைக் கொண்டு வந்து நூறு நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்தால் அதன் விபரீதம் எப்படி அமையும் என்பது கற்பனையில் கூட எழுத முடியாதது...

இருந்தாலும் ஒரளவுக்கு ஊகிக்கப்படும் ஆரம்பகால கூத்துக்களும் அதகளங்களும் லெஜண்ட் சந்திமாலும் கயேஷாவும் சாதரணமாய் சோபாவில் உரையாடிக் கொண்டு இருக்கும் போது எங்கிருந்தோ ஓடிவரும் ஞானம், கயேஷாவை 'பெட்டை நாய் ' என்று திட்டலாம்.

கருணா அம்மான் தனது பழைய வீர தீர பராக்கிரமங்களைப் பேச ஆரம்பித்தால் மேர்வினுக்கு கோபம் தலைக்கேற அடிதடி தர்ப்பார் தான்.கடைசியில் மேர்வின் சில்வாவை கருணா அம்மான் தாக்க எத்தனிக்கலாம்..

கீதாகுமாரசிங்க, சனத்தின் வலுவேறிய கருப்புக் கட்டுடல் மேல் ஒரு கண் வைக்கலாம்..

2000 ஆம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிகழ்வுகளை எல்லாம் தூசி தட்டி நினைவு கூர்ந்து " எப்பேர்பட்டவள் நான், எனக்கு சமையல் எல்லாம் செய்ய முடியாது " என்று சுதந்திகா அடம்பிடிக்கலாம்.பசி வெறியில் ஞானம் அவரை அடிக்க கையை ஓங்கலாம்.
மகிந்தவின் முன்னால் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ ,இயக்குனர் மணிரத்னம் போல அதிகம் பேச்சு இன்றி ஒதுங்கி இருக்கலாம்.மேர்வினும், அஸ்வரும் அவரை அடிக்கடி முறைக்கலாம்..

மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதால் கீதாவின் முகம் தோல் உரித்த கீரிப் பிள்ளை போல காணப்படலாம்..அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க கலவரம் உண்டாகலாம்.

சமையலுக்கு முட்டை சமைக்க முன்பு மற்ற 9 பேரும் அதை லெஜண்ட் சந்திமாலுக்கு காட்டி ' உனக்கு விருப்பமான சத்துணவு, நீ அடிக்கடி எடுப்பது' என்று ஏளனம் செய்து ரணகளப்படுத்தலாம்.

வீட்டின் தளபாடங்களுக்கு சேதம் ஏதும் ஏற்பட்டால் அஸ்வரும் ஞானமும் ஒரு வேளை இரண்டாம் வாரத்திலேயே போட்டியில் இருந்து வெளியேற்றப்படலாம்.

-Zafar Ahamed-

Post a Comment

0 Comments