ஆர்லண்டோ இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது தனது உயிரை பணயம் வைத்து 70 பேரை காப்பாற்றிய இந்திய வம்சாவளி கடற்படை வீரர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் புகுந்த ஓமர் மதீன் (29) என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக்கொன்றான். மேலும் இத்தாக்குதலில் 53 பேர் காயம் அடைந்தனர்.
ஆனால் இந்த தாக்குதலின் போது கேளிக்கை விடுதிக்குள் சிக்கிய 70 பேரின் உயிரை ஒரு வாலிபர் தைரியமாக செயல்பட்டு காப்பாற்றினார்.
அவரது பெயர் இம்ரான் யூசுப் (24). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடற்படையின் முன்னாள் வீரர்.
இவர் துப்பாக்கி சூடு நடந்த விடுதியில் காவலாளியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று வெளியே இவர் பணியில் இருந்தார். அப்போது விடுதிக்குள் 4 தடவைக்கு மேல் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை அறிந்த அவர் உள்ளே சென்றார். அங்கு கூட்டத்தினர் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கு மிங்கும் ஓடினர். அக்கூட்டத்தில் சிக்கி கொண்ட இம்ரான் யூசுப்புக்கு ராணுவத்தில் அளித்த பயிற்சி அப்போது கை கொடுத்தது.
உடனே தாவி பாய்ந்து சென்ற அவர் அங்குள்ள பின்புற கதவை திறந்து விட்டார். பின்னர் ஒருவர் பின் ஒருவராக 70 பேரை வெளியேற்றி அவர்களின் உயிரை காப்பாற்றினார்.
அவர் மட்டும் அன்று இல்லையென்றால் உயிரிழப்புகள் 100-ஐ தாண்டியிருக்கும. தனது உயிரை பணயம் வைத்து வீரதீரத்துடன் புத்திசாலி தனமாக செயல்பட்ட இம்ரான் யூசுப்பை பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாராட்டினர்.
இம்ரான் யூசுப்பின் குடும்பம் 4 தலைமுறைக்கு முன்பே இந்தியாவில் இருந்து கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். அவரது தாத்தா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவரது பாட்டியும், தாயாரும் இந்து மதத்தை தழுவுகின்றனர். இம்ரான் யூசுப்பும் இந்து மதத்தை கடைபிடிப்பதாக அமெரிக்க பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.


0 Comments