Subscribe Us

தக்காளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய நினைத்தேன்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் நிதினி


இந்தியாவிடம் தொடரை இழந்தவுடன் தக்காளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய நினைத்தேன் என ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மக்காய நிதினி தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணி டோனி தலைமையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணியில் கேப்டன் டோனியை தவிர அனைவரும் இளம் வீரர்கள், ஆனால் ஜிம்பாப்வே அணியை பொறுத்த வரையில் அனைவரும் சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றவர்கள். ஜிம்பாப்வே அணியின் தோல்வியை சற்றும் எதிர்பாராத அந்த அணியின் பயிற்சியாளர் நிதினி விரக்தியில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “நான் ஏறக்குறைய தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டேன். மைதானத்தின் வெளியில் தக்காளி மரம் ஏதேனும் இருந்திருந்தால் அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பேன். எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆட்டத்தை எளிதில் கணித்திருக்க முடியும். ஆனால், நாங்கள் அதை செய்ய தவறிவிட்டோம்” என்று தனது அதிருப்தியை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். 

அனுபவம் வாய்ந்த வீரரான மக்காய நிதினி, தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments