புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க நெடுஞ்சாலைகள்
அமைச்சின் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தார்இட்டு செப்பனிடப்பட்ட
புதிய காத்தான்குடி விடுதி வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு
மற்றும் மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஒரு கோடி 30 இலட்சம்
ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி புனரமைப்பு மற்றும்
அழகுபடுத்தும் வேலைத்திட்டத்துக்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வு என்பன
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்விரு
நிகழ்வுகளிலும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம
அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். காத்தான்குடி நகர சபை முன்னாள் நகர
பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளுக்கு, கௌரவ
அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், புதிய காத்தான்குடி
பெரிய பள்ளிவாயல் தலைவருமான கே.எல்.எம்.பரீட், முன்னாள் பிரதி தவிசாளர்
எம்.ஐ.எம்.ஜெஸீம், சுதந்திரக்கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள்
நகர சபை உறுப்பினருமான றஊப் அப்துல் மஜீட் மற்றும் முன்னாள் நகர சபை
உறுப்பினர்களான அலி சப்றி மற்றும் சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோரும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நெடுஞ்சாலைகள்
மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்த விசேட
வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வீதி அபிவிருத்திப்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசேடமாக, காத்தான்குடி நகரில் பல
வீதிகள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில்,
3.5 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி
புனரமைக்கப்பட்;டு மக்கள் பாவனைக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4
மணிக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மாநகர மற்றும் மேல்
மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஒரு கோடி 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்
காத்தான்குடி கடற்கரை வீதியை அழகுபடுத்தல், நடைபாதை நிர்மாணம்,
பொருத்துக்கள் இடல் மற்றும் வீதி இருக்கைகள் அமைத்தல் போன்ற
வேலைத்திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments